ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோவிலில் இனவெறி வாசகம்! மர்ம நபர்கள் அட்டூழியம்!
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த சரண்ப்ரீத் சிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது மெல்போர்னின் போர்னியா நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்டை கொண்டு இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்.
மேலும், இதைபோல் அதே பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இக்கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல், எங்களது அடையாளம், வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டதாக உணர்கிறோம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மு.குபேரன்