74 பேரில் 32 பேருக்கு MBBS சீட் ! அசத்தல் அரசு மாதிரிப்பள்ளி !
நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக, வருடத்துக்கு இலட்சக்கணக்கில் வசூலிக்கும் தனியார் கோச்சிங் நிறுவனங்களே, 10-15% தேர்ச்சி விகிதத்தை மட்டுமே எட்ட முடிந்த நிலையில், பயிற்சி அளித்த 74 பேரில் 32 பேரின் எம்.பி.பி.எஸ். கனவை நனவாக்கியிருக்கிறது திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளி. இதன் தேர்ச்சி சதவிகிதம் 43%.
அதுமட்டுமல்ல; மாநில அளவில் பட்டியலினபிரிவில் இரண்டாம் இடம் பிடித்த சஞ்சய்தரன்; பழங்குடியினர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்த தீபிகா; பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவில் 5-ஆம் இடம் பிடித்த வனிஷா; மிகவும் பிற்பட்டோர் பிரிவில் 7-ஆம் இடம் பிடித்த ஜனுஷா; பிற்பட்டோர் பிரிவில் 15-ஆம் இடம் பிடித்த கோபி கிருஷ்ணன் என மாநில அளவிலான பிரதிநிதித்துவத்திலும் சாதனை படைத்திருக்கிறது.
உலகத்தர உட்கட்டமைப்பு வசதிகளுடன் மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்னெடுப்பில் உருவானதுதான் இந்த மாதிரிப்பள்ளிகள். 2021-22 ஆம் கல்வியாண்டில் வெறும் 75 பேர் என்பதில் தொடங்கி, 24-25 ஆம் கல்வியாண்டில் 1120 மாணவர்கள் நாடு முழுவதிலுமுள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள் என்பதெல்லாம் மெச்சத்தக்க சாதனைகளுள் ஒன்று. பள்ளிக்கல்வித்துறையின் முன்னோடித் திட்டங்களில் இதுவும் ஒன்று. அரசுப்பள்ளிகள், ”வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்” என்பதாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்கிறார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
நாடுமுழுவதும் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டுமென்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அதற்கு அவசியமே இல்லை. ஏற்கெனவே, நடைமுறையில் அதைக்காட்டிலும் தகுதி வாய்ந்த அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புகள் இருக்கவே செய்கின்றன. அவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை தடுக்காமல் இருந்தாலே போதுமானது என்பதுதான், இதில் இழையோடும் செய்தி!
முழுமையான வீடியோவை காண
திருச்சி அரசு மாதிரி பள்ளியின் அசத்தல் சாதனை! 74 பேரில் 32 பேருக்கு MBBS சீட் | NEET 2026
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.