நாகணவாய் புள் … அதாங்க நம்மூர் மைனா ! பறவைகள்பலவிதம்- தொடர் -21
மைனா என்றே நாம் சொல்லிப் பழக்கப்பட்ட இந்த பறவையின் அழகு தமிழ் பெயர் நாகணவாய் புள். ஆம் சங்க இலக்கியங்களில் அப்படித்தான் பதிவு செய்துள்ளார்கள். நாகணம் என்றால் மஞ்சள் நிறம் கொண்ட மரம் என்கிறது தமிழ் அகராதி. அதாவது நாகணமரம் போன்ற நிறமுடைய வாயினைக் கொண்டது என பொருள். புள் என்றால் தமிழில் பறவை என்று அர்த்தம்.
வடமொழியில் முனியா என்று சொல்லும் சொல்லையே ஆங்கிலேயர்கள் காலத்தில் பதிவு செய்ய அதனையே நாம் இன்று வரை மைனா என்று அழைத்து வருகிறோம்.

இப்போது காகத்திற்கு அடுத்தபடியாக நொறுக்குத் தீனிகளை தேடி தேடி தின்பவன் இவனாகத்தான் இருக்கும். பார்க்கும் பல பொது இடங்களில் மிக்சர், காராசேவு, பொரித்த சோளத்திற்கு இவன் பண்ணும் அடிதடிகளை சொல்லி முடியாது. இந்தியாவில் காகங்களை விட, அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் வாழும் பறவை இதுதான். சூழ்நிலை சரியாக அமைந்து விட்டால் இரண்டே வருடங்களில் இவைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவே முடியாது. கிடைக்கும் பொந்துகளில் எல்லாம் கூடமைத்து குடி கொண்டு விடுவார்கள். இவனை பற்றி சரியாக தெரியாமல் கையை சுட்டுக் கொண்ட தேசம் ஆஸ்திரேலியா. பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த நினைத்து இவனை இந்தியாவில் இருந்து அந்த தேசத்தில் அறிமுகப்படுத்த ஒருவழியாக வெட்டுக் கிளிகள் ஒழிந்தது. ஆனால் இவனின் அசுர பசிக்கும், இனப்பெருக்கத்திற்கும் வரையறை இல்லாமல் போக அந்நாட்டு உயிரினங்கள் பாதிப்பு அடைய துவங்கின. எனவே, இவற்றை ஆஸ்திரேலிய அரசு, அழிவு செய்யும் உயிரினமாக அறிவித்து விட்டார்கள்.
சரி மைனாக்கள் என்றாலே, எங்கும் நிறைந்து காணப்படுகிற, இப்போது கிட்டத்தட்ட காக்கைகளுக்கு சமமாய் எண்ணிக்கையிலும், செயலிலும் இருக்கும், நாகணவாய்ப்புள் என்கிற சாதாரண மைனாதான் நினைவுக்கு வரும். அதற்கு எங்கள் பகுதியில் என்ன பெயர் தெரியுமா?
அழுகவண்ணான் குருவி (அளுகனாங்குருவி). ஏன் இதற்கு இந்தப் பெயர் என இதுவரை தெரியவில்லை. இவற்றுற்கு மிகப் பிடித்த உணவு வெட்டுக்கிளிகள். புல் தரையில் வெட்டுக்கிளிகளை தேடி நடந்துகொண்டே இருக்கும்.
(தொடரும்)
ஆற்றல் பிரவீன்குமார்,
சமூக செயல்பாட்டாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.