ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !
ஊழல் வழக்கில் முன்னாள் திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய திலகமணி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்ப குளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதி MPKBY அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவானது பரிந்துரை செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த 02.08.2010 அன்று, அந்த மனு தொடர்பாக புகார்தாரர் சரஸ்வதி அப்போது பணியிலிருந்த திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) திலகமணி (தற்போது வயது 62) என்பவரை சந்தித்து மனு தொடர்பாக கேட்டபோது, புகார்தாரர் சரஸ்வதியிடம் சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க ரூ.1,000/- ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி கடந்த 02.08.2010 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அப்போது, புகார்தாரர் சரஸ்வதியிடமிருந்து எதிரி திலகமணி லஞ்சப்பணம் ரூ.1000/- கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து 18.09.2025-ந் தேதி எதிரி திலகமணி-க்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
தண்டனை விவரம் :
* ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000/-ம் அபராதம். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை.
* பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000/-ம் அபராதம். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை.
மேற்படி தண்டனையை ஏகபோக காலத்தில் அனுபவிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சாட்சிகளையும் சான்றாவணங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். போலீசார் தரப்பு சாட்சியங்கள் மற்றும் அரசு வழக்குரைஞரின் வாதங்களின் அடிப்படையில், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதிபதி புவியரசு தீர்ப்பளித்திருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.