3 பெண் குழந்தைகள் கொடூர கொலை ! தந்தை தற்கொலை !
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கோவிந்தராஜ், இவர் ரிக் வண்டியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி 26 வயதான பாரதி. இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். இவர்களது மகள்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். மேலும் கோவிந்தராஜ்க்கு வீடு கட்டிய வகையில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதியும் மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார். இதனால் கோவிந்தராஜ் நீண்ட நாட்களாக கடன் பிரச்னையை நினைத்து வருத்தத்தில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு உணவு உண்டபின், அவரது மனைவி பாரதி மற்றும் 1 வயது கை குழந்தை அனிஸ்வரனுடன் படுக்கையறையில் உறங்கச் செல்ல, கோவிந்தராஜ் மற்றும் அவரது 3 பெண் குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் உறங்கியிருக்கிறார். அனைவரும் உறங்கிய பின்னர் திடீரென்று அதிகாலை 3 மணி அளவில் கோவிந்தராஜ் தனது மனைவி உறங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ஹாலில் படுத்திருந்த தனது 3 பெண் குழந்தைகளை கொடுவாளால் தலைப்பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்து, பின்னர் அவரும் அருகாமையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அப்போது குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி பாரதி கதவை திறக்க முயன்றபோது வெளியே பூட்டு போட்டு இருப்பதை கண்டு அறைக்குள் இருந்த குத்து விளக்கை எடுத்து கதவை உடைத்து வெளியே வந்து பார்த்தார். அங்கு குழந்தைகள் மூன்றும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர் அருகில் கணவர் கோவிந்தராஜ் வாயில் நுரை தள்ளிய படி இறந்து கிடந்தார். அதன் பிறகு பாரதி தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி கதறி அழுதிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாமக்கல் எஸ்பி விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பெற்ற தந்தையே தனது மூன்று பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
— மு. குபேரன்.