
ஆளுநர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் – ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
ஆளுநர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் – ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தி.க தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக ஆசிரியர் வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், திராவிடர் கழகம் சார்பில் பிபவரி 3 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் நடைபெற உள்ளது. இதில் சமூக நீதி பறிக்கப்படுவது, இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோவது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்குவது போன்றவை குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்வது மேலும் ஜாதி பாம்பு மீண்டும் தன்னுடைய விஷத்தை கக்கும் சூழலில் அதனை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசை வலியுறுத்துவது,
மகளிர் நலன், ஒடுக்கப்பட்டோர் உரிமை, இளைஞர்களின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். தி.க இளைஞரணி மண்டல மாநாடு திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெறும்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை தற்போது எதிர்க்க எந்த கட்சியும் தயாராக இல்லை, எல்லோருடைய ஆதரவும் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் இதில் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். இருந்தாலும் கூட தற்போது யாரும் எதிர்க்காதது திராவிடர் கழகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை கூறுவதை விட இது தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

குடியரசு தலைவர் தவறு செய்தால் அவர் மீது குற்றம் சாட்ட அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. தற்போது ஆளுநர்கள் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். ஆனால் ஆளுனர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதி இல்லை எனவே ஆளுநர் தவறு செய்தால் அவரை நீக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் இது குறித்து தனி நபர் தீர்மானமாவது கொண்டு வர வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு ஈரோடு இந்தியாவிற்கே வழிக்காட்டும் வழிக்காட்டி கொண்டிருக்கிறது என்றார். இந்த கூட்டத்தில் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக உடல் தானம் வழங்குவதற்கான திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பிரத்யேக இணையதள பக்கத்தை ஆசிரியர் வீரமணி தொடக்கி வைத்தார். இக்கூட்டத்தில் முதல் கட்டமா உடற்கொடை வழங்கும் படிவத்தில் தி.க இளைஞரணியை சேர்ந்த 200 இளைஞர்கள் கையெழுத்திட்டு வீரமணியிடம் வழங்கினர்.
– ஜனா