நேற்று விபச்சார கேசு ! இன்று சாராய கேசு ! புஸ்(ஸி) ஆகும் விஜய் அரசியல் பிரவேசம் !
நேற்று விபச்சார கேசு ! இன்று சாராய கேசு ! புஸ்(ஸி) ஆகும் விஜய் அரசியல் பிரவேசம் !
விஜய் மாஸ்-ஆக அரசியலில் என்ட்ரி ஆகப்போகிறார் என விஜய் ரசிகர்கள் காட்டிய பிரமிப்பு, மிகக்குறுகிய காலத்திலேயே காற்றுபோன பலூனை போல புஸ்(ஸி) ஆகியிருக்கிறது. கல்வி விருது வழங்கும் விழா என்ற பெயரில், 10, 12 பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து கவுரவிக்க போவதாக சொன்னார்கள். சொன்னபடி, கால் நோக நின்னபடியே விழாவையும் நடத்தி முடித்தார் விஜய். ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது என்று பிள்ளைகளின் வழியே பெற்றோர்களுக்கு அட்வைசும் சொல்லி அனுப்பி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்தார். காமராஜர் பிறந்தநாள் விழாவில், இரவுநேரபயிலகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். விரைவில், அரசியல் பிரவேசம் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாரினுக்கு பறந்துவிட்டார் விஜய். அண்ணன் பாரின் சென்றுவிட்டால் என்ன? அரசியல் பணியை தொடரத்தான் பாசமிகு தம்பிகள் இருக்கிறார்களே, என்று எண்ணிவிடாதீர்கள்!
திருச்சியில் நான்கு ஆண்டுகளாக, ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கைதாகியிருக்கிறார், திருச்சியை சேர்ந்த செந்தில். இவர் சாதாரண அடிமட்ட விஜய் ரசிகர் அல்ல. விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு அவ்வளவு நெருக்கமானவர். திருச்சியில் தளபதி விஜய் மஹால் என்ற பெயரில் செந்தில் புதிதாக கட்டிய கல்யாண மண்டபத்தை திறந்து வைத்தவர் புஸ்ஸி.
விபச்சார கேசை தொடர்ந்து, கள்ளச்சந்தையில் சாராயம் விற்ற வழக்கில் கைதாகி மன்றத்துக்கு ‘பெருமை’ சேர்த்திருக்கிறார்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள்.டாஸ்மாக் சாராயக்கடை திறப்பதற்கு முன்பாகவும், கடை மூடிய பின்னரும் மது பிரியர்களுக்கு மது சப்ளை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நால்வருள் ஒருவர் பாலகிருஷ்ணன்.

விபச்சார தொழில் செய்பவனுக்கும், பிளாக்கில் சரக்கு ஓட்டுபவனுக்கும் மன்றத்தில் மாவட்ட பொறுப்பு கொடுத்திருக்கும் புஸ்ஸி ஆனந்த்தால் விஜய் ரசிகர்களின் மானம் காற்றில் பறப்பதாக வேதனைப்படுகின்றனர் ரசிகர்கள். புஸ்ஸி ஆனந்தை நம்பி அண்ணன் அரசியலில் குதிப்பதும், சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதும் ஒன்றுதான் என்கிறார்கள், உண்மையான விஜய் ரசிகர்கள்.
– மித்ரன்.