அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு !
உலக சுகாதார நிறுவனத்தை விட்டு அதிகாரப் பூர்வமாக விலகியிருக்கிறது அமெரிக்கா…
ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபின் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்றாக அமெரிக்கா – WHO World Health Organisation எனும் உலக சுகாதார நிறுவனத்தை விட்டு வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.
சட்ட திட்டங்களின் படி ஒரு வருடம் நோட்டீஸ் காலம்.
அது இன்றுடன் முடிந்திருக்கிறது.
ஜனவரி 22, 2026 அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ வெளியேற்றத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த வெளியேற்றத்தினால் உலக சுகாதார நிறுவனத்திற்கும் இதர உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?
உலக சுகாதார நிறுவனம் என்பது உலகின் பல நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு.
இதன் வழியாக
– மலேரியா, போலியோ, டெங்கு, எம் பாக்ஸ், மெர்ஸ், கோவிட் போன்ற தொற்று நோய்களை உடனே இனங்கண்டு கட்டுப்படுத்துதல்
– பெருந்தொற்று காலங்களின் போது பன்னாட்டு மருத்துவ அறிஞர்கள் ஒன்று கூடி திரட்டும் அறிவுக் களஞ்சியமாக செயல்படுவதல்
– சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்
என்று உலக சுகாதார நிறுவனம் 1948 முதல் செயல்பட்டு வருகிறது.
இதில் உலகின் வல்லரசு நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அவற்றால் இயன்ற நிதியைக் கொடுத்து அந்த நிதி மூலம் மேற்கூறிய பொது சுகாதாரம் சார்ந்த நற்காரியங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, உலக சுகாதார நிறுவனத்தால் நன்மையடைவது உலகின் ஏழை நாடுகள் மற்றும் நலிந்த நாடுகளாகும்.
இந்த அமைப்புக்கு சுமார் 20% நிதியை வழங்கி வந்த நாடு தான் அமெரிக்கா.
2022-2023 ஆண்டில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்த நிதி 1.28 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 1,17,67,42,40,000 இதன் மூலம் ஏழை ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் கட்டுப்பாடு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுத் திட்டம் , வளரும் நாடுகளில் காச நோய் , மலேரியா கட்டுப்பாடு ஆகிய பல விஷயங்கள் நடந்து வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் செய்யும் செய்து வந்த அனைத்து நல்ல விஷயங்களிலும் அமெரிக்காவின் பெரும் பங்கு இருந்து வந்தது.
உலகம் முழுவதும் இண்ஃப்ளூயன்சா வைரஸ் கண்காணிப்பு மையங்கள் , பெருந்தொற்று தோன்றும் இடங்களை கண்டறிந்து உடனே செயலாற்றுதல் ஆகிய பல விஷயங்கள் அமைதியாக நடந்து வருகின்றன.
இந்த நேரத்தில் தான் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தை விட்டு வெளியேறி இருக்கிறது.
இதற்குக் காரணமாக அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் கூறுவது கோவிட் பெருந்தொற்றைக் கையாள்வதில் உலக சுகாதார நிறுவனம் தோற்று விட்டது.
சீனாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு பாரபட்சமாகவும் உ.சு.நி நடந்து கொண்டது பெருந்தொற்று என்று அறிவிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக பல லட்சம் அமெரிக்கர்களையும் ட்ரில்லியன் கணக்கில் டாலர்களையும் அமெரிக்கா இழந்து விட்டது.
உலக சுகாதார நிறுவனம் அது துவங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து விலகி அலைந்து கொண்டிருக்கிறது.
மேலும், காலத்திற்கு ஏற்றவாறு புதுமையைப் புகுந்தவில்லை. செலவிடப்படும் நிதிக்கு முறையான கணக்கு வழக்கு இல்லை. ஒளிவு மறைவற்ற நேர்மையான நிர்வாகம் இல்லை.
அது போக இத்தனை கோடிக்கணக்கில் வாரி இரைத்தும் இதுவரை ஒரு அமெரிக்கர் கூட உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை என்று பல காரணங்களைக் கூறி விலகல் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் காரணமாக உலக சுகாதார நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது .
இந்த ஆண்டின் மத்தியில் சுமார் கால்வாசி ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏழை நாடுகளிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகளிலும் நடந்து வந்த எண்ணற்ற குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து / தடுப்பூசி/ தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டங்கள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளில் நடத்தி வரும் மருத்துவ அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நிதிப் பங்களிப்பு வெகுவாகக் குறையவுள்ளது.
நிலவி வரும் கால மாற்ற சூழ்நிலை காரணமாகவும், உலக மயமாக்கலின் தன்மையாலும் பெருந்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில், சர்வதேச பிராந்திய அளவிலான ஒருங்கிணைப்பு – ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படும்.
பெருந்தொற்று காலங்களில் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலையை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கி வைத்திருந்தது. இனி அது போன்ற நடவடிக்கைள் நடப்பது கடினமாகி விடும். இதனால் பணம் படைத்த வல்லரசு நாடுகளுக்கு மட்டுமே நோய் தடுப்பு நடவடிக்கைகள் கிடைக்கும்.
அமெரிக்காவைப் பொருத்தவரை அதற்கு இழப்பு எப்படி இருக்கப்போகிறது என்றால் சர்வதேச சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்தில் இருந்து அது தனித்துவிடப்படும் சூழ்நிலை உருவாகலாம்.
மேலும், அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் பலரும் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய மருத்துவ அறிவியல் சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் முடிவுகள் எடுக்கும் துறைகளில் பணியாற்றி வந்தனர் தற்போது அவர்கள் பணியை இழப்பர். கூடவே தங்களது ஆராய்ச்சிப் பணியிலும் அவர்கள் சுணக்கம் காண உள்ளனர்.
அமெரிக்கா தனியாக ஒரு சர்வதேச சுகாதார கூட்டமைப்பை உருவாக்க உள்ளதாகக் கூறியிருக்கிறது. அதற்கு எத்தகைய ஆதரவு கிடைக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

என்னைப் பொருத்தவரை, அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருப்பது அதிபர் ட்ரம்ப் அவர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
இது போன்ற முடிவால், சர்வதேச நாடுகளும் குறிப்பாக ஏழை நாடுகளில் வாழும் குழந்தைகளும் மக்களும் அவதிப்படப் போகிறார்கள்.
இது மூலம் பணத்தை மிச்சப்படுத்தும் அளவுக்கு அமெரிக்க நாட்டின் நிதி நெருக்கடி நிலை இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
நிச்சயம் இந்த முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் நிகழும் சூழ்நிலைகள் அப்படி ஒன்று சமீபத்தில் நடக்காது என்றே காட்டுகின்றன.
தான் நின்று உருவாக்கிய அமைப்பில் இருந்து தான் இதுவரை செய்து வந்த பல நன்மையான காரியங்களில் இருந்து சர்வதேச நாடுகளின் சுகாதாரம் சார்ந்த கூட்டமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
இதுவரை இது போன்ற 66 சர்வதேச கூட்டமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. குறிப்பாக ஏழை நாடுகளின் குழந்தைகள் படிப்புக்கும் ஊட்டச்சத்துக்கும் உதவும் யுனிசெஃபில் இருந்தும் விலகியுள்ளது.
இதற்கான விலை என்ன என்பதை காலம் தான் முடிவு செய்யும். இந்த அமெரிக்காவின் முடிவு என்பது உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை








Comments are closed, but trackbacks and pingbacks are open.