அது என்ன வாக்காளரியல் ? ஐ.ஜி. சொன்ன மெசேஜ் !
எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற கருத்தரங்கம் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் அரசியலமைப்பு சட்ட பேராசிரியர் ஆர். ராஜா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி. வி. பாலகிருஷ்ணன் சர்வதேச வாக்காளரியல் கல்வி மையத்தின் இணையதளத்தை (voterology.in) தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது
1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல் (Voterology), வாக்காளரிலிசம் (Voterolism) என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தற்போதைய உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ். அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வாக்காளரியல் பாடத்தையும் வாக்காளரிலிச தத்துவத்தையும் அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும் என ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வாக்கின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு வாக்காளரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்கள் விழிப்புணர்வு உடைய மக்களாக இருந்தால் மட்டுமே சிறப்பான ஆட்சி சாத்தியமாகும். புதிதாக ஒரு குறிப்பிட்ட கல்வி பிரிவை ஏற்படுத்துவது அதனை கற்பது ஆராய்ச்சி செய்வது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது சமூக முன்னேற்றத்திற்கு உதவக்கூடியது. இந்த வகையில் வாக்காளரியல் கல்வியானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எதிர்காலத்தில் பாடமாக இருக்கும் என்று ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
உலக நாடுகளில் மன்னர் ஆட்சிக்கு மாற்றாக மக்களாட்சி முறை அரசாங்கங்கள் பரவ தொடங்கிய போது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அரசியல் அறிவியல் என்ற கல்வி தோன்றியது. தற்போது உலகெங்கும் மன்னராட்சி மறைந்து மக்களாட்சி முறையிலான அரசாங்கங்களே உள்ளன. ஆனால், இன்னும் தேர்தல்கள் குறித்த கல்வி அரசியல் அறிவியலில் ஒரு பகுதியாகவே இருப்பது ஏற்புடையதல்ல அல்ல. வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கற்றல் மற்றும் ஆய்வுதான் வாக்காளரியலாகும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உண்மையான ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வழி வகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசம் ஆகும் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
வாக்காளரியல் என்பது வெறும் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து ‘அறிவார்ந்த வாக்களிப்பிற்கு’ மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஒரு. சிறந்த முறையில் தகவல் அறிந்த குடிமக்களின் மூலம் “அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை” வளர்க்கும் நோக்குடன், வாக்காளரியலை ஒரு தனித் துறையாக நிறுவுவதன் மூலம் தூய்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் சூழல் சாத்தியமாகும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
பெரும்பாலும் கட்சிகள், சித்தாந்தம் அல்லது அரசு கட்டமைப்புகளை அரசியல் அறிவியல் மையமாகக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு ஜனநாயகத்தில் வாக்காளரே மிகவும் முக்கியமான, ஆனால் போதிய அளவு ஆராயப்படாத ஒரு கூறு என்று வாக்காளரியல் தெரிவிக்கிறது. “வாக்காளர்” என்பதை ஒரு செயலற்ற பங்கேற்பாளராக இருந்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தனது பங்கை உணர்ந்த ஒரு கல்வி அறிவு பெற்ற, “மதிப்புமிக்க” முடிவெடுப்பவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது டாக்டர் ராமராஜின் “வாக்காளரியல்” சிந்தனைகள். வாக்காளரியல் பற்றிய ஆய்வு ஜனநாயகத்தை வலுப்படுத்தி, திறமையான ஆட்சிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும். டாக்டர் ராமராஜின் “வாக்காளரியல் கோட்பாடு”, வாக்காளரின் உரிமைகள், செயல்கள் மற்றும் விருப்பத்தை அரசியல் உலகின் மையத்தில் நிறுத்தி, தேர்தல் முடிவை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வாக்கின் தரத்தில் கவனம் செலுத்துகிறது என்று கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் பி. சக்திவேல் தெரிவித்தார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.