பத்தாயிரம் பேரை கூட்டிட்டு வரவா? சர்ச்சுக்குள் நுழைந்து சூரத்தனம் காட்டிய பாஜக அண்ணாமலை மீது வழக்கு !

0

பத்தாயிரம் பேரை கூட்டிட்டு வரவா? சர்ச்சுக்குள் நுழைந்து சூரத்தனம் காட்டிய பாஜக அண்ணாமலை! பதிவான வழக்கு! தருமபுரி பதட்டம்!

“ஹலோ மிஸ்டர். இது உங்களோட சர்ச்சா? உங்க பேருலயா இந்த சர்ச் இருக்கு? எல்லாருமே, எல்லா கோயிலுக்கும் போறதுக்கு உரிமை இருக்கு தெரியுமா, தெரியாதா? நீங்க யாரு என்னை சர்ச்சுக்கு போகக்கூடாதுனு சொல்றதுக்கு? என்ன கூட்டமா வந்தா நான் பயந்துருவேனு நினைக்கிறீங்களா? பத்தாயிரம் பேரை திரட்டிவந்தா என்ன செய்வீர்கள்? நான் மாதாவுக்கு மாலை போடாம இங்கேயிருந்து போக மாட்டேன். உங்களால முடிஞ்சதை செய்துக்கோங்க. என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா?” … தர லோக்கல் தரத்திலான இந்த அடாவடி பேச்சு, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சொந்தமானது.

தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்தில் அண்ணாமலை
தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்தில் அண்ணாமலை

“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுவரும் அண்ணாமலை, தருமபுரி மாவட்டத்திலும் பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு நடந்து சென்றார்.ஹோட்டலை கண்டால் பரோட்டா வீசுவது; டீக்கடை என்றால் டீ ஆத்துவது என்ற அவரது வழக்கமான பாணியில், பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் உள்ள புகழ்பெற்ற தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்தைக் கண்டதும் உள்ளே நுழைய முற்பட்டார்.

- Advertisement -

- Advertisement -

அன்னை ஆலயம்
அன்னை ஆலயம்

சர்ச்சுக்குள் இருந்த சிலர், அண்ணாமலை சர்ச்சுக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ”நான் சர்ச்சுக்கு வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்” என்றார், அண்ணாமலை.

”எல்லோரும் நன்றாக இருக்க வேண்டுமெனக் கூறும் நீங்கள், கிறிஸ்துவ மக்களை வதைப்பது ஏன்., பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசின் சலுகைகளை வழங்க மறுப்பது ஏன்? மணிப்பூரில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை கொன்னு குவிச்சாங்களே. , அப்போ நீங்க எங்கே போனீங்க? சர்ச்சுகளை இடிச்சாங்களே, ஏன் பாஜக கண்டனம் தெரிவிக்கல? அங்கிருந்த கிறிஸ்தவ மக்களுக்கு ஏன் நீங்க ஆதரவு கொடுக்கல?” என சரமாரியான கேள்விக்கணைகளை வீசினர் சர்ச்சுக்குள் இருந்த இளைஞர்கள்.

அண்ணாமலைக்கு எதிர்ப்பு
அண்ணாமலைக்கு எதிர்ப்பு
4 bismi svs

“மணிப்பூரில் மோதல் ஏற்பட்டதே இருதரப்பு கிறிஸ்தவர்கள் இடையேதான். அதுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது. தி.மு.க.காரங்க தான் அதுக்கு மதச்சாயம் பூசுறாங்க. அதுல உண்மை இல்லை” என சம்பந்தமே இல்லாமல், திமுகவை சாடினார், அண்ணாமலை.
அண்ணாமலையை உள்ளே விடுவதில்லை என்பதில் உறுதியாக நின்றனர், இளைஞர்கள். வாதப்பிரதிவாதங்கள் வாக்குவாதமாக முற்றியது. எதிர்ப்பு முழக்கங்களாக மாறியது.

ஆனாலும், இது எதற்கும் அசராத அண்ணாமலை, தனது ஆதரவாளர்களை உசுப்பிவிடும் விதமாகவும் கிறிஸ்துவ இளைஞர்களை மிரட்டும் விதமாகவும் பேசியதோடு, ”வாங்க.. சர்ச்சுக்குள்ள போவோம்” என ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார்.
”அன்னைக்கு மாலை அணிவித்து இழிவுபடுத்தாதே” என்று முழக்கங்களை எழுப்பி, அப்போதும் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர் இளைஞர்கள். முழக்கமிட்டவர்களை லேசான தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்துவிட, சர்ச்சுக்குள் நுழைந்து தனது காரியத்தை சாதித்துவிட்டு அடுத்த இடத்துக்கு கிளம்பினார், அண்ணாமலை.

அண்ணாமலை பிஜேபி தலைவர்
அண்ணாமலை பிஜேபி தலைவர்

இவ்வளவையும் செய்துவிட்டு, கரகாட்டகாரன் ”நாதஸ்” கணக்காக, “தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்” என்று தனது எக்ஸ் தளத்தில் அப்பாவியாய் பதிவிட்டிருக்கிறார், அண்ணாமலை.

இதற்கிடையில், பள்ளிப்பட்டு மாதா கோவிலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தலை விடுத்த அண்ணாமலைக்கு எதிராக கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, ”பொது அமைதிக்கு குந்தம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது” உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் பொம்மிடி போலீசார்.

அண்ணாமலையுடன், களிர் கண்ணன், ஜான் பாபு
அண்ணாமலையுடன், களிர் கண்ணன், ஜான் பாபு

”ஜான் பாபு , களிர் கண்ணன் உள்ளிட்டு சிலை கடத்தல் வழக்குகள் , இரிடியம், பண இரட்டிப்பு , ஆள்கடத்தல் போன்ற கிரிமினல் வழக்குகளை சந்தித்து வரும் சிலரது தூண்டுதலின் பேரில்தான், சர்ச்சுக்குள் நுழைந்து அரசியலாக்க வேண்டுமென்ற முன்திட்டத்திலிருந்துதான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார், அண்ணாமலை.” என்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

”சிறுபான்மை மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்” இது என சாடியிருக்கும் தொல்.திருமாவளவன், “தமிழ்நாட்டில் வட இந்திய அரசியலை செய்ய பாஜக முயற்சி செய்கிறது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வெளிப்படையாக அண்ணாமலை இப்படி அச்சுறுத்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்துக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேட்பாரற்றவர்கள் இல்லை. சிறுபான்மையினருக்கு எந்த வடிவத்தில் அச்சுறுத்தல் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நிற்கும்” என காட்டமான தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார், அவர்.

-மணிகண்டன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.