திமுக ஐ.டி.விங் செயலாளர் டி.ஆர்.பி ராஜா மீது எஸ்.பியிடம் புகார் அளித்த அதிமுகவினர் !
திமுக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் எக்ஸ் தளத்தில் கீழடி அகழாய்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கேலி செய்வதுபோல் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில், வாயைத் திறந்து பேசுங்கள் பழனிசாமி!
கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தினாலும், தமிழர்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு வரலாற்றை மாற்றவும், மறைக்கவும் முயற்சி செய்து வருகிறது.
பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? இல்லை எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா? வாய்திறந்து சொல்லுங்கள் பழனிசாமி!? என குறிப்பிட்டும் எடப்பாடி பழனிச்சாமி உருவத்தை கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.
இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் பிரிவினர் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் R.K.ரவிச்சந்திரன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜவர்மன், சுப்பிரமணியன், மணிமேகலை, மற்றும் 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் நடைபயணமாக சென்று, தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முகநூல் பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என தனித்தனியே விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் புகார் மனு அளித்தனர்.
— மாரீஸ்வரன்