கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ? – தொடர் – 4
பைபிள் புதிரா ? புனிதமா ? - தொடர் - 4
பார்த்தினோ ஜெனிசிஸ் முசில வகை மீன்கள், ஊர்வன மற்றும் பறவைகளில் ஆண் துணை இல்லாமலேயே பெண் முட்டை தானாகவே கருவாக மாறும் நிகழ்வு இயற்கையில் நடக்கிறது.
ஆனால் பாலூட்டிகளில் இந்த முறைப்படி ஆரோக்கியமான குட்டிகள் பிறப்பது இயற்கையாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மனிதர்களில் அண்ட அணு (Egg) தானாகப் பிரியத் தொடங்கினாலும், அது பெரும்பாலும் முழுமையான கருவாக வளராமல் ‘டெரடோமா’ எனப்படும் திசுக்கட்டியாகவே முடிந்துவிடும் .
இயேசு ஒரு ஆண் குழந்தை என்பதால் அவருக்கு XY குரோமோசோம்கள் இருக்க வேண்டும். பெண்களிடம் XX குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். தந்தை இல்லாமல் ஒரு பெண் குழந்தை பிறப்பது (XX) பார்த்தினோஜெனிசிஸ் மூலம் தத்துவார்த்த ரீதியாகச் சாத்தியம் என்றாலும், ஒரு ஆண் குழந்தை பிறக்கத் தேவையான ‘Y’ குரோமோசோம் தாயிடம் இருக்காது.
இதற்குச் சில ஆய்வாளர்கள் ‘ஜெனடிக் மொசைக்’ போன்ற அரிய மரபணு மாற்றங்களை ஒரு வாய்ப்பாகக் கருதினாலும், இவை மிகவும் அரிதானவை மற்றும் உறுதிப்படுத்தப்படாதவை.
இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால், கிறிஸ்தவர்கள் இதனை ஒரு ‘தெய்வீக அற்புதம்’ என்று கருதுகின்றனர்.
அறிவியல் விதிகளின் படி, தந்தை இல்லாமல் ஒரு ஆண் குழந்தை பிறப்பது அடிப்படையில் இயலாத ஒன்றாகவே கருதப்படுகிறது. எனவே, இது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக நிகழ்வாகவே உள்ளது.
பைபிளின் பார்வையில், இயேசுவின் கன்னிப்பிறப்பு என்பது ஒரு புதிர் அல்ல, அது ஒரு புனிதம்
இயேசு மனித விருப்பத்தினால் பிறக்காமல், இறைவனின் தூய ஆவியினால் மரியாளின் வயிற்றில் உருவானார். “தூய ஆவி உன்மேல் வரும்; உன்னத கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும்” என்கிறது லூக்கா 1:35. எழுதியிருக்கிறார்.
கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மனிதர்கள் அனைவரும் ‘ஆதி பாவம்’ சுமந்தவர்கள். ஆனால், இயேசு கன்னி வயிற்றில் பிறந்ததன் மூலம் அந்தப் பாவக்கறை இல்லாமல், முழுப் புனிதராகப் பிறந்தார் என மத்தேயு 1:20 எழுதி இருக்கிறார்.
இயற்கையான உயிரியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு கன்னி கருவுறுவது மனித அறிவுக்குப் புதிராகத் தோன்றலாம்.
மரியாளே “இது எப்படி நிகழும்?” எனப் புதிராகக் கேட்டபோது, வானதூதர் “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக்கா 1:37) என்று பதிலளித்தார்.
இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி மூலம், “கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பார்” என்று எசாயா 7:14 என்பவரால் தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டது.
எனவே, இது மனித அறிவுக்குப் புதிராக இருந்தாலும், கிறிஸ்தவர்களுக்கு இது கடவுளின் அன்பு வெளிப்பட்ட மிகப்பெரிய புனிதம்.
– ஜீ.தாவீதுராஜ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.