நீதிமன்ற மாண்புக்கும் நீதித்துறை கண்ணியத்திற்கும் வந்த சோதனை !
வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நடவடிக்கையின் நோக்கம் என்ன?
திறந்த நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு நீதிபதியின் முன்னால் வாஞ்சிநாதன் அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்.
பேராசிரியர் நியமனம் தொடர்பான வழக்கின் எண்ணைக் குறிப்பிட்டு அழைத்துவிட்டு, அவ்வழக்கிற்குத் தொடர்பே இல்லாத கேள்விகளைக் கேட்டது மட்டுமல்லாமல், பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில் உடனடியாக உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

வாஞ்சிநாதன் அவர்கள் என்ன பதில் சொல்லுவார் என்பதையே அப்போது தான் விசாரிப்பவர்கள், அடுத்த நிமிடமே இத்தனை விரைவாக உத்தரவு பிறப்பித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசரத்திற்கு என்ன காரணம்?
“When you expose your own life to public knowledge, you expose yourself to criticism, particularly in today’s age of social media. But so be it. My shoulders are broad enough to accept all the criticism that we have faced. I’m probably one of the most trolled individuals and judges across the system…On a lighter vein, I am just wondering what will happen from Monday because all those who trolled me will be rendered unemployed!”என்றாரே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள்.
“ஒரு நீதிபதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்திவிட்டால், அதன் மீதான விமர்சனங்களையும் ஏற்றுத் தான் நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். எனது தோள்கள் பெரியது. எவ்வளவு விமர்சனங்களையும் நான் தாங்கிக்கொள்ளுவேன். இந்த அமைப்பிலேயே அதிகம் கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளானவன் நானாகத் தான் இருப்பேன். அதேபோல கொஞ்சம் இலகுவாகச் சொல்லுவதென்றால், என்னை விமர்சித்தவர்கள் எல்லாம் திங்களில் இருந்து (அவரது பதவி முடிவதால்) வேலையற்றுப் போவார்கள்” என்று தனது பணி நிறைவு உரையில் பேசினாரே? அந்தப் பக்குவத்தை ஜி.ஆர்.சாமிநாதன் அவர்கள் வெளிப்படுத்த முடியாதா?
பக்குவத்தை விட்டொழிப்போம். நீதிமன்ற மாண்பினைக் காக்க முடியாதா? இந்த அவசரம் பல வழக்குகளில் பிரதிபலிக்கிறது என்ற விமர்சனத்தைத் தாங்க முடியாதா? அப்படித் தாங்க முடியாதவர்கள் அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கரே பார்க்காத கோணங்களில் பார்த்து பொதுவெளியில் பேசுவானேன்? அந்த அரசமைப்பை விட்டுவிட்டு மற்றவற்றைத் துணைக்கு அழைப்பானேன்?
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான இவ்வழக்கு நீதிமன்ற மாண்புக்கும் நீதித்துறை கண்ணியத்திற்கும் ஊறுவிளைவிப்பதாக அமைந்துள்ளது.
— இந்திரகுமார் தேரடி , ஊடகவியலாளர்