திராவிட மாடல்: நிலம் ஏந்திய விசும்பு (வானம்)
மண்ணிலிருந்து விண்ணை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. 2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே 9.69% என்ற அளவில் தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்குக் காரணம் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான ’எல்லாரக்கும் எல்லாம்’ என்கிற இலட்சியத்தை முன்னிறுத்தும் திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் தொழில்துறை முன்னெடுப்புகள்தான்.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய-மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதுதான் திராவிட மாடலின் இலக்கும் செயல்பாடுகளுமாகும். அதனால்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புள்ளிவிவரம் மற்றும் சமூக நலத்துறை வெளியிட்டுள்ள விவரங்களின்படியே பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் பெற்றுள்ள இந்த பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நூறாண்டுகால திராவிட இயக்கத்தின் அடித்தளத்தில் உருவான கட்டமைப்பு. நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி இன்றைய திராவிட மாடல் ஆட்சி வரையிலான சமூக நீதியும் சமூக நலத்திட்டங்களும் கல்வி-வேலைவாய்ப்பு-பொருளாதார முன்னேற்றம், சமுதாயத்தில் மதிப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்தத் தனித்தன்மைதான் திராவிடம்.
சங்கிலித் தொடர் போல தொடர்ச்சியானக் கண்ணிகளைக் கொண்ட திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை பல்வேறு இலக்குகளில் முன்னணி மாநிலமாகத் திகழச் செய்திருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 1டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நோக்கிய பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தொழிற்கொள்கைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
ஏப்ரல் 17ந் தேதி காலையில் சிறுசேரி சிப்காட்டில் சிஃபி நிறுவனத்தின் 1882 கோடி ரூபாய் முதலீட்டிலான 1000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் அதிநவீன தரவு மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர், மாலையில் தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளித் தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். விண்வெளி சார்ந்த தொழில்களுக்கான 10ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை அடுத்த 10 ஆண்டுகளில் ஈர்த்து, 10ஆயிரம் பேருக்கு விண்வெளித் தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை அளிப்பது என்பது இக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
விண்வெளிக்கு அனுப்பப்படும் வாகனங்கள் உற்பத்தி, செயற்கைக்கோள் உற்பத்தி ஆகியவற்றுடன் எரிபொருள் இரசாயனங்கள், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிப்பது என்பது இந்த விண்வெளித் தொழில் கொள்கையின் இலக்காகும். குலசேகரப்பட்டினம் விண்வெளித் தளம், திருச்சியில் உள்ள TREAT (Tamilnadu Rocket Engine and Aerospace Technology) இவற்றைப் பயன்படுத்தி தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை விண்வெளி வளர்ச்சி மையங்களாக ( Space Bay ) உருவாக்குவதற்கான செயல்திட்டங்கள் இந்தத் தொழிற்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
பொறியியில், வேதிப் பொறியியல், மின்னணுவியல் ஆகிய துறைகளில் திறன் மிக்க மனிதவளம் கொண்டதாக தமிழ்நாட்டைக் கட்டமைத்திருக்கிறது திராவிட இயக்கத்தின் கல்வித் திட்டம். அதன் விளைச்சல் நிலத்திற்கு மட்டுமின்றி, விசும்புக்கும் பயன்படும் வகையிலான திட்டங்களுக்கு இந்த விண்வெளித் தொழிற்கொள்கை துணை நிற்கும். (தமிழ் இலக்கியத்தில் விசும்பு என்பது வானத்தைக் குறிக்கும்)
தொழில் முதலீட்டாளர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டங்களுடன், தொழிலாளர்களுக்கான ஊதிய மானியங்களையும் தமிழ்நாடு அரசு வழங்கவிருக்கிறது. இதில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் ஆகியோருக்கு ஊதிய மானியம் கூடுதலாக அளிக்கப்படுவதன் மூலம் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பங்கேற்பினை வழங்க முடியும்.
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திராவிட மாடல் அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மற்றொரு முன்னெடுப்பாக, பெண்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விண்வெளித் தொழிலில் அவர்களின் பங்களிப்பை இடம்பெறச் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கின்றன. முதலமைச்சரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இளைஞர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல. விண்வெளித் தொழில்துறை சார்ந்த படிப்புகளில் ஈடுபாடுள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஆண், பெண் ஆகியோருடன் திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் அனைவருக்குமான பயிற்சி கிடைக்கும்.
விண்வெளித் தொழிற்கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, “நமது மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு இணையான ராக்கெட் வடிவமைப்பு பணியை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் செய்து வருகிறது” என்றார். உண்மை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்திற்கான தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் காரணமாக, நிலத்தில் டைடல் பார்க்குகள் உருவாகின. இந்திய மாநிலங்களிலேயே விண்வெளித் தொழில் கொள்கையை முதன்முதலாக உருவாக்கியிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். விண்ணில் பறக்க இருக்கின்றன தமிழர்களின் தொழில்நுட்பமும் தொழில் நுணுக்கமும் கலந்த அறிவுத்திறன்.
நாட்டை ஆள்பவரை சங்க இலக்கியமான புறநானூற்றின் இரண்டாவது பாடல் இப்படிக் குறிப்பிடுகிறது:
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும்
சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும்
உடையோய்!