அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் … முழுமையான செயல்வடிவம் எப்போது ? கேள்வி எழுப்பும் தமுஎகச !
”வெறுப்பின் கொற்றம் வீழ்க ! அன்பே அறமென எழுக!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சைதாப்பேட்டை கிளையின் 14 வது மாநாட்டில், அனைத்து சாதி அர்ச்சகர் உள்ளிட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இம்மாநாட்டில், தமுஎகசவின் மாநில தலைவர் கி.கமலக்கண்ணன், செயலாளர் மு.சா., துணைத்தலைவர்கள் சாய் சுரேஷ் மற்றும் எழுத்தாளர் வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மேநாள் நீதிபதி து.அரிபரந்தாமன், செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், தமுஎகச மாநில பொருளாளர் கவிஞர் சைதை ஜெ, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
இம்மாநாட்டில் கீழ்கண்ட அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
”அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் தொடங்கியப் போராட்டம் அரை நூற்றாண்டைக் கடந்தும் நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் அவர்களே கூறியபடி அவரது நெஞ்சில் தைத்த முள்ளினை எடுப்பதற்கான அரசின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முழுமை அடையவில்லை.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1970 டிசம்பர் 2 ல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்து சமய அறக்கட்டளை திருத்த மசோதா, தமிழ்நாட்டுக் கோயில்களில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதை ஒழித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிசெய்தது. இதை எதிர்த்த வழக்கில், 1972 ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சட்டத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது. அதே சமயம் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படி நியமிக்கப்பட வேண்டுமென்றது. இப்பிரிவு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கனவை நிறைவேறாமல் செய்தது
இருப்பினும் பொதுவுடைமை இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், தலித் அமைப்புகள், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஆன்மீகத் தலைவர்கள் – இந்தக் கோரிக்கையும் இதற்கான போராட்டமும் உயிர்ப்புடன் இருப்பதற்கு முக்கியப் பங்காற்றினர்.
இதன் விளைவாக 2006-ல் மீண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கோரிக்கை நிறைவேற புது முயற்சி நடந்தது. அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் பரிந்துரை அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்தும் வழக்கு. ஆனால் இதன் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு முந்தைய தீர்ப்பில் இருந்து வேறுபட்டிருந்தது.
இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும் தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையைப் புறக்கணிக்க முடியாது என்றது உச்ச நீதிமன்றம். 2015ல் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மீது அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை.
2021ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தபின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கோட்பாடு மீதான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியின் நூறாவது நாளில் பயிற்சிபெற்றுக் காத்திருந்த வயது வரம்பு தகுதிக்குட்பட்ட அனைத்து சாதியினரைச் சார்ந்தவர்களும் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள், ஆறிலிருந்து எட்டாக உயர்த்தப்பட்டு; சைவ, வைணவ ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு வீதம், மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும், தீட்சையும் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறுவோருக்குத் தங்குமிடமும் உணவும் கட்டணமின்றி வழங்கப்படுவதோடு உதவித்தொகையும் நான்காயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக (இந்த ஆண்டு முதல்) உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாகப் பயிற்சி பெற்ற பெண் ஓதுவார்கள் கோவில்களில் பணியமத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்தச் செயல்பாடுகளை தமுஎகச வரவேற்கிறது; பாராட்டுகிறது.
கோரிக்கைகள்
அதேவேளையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக நிறைவேற கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமெனக் கோருகிறோம்.
ஏற்கனவே இயற்றப்பட்டச் சட்டங்கள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், அரசமைப்புச்சட்ட அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் வகையில் அனைத்துக் கோயில்களிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்..
நீதிபதி ஏ. கே. ராஜன் குழுவின் பரிந்துரைப்படி ஓராண்டு சான்றிதழ் படிப்புடன் மூன்றாண்டு பட்டப்படிப்பும் தொடங்கப்படவேண்டும். அதற்கெனப் பயிற்சிப் பள்ளிகளை விடுதி வசதிகளுடன் கூடிய கல்லூரிகளாக தரம் உயர்த்த வேண்டும். சான்றிதழ் படிப்பு, பட்டப்படிப்பின் தொடர்ச்சியாக ஆறுமாத காலம் நடைமுறைப் பயிற்சி வழங்கிட வேண்டும். நடைமுறைப் பயிற்சிக் காலத்தில் குறிப்பிட்ட கோயில்களின் ஆகம நடைமுறைகளையும் தமிழ் அர்ச்சனையையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சிக்கான தனியார் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டப்படியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பாடத்திட்டம், பயிற்சி முறை, சான்றிதழின் பெயர், தேர்ச்சி முறை,வேலை வாய்ப்புக்கானத் தரம் ஆகியவை ஒரே வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
– ஆசிரியர் நியமனங்களிலும் மாணவர் சேர்க்கையிலும் தமிழ்நாடு அரசின் சட்டபூர்வமான இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளபடி அர்ச்சகர்கள் ஆலயத்தின் ஊழியர்கள்தான். அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எனவே அரசுப் பொறுப்பேற்று தகுந்த பயிற்சியின் மூலம் அர்ச்சகர்களை உருவாக்கிட வேண்டும்.
ஆகமங்கள் பற்றி அறிந்துகொள்ள தேவையானவற்றை சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திட வேண்டும். ஆன்மீக அறிஞர்களைக் கொண்டு அவற்றை வரன்முறைப்படுத்திட வேண்டும்.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
அரசு பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும். பணி இல்லா காலத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
அரசு பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்ற அர்ச்சகர்கள் பணிபுரியும் கோயில்களில், அவர்கள் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும். புறக்கணித்தல், அவமானப்படுத்துதல், சம அந்தஸ்து வழங்காமை போன்ற நடவடிக்கைகள் குற்றச்செயலாகக் கருதப்பட வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிசெய்வதன் மூலம் அர்ச்சகர் பணி ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோரிக்கையாகும். ” என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.