வாகனம் நிறுத்தியதால் நேர்ந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை !
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், மாயனூர் காவல் நிலைய சரகம், பிச்சம்பட்டி என்ற ஊரில் கடந்த 04.07.2021 ஆம் தேதி கட்டளை மேட்டுவாய்க்காலில் பொதுபணித்துறை மூலம் தடுப்பு சுவர் கட்டும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கும், மணவாசியை சேர்ந்தவர்களுக்கும் இடையே பிச்சம்பட்டி பாம்பாலம்மன் கோவில் அருகில் சாலையில் இருசக்கர வாகனம் நிறுத்தியது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து 05.07.2021 ஆம் தேதி காலை 08.30 மணிக்கு முன்பு மேற்படி சம்பவம் தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு, பிச்சம்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 35/2021 வருடம்) என்பவரை மணவாசியை சேர்ந்த 1) ராஜதுரை (போக்கிரி வரலாற்றுதாள் குற்றவாளி), 2) தர்மதுரை, (வயது 23/2021 வருடம்) (போக்கிரி வரலாற்றுதாள் குற்றவாளி) 3) அபிஷேக் (எ) வேல்முருகன், (வயது 24/2021 வருடம்) உட்பட 14 நபர்கள் அருவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் 10.01.2022 ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று, இன்று 19.01.2026 ஆம் தேதி இவ்வழக்கில், எதிரி 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ. 1,00,000/- அபராதமும் விதித்து மாண்பமை கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற 11 எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர். மேற்படி தண்டணை பெற்ற மூன்று எதிரிகளை துப்பாக்கி ஏந்திய போலீஸார் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் வருடம் 27 கொலை வழக்குகள் தாக்கலானது. ஆனால் 2025 ஆம் ஆண்டு 65 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததன் மூலமும், பல்வேறு நடவடிக்கைகள் மூலமும் 2025 வருடம் 16 கொலை வழக்கு சம்பவம் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டைவிட 40% கொலை குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே ஆண்டில் 07 கொலை வழக்குகளில் சிறப்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டணை பெறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கடந்த 2024 ஆண்டு 03 வழக்குகளில் மட்டுமே தண்டணை பெறப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 45 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2025 ஆண்டு 65 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் கூடுதலாக 20 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.











Comments are closed, but trackbacks and pingbacks are open.