இனி தைரியமாக தரையிறங்கலாம் !
சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச்-8 ஆம் தேதி, மும்பையில் இருந்து கிளம்பிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரையிறங்கும்போது, ஓடுபாதையில் உராய்ந்த படி ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நல்வாய்ப்பாக, பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், விமானத்தின் இறக்கைப் பகுதி தேய்மானம் அடைந்தது.
இந்த சம்பவத்தையடுத்து, விமான போக்குவரத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ரன்வேக்களிலும், விமானங்கள் வந்து தரையிறங்கும் போது, கிரீப்பிங் என்ற உராய்வு தன்மை குறைவாக இருப்பதால், தரையிறங்கும் விமானத்தின் சக்கரங்கள், சறுக்கிக் கொண்டு ரன்வேயில் ஓடுவதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

பொதுவாக, விமானங்கள் ரன்வேயில் தரையிறங்கிஓடும் போது, விமானத்தின் டயர்கள் ரன்வேயில் உராய்ந்து, டயரில் உள்ள ரப்பர் பிசுறுகள், ரன்வேயில் படிந்து விடும். இவ்வாறு ரன்வேயில் படியும் ரப்பர் பிசிறுகளை வாரத்தில் ஒரு நாள், எந்த இடத்தில் எல்லாம் அதிகமாக சேர்ந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு, சிறப்பு கருவி பொருத்தப்பட்டுள்ள உராய்வு தன்மை பரிசோதனை வாகனத்தை, ஓடுபாதையில், 65 முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி, ரப்பர் திண்டுகளை கண்டுபிடிப்பார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால், அதற்கான வாகனம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களின் விமான நிலையங்கள் அனைத்திற்கும் சேர்த்து, 2 வாகனங்கள் மட்டுமே இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில், மட்டும் நாளொன்றுக்கு 400 -க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்கள், மற்றும் சரக்கு, தனி விமானங்கள் அனைத்தும் சேர்த்து 450க்கும் மேலான விமானங்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில், இந்த சம்பவத்தையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ரன்வே பராமரிப்பு பணிக்காக, ரூ.1.31 கோடி மதிப்பீட்டில், ரன்வே பராமரிப்பு அதிநவீன வாகனத்தை, இந்திய விமான நிலைய ஆணையம் ஒதுக்கி உள்ளது.
— கலிங்கா இளவழகன்.