வறண்டு கிடக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி !
பஞ்சத்தால் வாடிய மக்களின் வாட்டம் போக்க அரசால் உருவாக்கப்பட்ட ஏரி, அதிகாரிகளின் அலட்சியத்தால் வறண்டு கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் அமைந்துள்ளது பஞ்சம்பட்டி ஏரி. இதன் பரப்பளவு 1300 ஏக்கர். உயரம் 44 மீட்டர், நீளம் 2050 மீட்டர். இந்த ஏரி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1837 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 40,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியளிக்க முடியும்.
கரூர் மாவட்டம், கடவூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மழை நீர், பால விடுதி, தரகம்பட்டி, பு. உடையாபட்டி உள்ளிட்ட பல ஊர்களைத்தாண்டி பஞ்சம் பட்டி ஏரியை அடைகிறது. இது வழியில் 24 ஏரிகளையும் 124 குளங்களையும் நிரப்பிய பின் பஞ்சப்பட்டி ஏரியை அடைகிறது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் குடமுருட்டி ஆறு வழியாகக் காவிரி ஆற்றில் வந்து கலக்கிறது.

ஏரியின் அவல நிலை
ஒரு காலத்தில் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக இந்த ஏரி கரு வேல மரங்கள் மண்டிய நிலையில் வறண்டு கிடக்கிறது.
இந்த ஏரிக்கு நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்திலிருந்து காவிரி நீரைக் கொண்டு வர 1962 இல் திட்டமிடப்பட்டது. எனினும் அது நிறைவேற்றப்படவில்லை.
ஏரியிலிருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மாயனூர் தடுப்பணையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த போதும் அது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மாயனூர் தடுப்பணையை விட இந்த ஏரி 27.4 மீட்டர் உயரத்தில் இருப்பதால் நீரை மாயனூர் கதவணையிலிருந்து கொண்டு வர இயலாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி என்ற புகழ் இருந்தும் எந்தப் பயனும் இல்லை. இந்த ஏரி நிரம்பினால் நூற்றுக்கணக்கான ஊர்களில் நிலத்தடி நீர் உயரும். 40,00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குளித்தலை பகுதி மக்கள் வளம் பெறுவர். அரசு இதில் கவனம் செலுத்துமா..?
— வழக்கறிஞர் தமிழகன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.