“அமிர்தம் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? நான் ஒருமுறை சாப்பிட்டு இருக்கிறேன்” என்பார் மருத்துவர் ரமேஷ்.
Kauvery Cancer Institute App
“அமிர்தமா? எங்கு? எப்போது?” என நம் புருவம் உயர்வதை உணர்ந்தவராய் அவரே தொடர்கிறார்.
1998 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரம். என்னுடைய கிளினிக்கில் பயங்கரக் கூட்டம். அன்றைய தினம் மனதுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது. ஏதோ தவறாக நடப்பது போல உள்ளூரத் தோன்றியது. வெளியே சென்று பார்த்தேன்.
வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்
35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் படுத்திருக்கிறார். அருகில் ஒரு பழங்குடிப் பெண் அமர்ந்திருந்தார். “ஐயா! நாங்க தூமனூர்ல இருந்து வரோம். இவர பாம்பு கடிச்சுருச்சு!” என்றார். பதறிப்போய் அவரைப் பார்த்தால், ஒரு நாய் காலைக் கடித்துக் குதறியது போல இருந்தது. ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது 108 ஆம்புலன்ஸ் வசதியெல்லாம் இல்லை. போதிய போக்குவரத்து வசதியும் இல்லை. என்னுடைய ஜீப்பில் அவரை ஏற்றிக்கொண்டு, அடித்துப் பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு நான் திரும்பி வந்துவிட்டேன்.
கோவை மருத்துவர் ரமேஷ்
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நபர் என் கிளினிக்குக்கு வந்து, “சார் என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டார்.
“தெரியவில்லையே” என்றேன்.
“நான்தான் அந்தப் பாம்புக்கடி வாங்கினவன்” என்று சொல்லி, எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஒரு பாட்டில் மலைத்தேனைக் கொடுத்து விட்டுச் சென்றார். அந்தத் தேனை கொஞ்சம் என் கையில் ஊற்றி சுவைத்தேன். அன்றுதான் உணர்ந்தேன் அமிர்தம் எப்படி இருக்கும் என்று.
இப்படி எளிய மக்களின் துயர்துடைத்து தம்மை அடையாளப்பட்டவர் மருத்துவர் ரமேஷ். கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர். மனைவி ஷோபனா மற்றும் மகள் சாந்திதேவியுடன் பொருளுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வந்த இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருபவர்.
மகள் ஆனைகட்டியில் 11 ஆம் வகுப்பு படிக்கிறார். பள்ளியிலிருந்து தன் மகளை தனது இரு சக்கர வாகனத்தில் ஷோபனா அழைத்து வந்தபோது, ஜம்புகண்டி என்ற இடத்தில் தாறுமாறாக வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு உயிருக்குப் போராடினார். இந்த விபத்து குறித்து ரமேஷ்க்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார். கண்ணெதிரே இரத்த வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ் கதறினார். உடனடியாக மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
மனைவியுடன் கோவை மருத்துவர் ரமேஷ்
அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..
விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகிலேயே ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்த டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வருபவர்களால் ஏராளமான விபத்துகள் நடக்கிறது என்பது ஜம்புகண்டி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி, ஜம்புகண்டி மக்கள் போராடிவருகிறார்கள். ஆனால், அரசின் காதுகளுக்கு அந்த மக்களின் குரல் கேட்கவில்லை.
இந்தச் சூழலில்தான், ஷோபனா விபத்துக்குள்ளானார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் ரமேஷிடம், ‘விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் போதையில் இருந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில்தான் குடித்திருக்கிறார்கள். இங்குள்ள டாஸ்மாக்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சிலர் வெடித்தனர்.
உயிருக்குப் போராடும் தனது மகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, தன் மனைவி சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடினார் மருத்துவர் ரமேஷ். கூடங்குளம், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எனத் தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களில் தனது ஆத்மார்த்தமான பங்களிப்பைக் கொடுத்துள்ள மருத்துவர் ரமேஷ், தனது மனைவியின் நிலை இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து, டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் போராட்டத்தில் இறங்கினர்.
மதுவால் இனியொரு குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
காவல்துறை அதிகாரிகள் மருத்துவர் ரமேஷிடம் சமரசம் பேசினர். ஆனால் ரமேஷ் உறுதியுடன் அமர்ந்திருந்தார். ‘விபத்துக்குக் காரணமான டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும். நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரையும் அனுப்பப்படும். அவர் ஏற்றுக்கொண்டால் நிரந்தரமாக மூடப்படும்’ என்று கோவை வடக்கு தாசில்தார் உறுதியளித்த பிறகே, தனது போராட்டத்தைக் கைவிட்டார் ரமேஷ்.
ஷோபனாவின் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. நல்லடக்கம் மனைவியின் சடலத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள மயானத்தில் பழங்குடியின முறைப்படி அடக்கம் செய்தார். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி, எவர் உயிரையும் எவரும் பறிக்கக்கூடாது என்பதற்காகவே என் மனைவியை இங்கு புதைத்துள்ளேன் என்று கூறினார். இதையடுத்து அதற்கடுத்த நாட்களிலேயே குறிப்பிட்ட மதுக்கடை மூடப்பட்டது.
மனைவி உயிரிழக்கக் காரணமான டாஸ்மாக் கடையை போராடி மூட வைத்ததுடன், அவரது உடலை, விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே புதைத்து நம் இதயத்தை புரட்டி போட்ட மருத்துவர் ரமேஷின் வாழ்க்கை அடுத்திருப்பவர் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளாலே நிறைந்திருக்கிறது.
தம் சுய இன்ப, துன்பங்களை நினைத்து மட்டும் வாழாமல் பிறர் வாழ துணை செய்யும் மனிதர்களும் இத்தகைய அரச உள்ளத்திற்கு நிகரானவர் என்கிறார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்கள். அந்த உள்ளத்திற்கு இலக்கணமானவர் கோவை மருத்துவர் ரமேஷ்.
*
–
முனைவர் ஜா.சலேத்
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்