வளர் இளம் பருவத்தினர்னா (Adolescents) யாருங்க? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
குழந்தைகளும் இல்லாம
வளர்ந்தவுங்களும் இல்லாம
No more a child and Not yet an adult
இது ரெண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலம் தான அது. இப்போ அடல்ட்டா இருக்குற எல்லாரும் கடந்து வந்த காலம் அது. இதை வளர் இளம் பருவம்ங்குறோம்.
சரி இது எப்ப ஆரம்பிக்குது?
ஒரு மனுசனோ மனுசியோ வயசுக்கு வர்றதுக்கு ஓரிரு வருடங்கள் முன்பாகவே இது ஆரம்பிச்சுடுது
பூப்பெய்துறதுனா என்னங்க?
அது ஒவ்வொரு மனுசனுக்கும் மனுசிக்கும் இயல்பா அவர்களோட ஒன்பது வயசு முதல் பதினான்கு வயசுக்குள்ள ( வருசங்கள் முன்ன பின்ன இருக்கலாம்) நேரும்.
நார்மலான உடல் இயங்குவியல் சார்ந்த விசயம். அதுவரைக்கும் ஒரு உயிர் தங்களிடத்தில் இருந்து பிறப்பதற்கான ஆற்றல் இல்லாம இருந்த சூழ்நிலையில் இருந்து இனி தன்னகத்தே இருந்து இன்னொரு உயிர் உருவாகும் சூழ்நிலைக்கு செல்லும் மாற்றம் அது.
அதுவரைக்கும் குழந்தைகளாக பாத்துட்டு வந்த அவுங்கள சட் சடார்னு ஒரே நாள்ல “வயசுக்கு வந்தவுங்களா” அறிவிச்சுடக்கூடாதுங்க
உடம்பு – தான் இனப்பெருக்கத்துக்கு தயாராக ஆரம்பிக்கிறேன் எனக் காட்டும் ஒரு சிக்னல் ( சமிக்ஞை) தாங்க பூப்பெய்துதல்
ஒரு மாரத்தான் ரன்னராகனும்னு நினைக்கிறவரு இப்பதான் இன்னைக்கு தான் முதன் முதலா கிரவுண்டுக்கு போய் இருக்காருனு வச்சுக்கோங்க உடனே அவர அடுத்த நாளே மாரத்தான்ல ஓடி பரிசு வாங்கனும்னு நினைக்க முடியுமாங்க.
அதுக்கு அவருக்கு பயிற்சி வேணும், உடம்ப தேத்தணும், மனச தேத்தணும் இல்லையா ? அது மாதிரி தாங்க.
பூப்பெய்துதுதல் / வயசுக்கு வர்றது மட்டுமே இனப்பெருக்கம் செய்றதுக்கு சரியான தகுதி இல்லைங்க
நம்ம உடம்பு இன்னும் தயாராகணும், மனசு இன்னும் தயாராகணும், கூடவே அடலசண்ட் காலத்துல தான
பத்தாவது பனிரெண்டாவது நீட் இன்னும் பல பரீட்சைகளைக் கடந்து நமக்கான பாதை உருவாகுது
கல்வி இந்த வளர் இளம் பருவத்துல முக்கியமானதா இருக்குங்க.
இந்த காலப்பொழுதுல கற்கும் கல்வியானது நம்ம வாழ்க்கையை மாத்தி போட்ருதுங்க…
ஆனாலும் ஹார்மோன்கள் நம்மள தூண்டுது. இயற்கையாகவே எதிர்பாலினத்து மேல ஒரு ஈர்ப்பு வருது.
அதை எங்க லிமிட் பண்றதுனு தெரியாம பல திருமணத்துக்கு முன்பான உடல் கூடல்கள் நடக்குதுங்க.
இதுக்கு முக்கியமான காரணம் என்னன்னா ?
உடல் கூடல் குறித்த விழிப்புணர்வு அதிகமா இல்லைங்க.
இங்க பல பெண்களுக்கு ஆண்களுக்கும் வளர் இளம் பருவத்தை அடைந்து பூப்பெய்துதல் நடந்து விட்டால் கூட
ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் குழந்தை உண்டாகும் கர்ப்பம் தரிக்கும் என்ற சாதாரண அறிவு கூட கிடைக்க மாட்டேங்குதுங்க.
இந்த அறிவு கிடைத்தாலே பாதிக்கும் மேல் திருமணத்திற்கு முன்பான உடலுறவை தவிர்க்க இருபாலரும் முயற்சி செய்வார்கள்
நான் எனது அனுபவத்தில் கூட சில வளர் இளம் பருவத்துப் பெண்கள். திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டு கர்ப்பம் தரித்து அதை கண்டறியும் போது வரை தாங்கள் கர்ப்பம் தரித்துள்ளோம் என்பதை உண்மையாக அறியாதவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.
கிராமங்கள்ல நகரங்கள்லனு வித்தியாசம் இல்லாம திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டு வளர் இளம் பெண்கள் கர்ப்பமாவது நடக்கிறது.
பிறகு முறையாக எங்கு கருக்கலைப்பு செய்வது என்று அறியாமல் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்து உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
வளர் இளம் பருவத்தினருக்கு டீன் ஏஜ் மாற்றங்கள், பாதுக்காப்பான Vs பாதுகாப்பற்ற உடலுறவு குறித்த அறிவு புகட்டல்,
திருமணத்திற்கு முன்பான உடலுறவு மற்றும் கர்ப்பத்தின் பாதக அம்சங்கள், பால்வினை நோய்கள் தவிர்ப்பு , டீன் ஏஜ் திருமணங்கள் மற்றும் கர்ப்பங்கள் குறித்த பாதகங்களை விளக்குதல் போன்ற விசயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அதன் தாக்கம் பொதுவெளியில் வெளிப்பட வில்லை. இங்கு நாம் கலாச்சாரம் , கண்ணியம் , கடமை என்று மட்டும் பாடம் எடுக்கிறோமே அன்றி. நேரடியாக வளர் இளம் பருவத்தினருக்கு இயற்கையாக ஏற்படும் இச்சைகளுக்கு முறையான விழிப்புணர்வின் மூலம் நிவாரணம் வழங்கப்படுவதில்லை.
அதன் விளைவாக தவறான பாலியல் சார்ந்த தகவல்களைப் பெற்று திருமணத்திற்கு முன்பு உடல் சார்ந்த உறவுகளை பாதுகாப்பின்றி முயற்சி செய்து பார்க்கும் நிலைக்கு அவர்கள் உந்தப்படுகிறார்கள்.
பாதுகாப்பற்ற உடலுறவு என்பது கர்ப்பத்தில் முடியும். பால்வினை நோய்களைக் கொண்டு வரும்.
திருமண பந்தத்திற்கு முன்பாக டீன் ஏஜ் பருவத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பிறப்பது பெரிய சிக்கல்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொண்டு வருகிறது.
இதனால் பல தற்கொலைகளும் கொலைகளும் கூட நடக்கின்றன.
சட்டப்படி திருமண வயதை கூட்டிக் கொண்டே செல்வதும் ஆண் பெண் இருபாலரும் தங்களின் உடல் சார்ந்த தேவைகளை திருமணத்திற்கு முன்னமே பூர்த்தி செய்ய உந்தும் செயலாக அமைகிறது.
நான் கூறும் விசயங்கள் அனைத்தும் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவை என்பதால் இது என் வீட்டில் நிகழவில்லை என்று கடந்து செல்வது தவறு.
சமூகத்தில் நிகழும் பல விசயங்களும் நமது வீடுகளிலும் நடக்கலாம் என்ற விழிப்புணர்வு கொள்வதே சரி. திருமணம் வரை ஆணுடன் பந்தம் கூடாது உடலுறவு கூடாது என்று மட்டும் கூறி வளர்ப்பது பெற்றோர்களின் நிலை.
ஆனால் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மருத்துவத் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வளர் இளம் பருவத்தினருக்கு
பாதுகாப்பற்ற உடலுறவு குறித்து பாதுகாப்பான உடலுறவு குறித்த வளர் இளம் பருவத்திலேயே கல்வி புகட்ட வேண்டும்.
அப்போது தான் ஒரு வளர் இளம் பெண்- இந்த ஆணுடன் உடலுறவு கொள்ளலாமா? வேண்டாமா?
திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதால் ஏற்படும் சாதக பாதகம் என்ன?
கர்ப்பம் தரித்தால் என்ன செய்வது?
குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது வந்துவிட்டதா?
தான் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்?
எத்தனை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்?
இப்படி பல விசயங்களையும் சுயமாக சிந்தித்து முடிவு செய்வார்.
ஒரு ஆணும் பெண்ணை உடல் ரீதியாக அணுகும் முன் இந்த விசயங்கள் தெரிந்திருந்தால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
18 வயது நிரம்பாத பெண்ணை உடல் ரீதியாக அணுகினால் போக்சோ சட்டம் பாயும் எனும் விழிப்புணர்வு வளர் இளம் ஆண்களுக்கு இருப்பின் போக்சோ சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் குறையும்.
இதையெல்லாம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் பல பிரச்சனைகள் குறையும். வளர் இளம் பருவத்தில் பெண்களை பாலியல் ரீதியாக தவறாக துஷ்பிரயோகிக்கும் நடவடிக்கைகள் குறையும்.
இதே காலத்தில் ரூபெல்லா மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள், ஊட்டச்சத்துள்ள உணவு முறை உடற்பயிற்சி,
ரத்த சோகை, கர்ப்ப கால நோய்கள், பால்வினை நோய்கள், பாதுகாப்பான கர்ப்ப தடை நடவடிக்கைகள் போதை வஸ்துகளின் ஆபத்துகள் அனைவரும் பிறப்பால் சமம் மொழியால்/ மதத்தால்/ இனத்தால் பேதமை குற்றம் வன்முறையினால் ஏற்படும் ஆபத்து
ஆன்லைன் அத்துமீறல்கள் பாலுறவுக்காக மட்டும் அபகரிக்கும் ப்ரிடேட்டர்கள். ரிசர்வேசன் குறித்த விழிப்புணர்வு கல்வியின் முக்கியத்துவம் போன்ற பலவற்றைக் குறித்தும் ஆண் பெண் இருபாலருக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு அந்த பருவத்திலேயே விழிப்புணர்வு வழங்குவதே நமது கடமையாக இருப்பது நலம்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்