பாத்ரூம் போறப்ப கூடவே பையையும் தூக்கிட்டா போகமுடியும் ? அநியாயம் பன்றீங்களேடா !
கடந்த 16.9.25 இரவு 12:30 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த நகை வியாபாரி சீனிவாசன் என்பவரிடம் வேலை பார்க்கும் சங்கர் என்பவர் கோயம்புத்தூரில் இருந்து சுமார் மூன்று கோடி மதிப்புள்ள சுமார் மூன்று கிலோ தங்க நகைகளை பாண்டிச்சேரியில் உள்ள நகைக்கடைக்கு கொடுப்பதற்காக ஆம்னி பேருந்தில் எடுத்து வந்துள்ளார். வழியில் சங்ககிரி டோல்கேட் அருகில் உள்ள ஒரு டீ கடையில் பேருந்து நின்ற போது சங்கர் தான் கொண்டு வந்த தங்க நகை பையை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த பெயர் விலாசம் தெரியாத ஒரு நபர் சங்கர் வைத்து விட்டு சென்ற நகை பையை திருடி கொண்டு சென்றுவிட்டார்.

இது தொடர்பாக சங்ககிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் IPS அவர்களால் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் கோயம்புத்தூர், காந்திபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (57) என்பவரின் திட்டத்தின் படி கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சிலம்பினாதன் பேட்டை பகுதியைச் சேர்ந்த மெரிஜா (28) என்பவர் அதே பேருந்தில் பயணம் செய்து நகை பையை திருடி எடுத்துச் சென்று பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளதை தனிப்படையினர் கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து பாலசுப்பிரமணியன் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த திருடப்பட்ட மொத்த நகைகளையும் மீட்டுள்ளனர்.
திருட்டு போன நகைகளை இரண்டு தினங்களுக்குள் கண்டுபிடித்து எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்த தனிப்படையினரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.