“2026 சட்டமன்றத் தேர்தலில் பண்ணையார் அரசியலை ஒழிப்போம்” – விஜய் பேச்சு
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் 2ஆம் ஆண்டு விழா மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியின் அரங்கத்தில் நடைபெற்றது. அவ் விழாவில் சிறப்புரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பண்ணையார் அரசியலை ஒழிப்போம் என்று உரையாற்றினார்.
சில மணித்துளிகள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்தத பிரசாத் கிஷோர் அவர்களுக்குப் புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் உரையாற்றி பின்னர் தன் பாணியில் என் நெஞ்சில் குடியிருக்கும்… என்று தொடங்கி, உரையாற்றத் தொடங்கினார் கட்சியின் தலைவர் விஜய். அவர் ஆற்றிய உரையின் விவரம்:
“நாம் இங்கே வளரும் புதிய அரசியல் கட்சி. தமிழகத்தில் 1967இல் மாற்றம் நிகழ்ந்தது போல, 2026 சட்டசபை தேர்தலில் வரலாறு படைக்கப் போகும் கட்சி. இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான். இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றைப் பார்க்கலாம். யார், யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்றே தெரியாது. எப்போது ஆதரிப்பார்கள் என்றே தெரியாது. அதைக் கணிக்கவே முடியாது. இதில் நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுகிறார்கள். அதனால் யார் வேண்டும் ஆனாலும் அரசியலுக்கு வரலாம்.
மக்களுக்குப் பிடித்துப்போன ஒருவர் வந்தால் ஒரு சில பேருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். இதுவரைக்கும் நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டாங்க, இவர் சொல்வது எல்லாம் மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, என்று அப்படி ஒரு குழப்பம் வரும்.அந்த குழப்பத்தில்தான் வர்றவன், போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று பேச ஆரம்பிப்பாங்க. இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் நமக்கு எதிராக அப்படிப் பேசுகிறார்களே அது போல.
இதோ முதலாம் ஆண்டை கடந்து 2ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். கட்சிக்குப் பலமே அடிப்படை கட்டமைப்புதான். இதைப் பலப்படுத்த நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே உள்ளனர் எனப் புகார். அப்படி இருந்தால் என்ன? அண்ணா, எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்தபோது அவர்களின் பின்னால் இருந்தது இளைஞர்கள். அவர்களால் 1967, 77இல் வரலாறு நிகழ்ந்துள்ளது. நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி. ஆகவே நமது கட்சியினரும் எளிய நிர்வாகத்தினராகவே இருப்பார்கள்.
நாம் ஒன்றும் பண்ணையார்கள் அல்ல. இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களே இருக்கின்றனர். நாட்டோட நலன், மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் எப்போது பார்த்தாலும் பணம். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட பண்ணையார்களை நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். அதை ஜனநாயக முறையில் செய்ய 2026இல் இறங்கப் போகிறோம். விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். அப்போது தமிழக வெற்றிக் கழகம், முதல் சக்தியாக, முதன்மை சக்தியாக ஆகும்.
இப்போது மும்மொழி கொள்கை என்று ஒரு புதிய பிரச்னை. இதை இங்கே செயல்படுத்தவில்லை என்றால் கல்வி நிதி மாநில அரசுக்குத் தரமாட்டாங்களாம். எல்கேஜி, யுகேஜி பசங்கள் சண்டைபோல உள்ளது. கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை வாங்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் இவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு செட்டிங் செய்து ஹேஷ்டேக் செய்து விளையாடுகின்றனர். அதாவது இவர்கள் அடித்துக் கொள்வதுபோல் அடித்துக் கொள்வார்களாம். நாம் நம்ப வேண்டுமா? வாட் ப்ரோ இது வெரி ராங் ப்ரோ.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு நடுவில் நம்ம பசங்க உள்ளே புகுந்து சம்பவம் செய்து வெளியே வந்துவிடுகின்றனர். மக்களுக்கு இதை எல்லாம் நாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது இல்லை. அது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இது சுயமரியாதை ஊரு. ஆனால் சுயமரியாதை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எல்லா மொழிகளையும் மதிப்போம்.
தனிப்பட்ட முறையில் யார் வேண்டும் ஆனாலும் எந்த மொழியைப் படிக்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகக் கல்விக் கொள்கை கேள்விக்குறியாக்கி அரசியல் ரீதியாக வலுக்கட்டாயமாகத் திணித்தால் எப்படி? நாம் பொய் பிரசாரங்களைத் தள்ளி வைத்துவிட்டு உறுதியாக எதிர்ப்போம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்று உரையை நிறைவு செய்தார்.
— ஆதவன்.