தமிழக வேளாண்துறையும் வேரூன்றிய ஊழலும் ! விரிவான ரிப்போர்ட் !
தமிழக வேளாண் துறையும் ! வேரூன்றிய ஊழலும் !
”இலஞ்ச வழக்கில் சிக்கியவர்களுக்கு அதிகாரிகள் மறைமுகமாக உதவி செய்துவருவதாக” மின்வாரியத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. இந்த கண்டனம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும் என்பதுதான் தமிழகத்தின் யதார்த்தம்.
இதற்கு எடுப்பான உதாரணமாக அமைந்திருக்கிறது, வேளாண்துறையில் வரைமுறையற்று அரங்கேறியிருக்கும் ஊழல் விவகாரங்கள். திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானாவாரி மற்றும் இறவை பாசனதாரர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர். தமிழக வேளாண்துறை சார்பில் அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பெருமளவு ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இவர் தொடுத்த வழக்கு ஒன்றில், ஊழல் அதிகாரிகள் முன்னாள் வேளாண் இயக்குநர் முருகேசன், முன்னாள் வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) செல்வம் ஆகிய இருவர் மீதும் இலஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீசார் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மே-19 அன்று வழக்குப்பதிவு (5/2025) செய்திருக்கிறார்கள்.
*ஒரு எஃப்.ஐ.ஆர். க்கு இரண்டாண்டு கால சட்டப் போராட்டம் !*
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (NADP), தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (NSFM), அட்மா திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ( SAD), கலைஞர் திட்டம், IAMWARM திட்டம், குறுவை தொகுப்புத் திட்டம், சம்பா தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட 14 வகையான திட்டங்களில் முறைகேடு நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அப்துல்லா முன்வைக்கும் குறிப்பான குற்றச்சாட்டுகள்.

இதுபோன்ற அரசு திட்டங்களில் தொடர்ந்து ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த 25.07.2014 இல் வேளாண்மை இயக்குநரகத்தின் சார்பில் ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில், வேளாண்துறை கொள்முதல் கமிட்டி (DLAPC) யை அமைக்க வேண்டும் என்றும்; வேளாண்துறை சார்ந்த திட்டங்களுக்கான பொருட்களை சந்தையில் கொள்முதல் செய்வதற்கு முன்பாக வேளாண்துறை கொள்முதல் கமிட்டியின் (DLAPC) ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். திட்டப்பயன்கள் தகுதியான விவசாயிகளுக்குத்தான் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை DLAPC குழு உறுதி செய்ய வேண்டும் என்கிறது, அந்த அரசாணை. இந்த அரசாணை அப்பட்டமாக, மீறப்பட்டிருக்கிறது. DLAPC-யின் ஒப்புதலை பெறாமலேயே பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது, என்பதுதான் இங்கே மையமான குற்றச்சாட்டு.
குறிப்பாக, கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, கதிர் அறுவாள், இரும்புச்சட்டி அடங்கிய பண்ணைக்கருவிகளின் தொகுப்பை, சென்னையை சேர்ந்த RK TRADERS மற்றும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த RABELA NUTRI FOODEE PVT LTD ஆகிய நிறுவனங்களிடமிருந்து ரூ2100-க்கு வாங்கி, வேளாண்துறைக்கு ரூ2995/-க்கு சப்ளை செய்திருக்கிறது, OZONE COMMERCIALS என்ற நிறுவனம். இது ஒருவகை முறைகேடு. அடுத்து அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பண்ணைக்கருவிகளின் தொகுப்பை 3416 விவசாயிகளுக்கு வழங்கியதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.

அதிலிருந்து 100 பயனாளிகளின் பட்டியலை சரிபார்த்தபோது, 34 பயனாளிகள் தாங்கள் அப்படி ஒரு பண்ணைக்கருவிகளின் தொகுப்பை பெறவில்லை என்பதை இலஞ்ச ஒழிப்புப் போலீசாரின் விசாரணையில் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். இதெல்லாம், 05.09.2024 ஆம் தேதியிட்ட முதற்கட்ட விசாரணையிலேயே உறுதிபடுத்தப்பட்ட விசயங்கள். ஆனாலும், வழக்குப்பதிவாகவில்லை. நீதிமன்ற தலையீட்டையடுத்துதான் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முதல்நாள் புகார் கொடுத்து மறுநாள் வழக்குப்பதிவு செய்வது போல எளிதாக நிகழ்ந்துவிடவில்லை, இந்த விவகாரம். ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த 23.11.2023 இலேயே தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை துறை உழவர் நலத்துறை செயலாளருக்கு புகார் அனுப்பியிருக்கிறார், அப்துல்லா. ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்வதற்கே, இரண்டாண்டு காலம் சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது என்பது எத்தகைய அவலம்?
இன்று நேற்றல்ல. வேளாண்துறையின் சாபக்கேடாகவே தொடர்கிறது. இதற்கு முன்னர், கடந்த 2013 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், அப்துல்லா. தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குநராக தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். பணியாற்றிய 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், இதேபோன்று பல்வேறு வகையான விவசாய திட்டங்களில் ஆயிரம் கோடி வரையில் ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். “போதுமான ஆவணங்கள் இல்லாமல் குற்றம் சாட்ட முடியாது. தேவைப்பட்டால், எதிர்காலத்தில் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்யும்போது முழுமையான ஆவணங்களையும் மனுதாரர் சேர்க்க வேண்டும்” என்பதாக, அப்துல்லாவுக்கு அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்திருந்தது, மதுரை உயர்நீதிமன்றக்கிளை.
*ஊழலை எதிர்த்தால் பி.சி.ஆர். வழக்கு !*
“வேளாண்துறையில் நடைபெற்றுவரும் ஊழல் குறித்து குறிப்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்ந்து புகார் அளித்து வருகிறேன். கடந்த 2013 இலும் இதேபோன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதான், எனது புகாரையே பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்கள். தற்போதும், நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகே, வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், புகார் கொடுத்த எனக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஊழலுக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தில் எனது பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். ஊழல் அதிகாரி முருகேசனுக்கு நெருக்கமான முத்துக்கருப்பன் என்பவரை வைத்து, எனக்கு எதிராக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று (7/2014, 70/2022,75/2024) பி.சி.ஆர். வழக்கை போட்டிருக்கிறார்கள். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவெனில், ஊழலுக்கு எதிராக புகார் கொடுத்த நான் வழக்குக்கு மேல் வழக்கை வாங்கிக்கொண்டு, உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை எதிர்கொள்கிறேன். கடந்த முறை நான் தொடுத்த வழக்கில் சிக்கிய அதிகாரிகள் தற்போது அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ” என்கிறார், அப்துல்லா.

ஆம். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அத்துணை அதிகாரிகளையும் வேளாண்துறையின் ஒரே அரசாணையின் மூலம் அவர்களை உத்தமர்களாக்கிய அதிசயமும் நடந்திருக்கிறது. வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 14.06.2024 தேதியிட்டு வெளியான அரசாணை (நிலை எண் 118 ) அது. “திட்ட செயலாக்கம் செய்யும்போது ஏற்பட்ட நடைமுறை குறைபாடுகள் காரணமாகவே இந்த வழக்குகள் 10 ஆண்டுகளாக, நிலுவையில் உள்ளதை கருத்திற்கொண்டும் இந்நிகழ்வினால் குற்ற அலுவலர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன் அவர்களுடைய பதவி உயர்வு ஆகியவை பாதிப்படைந்ததை கருத்திற் கொண்டும்; இவ்வொழுங்கு நடவடிக்கை நிகழ்வில் பாதிக்கப்படைந்துள்ள அனைத்து குற்ற அலுவலர்களையும் கருணை மனப்பான்மையுடன் அணுகி அவர்களை கடுமையாக எச்சரித்து அவர்கள் மீதான துறை வழி ஒழுங்கு நடவடிக்கையினை கைவிடலாம் என முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது” என்பதாக, அறிவிக்கிறது, அந்த அரசாணை.
இதைவிட கேலிக்கூத்து இருக்க முடியுமா? யார் ஒருவரின் மீதும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ, முகாந்திரம் இல்லாமலோ அனுப்பி வைக்கப்படும் மொட்டைக் கடுதாசிகளுக்கெல்லாம் இலஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிடுவதில்லை. தங்கள் கவனத்திற்கு வரும் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், உடனடியாக எதிர்வினை ஆற்றிவிடுவதும் இல்லை. முறையாக தங்களது தலைமையகத்துக்கு தகவல் அனுப்பி, அவர்களின் ஒப்புதலை பெற்று, முதற்கட்ட விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில்தான் ஊழல் வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. அல்லது, நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. உண்மை இவ்வாறு இருக்கும்பட்சத்தில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை ஒரே அரசாணையில், அவர்களை வெறுமனே எச்சரித்துவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?
அடி முதல் நுனி வரையில் அனுப்புகை எழுத்தர் தொடங்கி துறையின் உச்சபட்ச ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரையில் கூட்டுக்களவாணிகளாக இருந்து இத்தகைய ஊழலில் திளைத்திருக்கிறார்கள் என்பதாக ஏன் சந்தேகம் கொள்ளக்கூடாது? பாமரனுக்கே எழும் இந்த எளிய கேள்விக்கு விடையளிக்கிறது, தமிழகம் முழுவதும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் பதியப்பட்டிருக்கும் ஊழல் வழக்குகள்.
*வேளாண்துறை ஊழலும் இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்குகளும் !*
தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்மை விற்பணை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகிய ஆறு தனித்துறைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றது.
ஒட்டுமொத்தமான இத்துறைகளின் சார்பில், மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 40% பேர் விவசாயத்தைதான் அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டிருப்பதால், விவசாயிகளின் நலனிலிருந்து அவர்களுக்கான விதை நெல் வழங்குவது தொடங்கி, உரம், பூச்சி மருந்து, உழுபடை கருவிகள், நீர்ப்பாசன அமைப்புகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி விவசாயத் தொழிலை மேம்படுத்தும் நோக்கிலான திட்டங்கள் அவை.
ஆறு தனித்துறைகளை உள்ளடக்கிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு எதிராக, கடந்த 2017 தொடங்கி 2025 வரையிலான 18 ஆண்டு காலத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு போலீசில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 29.
மானியத்தில் வழங்க வேண்டிய விதை நெல், உரம் பூச்சி மருந்து வழங்குவதில் மோசடி தொடர்பாக 9 வழக்குகள்; செய்யாத வேலையை செய்ததாகக் காட்டி பல்வேறு திட்டங்களில் மோசடி செய்ததாக 2 வழக்குகள்; பல்வேறு வகையான சான்றுகள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றதாக 5 வழக்குகள்; விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் சென்றதாக மோசடி செய்ததாக 3 வழக்குகள்; அதிரடி ஆய்வு நடத்தி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வழக்குகள்; அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 3 வழக்குகள்; பிற வகையில் ஒரு வழக்கு என பதிவாகியிருக்கிறது. தொடர்ச்சியாக, ஒரே வகையான குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதிலிருந்தே, வேளாண்மைத்துறையின் ஊழலை புரிந்து கொள்வதற்கு போதுமான சான்றாக அமைந்திருக்கின்றன.
இவ்வாறு பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை தப்புவிக்கும் நோக்கில், பல்வேறு ஓட்டைகளை கொண்டிருக்கிறது என்பது தனிக்கதை.
இன்னும் சொல்லப்போனால், முதல்நாள் புகார் கொடுத்து மறுநாள் பதிவான வழக்குகள் என்பதாக குற்றம் நிகழ்ந்த சமயத்திலேயே பதிவான வழக்குகள் என்று எடுத்துக் கொண்டால், வெறும் 6 வழக்குகள் மட்டுமே. அவையெல்லாம், பல்வேறு வகையான சான்றுகளை வழங்க இலஞ்சம் கேட்டார், மானியத்தில் டிராக்டர் வழங்க இலஞ்சம் கேட்டார் என்ற ரீதியிலான சில்லறை புகார்கள்.
எஞ்சியுள்ள 23 வழக்குகளும் போதுமான அவகாசத்துடன் முதற்கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து நீதிமன்ற தலையீட்டையடுத்து பதிவான வழக்குகள்தான். இன்னும் குறிப்பாக, பல வழக்குகள் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்குப் பிறகு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 15. ஆக, பதிவான வழக்குகளில் சரிபாதிக்கு மேலான வழக்குகள் நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே பதிவாகியிருக்கின்றன என்பதுதான்.

இவ்வாறு, போதுமான முகாந்திரத்தின் அடிப்படையில் பதிவான வழக்குகளில் சிக்கிய ஊழல் அதிகாரிகளைத்தான், அரசாணை நிலை எண் 118 அப்பழுக்கற்றவர்களாக்கியிருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று சென்னை ஊழல் தடுப்பு போலீசு தலைமையகம் பதிவு செய்த வழக்கு அது. வேளாண்துறை (உரம்)யின் துணை இயக்குநர் சங்கர் மாநில அளவிலான அதிகாரிகளை அழைத்து தலைமையகத்தில் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 31 மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் உதவி இயக்குநர்களும் (உரக்கட்டுப்பாடு) தலா 3000 மாமுல் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு அதிகாரி அந்த மாமூலை வசூலித்துக்கொடுக்க வேண்டும் என்பது ஏற்பாடு. அன்றைய நிகழ்வில், தஞ்சை மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் வித்யா வசூலித்திருக்கிறார். அதே அலுவலகத்துக்கு வெளியே, ரூ.2,50,000 இலஞ்சப் பணத்துடன் குருணை உரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் வினோத் காத்திருக்கிறார். அவரைப்போல, அந்த உயர் அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பணப்பெட்டியுடன் காத்திருக்கிறார்கள்.
ஆக, மாவட்ட அளவிலான வேளாண் உதவி இயக்குநர்களையே, புரோக்கர்களாக மாற்றிவிட்ட வேளாண்துறையின் இயக்குநர் தனது கீழ் அதிகாரிகளின் ஊழலை விசாரித்து நடவடிக்கை எடுத்துவிடுவார் என்று நம்பிக்கை கொள்ள இம்மியளவேனும் இடமிருக்கிறதா, என்ன? அடி முதல் நுனி வரை ஊழல் முறைகேட்டில் ஊறித்திளைக்கிறது, வேளாண்துறை என்பதற்கு இதற்குமேலும் சான்றுகள் வேண்டுமா, என்ன?
— அங்குசம் புலனாய்வுக்குழு.
வேளாண்துறை ஊழல் தொடா்பான செய்தியை படிக்க
👇👇👇
[…] […]