மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் – பிறந்தநாள் வாழ்த்துகள் !
நாற்பதாண்டு கால இதழியல் துறை அனுபவத்தோடு, இன்றும் சமூகம் சார்ந்து எழுதியும் இயங்கியும் வருகிற, மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் அவர்களுக்கு அங்குசம் இதழின் சார்பில் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தி இந்து குழுமத்தின் ஃபிரண்ட்லைன் (Frontline) இதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபிரண்ட்லைன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். பணிநிறைவு பெற்ற 2022 ஆம் ஆண்டு வரையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஃபிரண்ட்லைன் இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றியவர்.
கால் நூற்றாண்டு கால இதழியல் அனுபவம் கொண்டவர், வயதில் மூத்தவர் என்பதால் மட்டுமல்ல; அவரது ஆகச்சிறந்த இதழியல் சார்ந்த பங்களிப்பிற்காகவே, அவர் என்றும் போற்றுதலுக்குரியவர். துணிச்சலான கருத்துக்களுக்கு சொந்தக்காரர். திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் என்பது கூடுதல் சிறப்பு. இன்று வரையிலும் அவர் இயங்கிவருகிறார் என்பது அதனினும் சிறப்பு.
இங்கே, கோடிட்டு சொல்ல வேண்டிய அவசிமான தகவல் ஒன்று. மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர், தமிழ் வழியில் பயின்றவர். ஆனால், அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது, ஆங்கிலத்தில் வெளியாகும் மாதமிருமுறை இதழான ஃபிரண்ட்லைன் பத்திரிகையில். ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகளை தமிழில் நூலாக வெளியிடுவதிலும்; தமிழில் மட்டுமே வெளியான கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதிலும் தொடர்ந்து பங்களிப்பை செலுத்திவருபவர். தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்ற, இதழாளர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பத்திரிகையாளர் வரிசையில், தவிர்க்கவியலாத இடத்தை இன்றளவும் தக்கவைத்திருப்பவர். அவரது இலட்சியம் சார்ந்த இதழியல் பணி சிறக்க அன்போடு வாழ்த்தி மகிழ்கிறது, அங்குசம் குழுமம்.
என்றும் அன்புடன், ஜெ.டி.ஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.