மாற்றுத் திறனாளிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழா!
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 4% மாற்றுத் திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து. சென்னையில் கடந்த 21.06.2025ஆம் நாள் மாலை தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த பாராட்டு விழாவை நடத்தினர். இந்த விழாவில் அங்குசம் சார்பில் செய்தியாளர் வருகை தரவேண்டும் என்ற பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பொன்.கதிரேசன் விடுத்த வேண்டுகோளையடுத்து, நாம் பாராட்டு விழாவில் கலந்துகொண்டோம்.
ஒரு காலத்தில் செவிடன், குருடன், ஊமை, கூனன், நொண்டி, நொடம் என்று மனிதர்களை இழிவுபடுத்தி சமூகத்தில் பலர் அழைத்தனர். காலம் செல்ல… செல்ல… அவர்கள் பேசும் திறனற்றவர், பார்க்கும் திறனற்றவர், கேட்கும் திறனற்றவர், உடல் ஊனமுற்றவர்கள் என்னும் பொதுப்பெயரில் கொஞ்சம் நாகரிகமாக அழைத்தனர். 2006 – 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராய் இருந்த முத்துவேல் கருணாநிதி அவர்கள்தான் சட்டமன்றத்தில் உடல் ஊனமுற்றவர்கள் இனி “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று தனி இயக்குநரகம் செயல்படும் என்று அறிவித்து, உடல் குறைபாடாடுகளுடன் பிறந்தவர்களை உலக மாற்றும் திறனாளிகள் என்ற பொருளில் அரவணைத்த தாயாக கலைஞர் மாற்றுத் திறனாளிகள் மனதில் நிலைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதைப் பாராட்டு விழாவில் பேசிய மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்ந்து பேசிய மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தங்கம், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் பேராசிரியர் தீபக் நாதன் அவர்களின் உரையிலிருந்து அறிந்து கொள்ளமுடிந்தது.
மாலை 4 மணிக்கு முதல்வருக்குப் பாராட்டு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்து. பகல் 2 மணியளவிலிருந்து வள்ளுவர் கோட்டம் நோக்கி தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சுமார் 4ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களுக்கு உதவியாக உற்றார், உறவினர் என ஆயிரம் பேர் வந்திருந்தனர். சுமார் 5ஆயிரம் கலந்துகொண்ட பெரும் விழாவாக முதல்வரின் பாராட்டு விழா அமைந்திருந்தது. பிற்பகல் 3 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் பாராட்டுவிழா நடைபெறும் அய்யன் திருவள்ளுவர் அரங்கில் அழைத்துச் செல்லப்பட்டனர். நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளை சுமார் 100 அடங்கிய All are Equal என்ற அமைப்பினர் சக்கர நாற்கலிகளில் உள்ளே கொண்டு செல்வதும், உள்ளேயிருந்து வெளியே கொண்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியைச் செவ்வனே செய்தனர்.
அரங்கில் உள்ளே 1500 மாற்றுத் திறனாளிகள் மட்டும் அமர வைக்கப்பட்டனர். அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட 2 இருஇடங்களில் சுமார் 3000 பேர் அமர வைக்கப்பட்டனர். எல்லா இடங்களிலும் LED திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு இசைஅமைப்பாளர் பரத்வாஜ் தலைமையில் திரையிசைப்பாடல்கள் மற்றும் கலைஞர் புகழ்பாடும் பாடல்களை பாடகி மாலதி, சின்னப்பொண்ணு ஆகியோர் பாடினார். விழவில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர், துணை மேயர் என திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாலை 6 மணிக்குப் பாராட்டு விழாவிற்கு வருகை தந்த முதல்வரை மேளதாள முழக்கத்தோடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்றனர். அனைத்து சங்கப் பொறுப்பாளர்களையும் முதல்வர் வணங்கி மகிழ்ந்தார். எழுந்து நின்று மரியாதை செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பொறுப்பாளர்களின் தோளில் கைவைத்து, முதல்வர் கனிவுடன் அமர சொன்னபோது, பலரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் மலர்ந்திருந்தன. அரங்கத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் முதல்வர் சந்தித்து கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். உடல் நலம் குன்றி அகவை முதிர்ந்தவர்களைப் பார்த்தபோது முதல்வர் அருகில் சென்று, “உங்களுக்கு எதாவது கஷ்டம் இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லுங்கள். உங்களுக்கு எல்லாவற்றையும் செய்து தருவார்கள்” என்று ஆறுதல் மொழி கூறியபோது, அகவை முதிர்ந்த மாற்றுத் திறனாளிகள் நெஞ்சின் அடியாழத்திலிருந்து “மகாராசா…. நீ நல்லாயிருக்கனும்” என்று வாழ்த்தியது முதல்வரை நெகிழச் செய்தது.
அரங்கினுள் சென்ற முதல்வர் நேரடியாக விழா மேடைக்குச் செல்லாமல், அரங்கில் மூன்று பிரிவாக அமர்ந்திருந்த 1500 மாற்றுத்திறனாளிகளையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். பலர் கைகளைக் குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சிலர் செல்ஃபி எடுத்துகொண்டனர். முதல்வரின் பாதுகாவலர்கள் யாரும் மாற்றுத்திறனாளிகளின் செயல்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு உதவியாக இருந்தனர் என்பது வியப்பாக இருந்தது. மேடையின் கீழே முதல்வர் அமர்ந்திருக்க இசைக்குழுவினர் ”ஓடி வருகிறான் உதயசூரியன்” என்ற பாடலை பாடி முடித்தபின்னர் முதல்வர் மேடையேறினார். மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் சார்பில் 200 கிலோ எடையுள்ள மரத்தலான சிங்கச் சிலை முதல்வருக்கு வழங்கப்பட்டது.
தேசிய மாற்றுத் திறனாளிகள் இணையத்தின் தலைவர் அர்மான் அலி பேசும்போது, “உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்தியாவிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சியோடும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடும் வாழ்ந்து வருகிறார்கள். அரசுப் பணிகளில் 4% மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. பதவி உயர்விலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இதுபோன்ற வாய்ப்புகள் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பிறபகுதிகளிலும் உலகத்திலும் இல்லை என்றே கூறலாம். இலட்சக்கணக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மாதம் தோறும் உதவித்தொகை, சக்கர நாற்காலி, மூன்று சக்கர மோட்டார் வண்டிகள் என அனைத்தும் இலவசமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவது என்பது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நம்பிக்கை கொள்ள செய்கிறது.
கலைஞர் மாற்றுத்திறனாளிகளின் தாயாக விளங்குகிறார் என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளின் செவிலித்தாயாக விளங்குகிறார். மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் நம்பிக்கை விளக்கையேற்றியுள்ள திராவிட மாடல் அரசை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாடு போராடும்…. தமிழ்நாடு வெல்லும்…. ” என்று அவர் உரையை முடித்தபோது அரங்கத்தில் இருந்த மாற்றுத் திறனாளிகள், அரங்கத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அரங்கத்தை அதிரச் செய்தனர். மாற்றுத் திறனாளிகளின் நன்றி உணர்ச்சிக்கு முதல்வர் கண்கலங்க கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
இரவு 7.30 மணியளவில் முதல்வர் உரையாற்ற தொடங்கினார். “என்னுடைய பிறந்தநாளின் போது காலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் நினைவிடங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்துவிட்டு, அண்ணா அறிவாலயம் சென்று கழகத் தொண்டர்கள், பொதுமக்களின் வாழ்த்துகளைப் பெற்று, பகல் ஒரு மணிக்கு வேளச்சேரி அருகில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று அவர்களோடு மதிய உணவை அருந்தும்போதுதான் என் பிறந்தநாளின் மனநிறைவை நான் பெறுவேன். இங்கே உரையாற்றிய பலர் கலைஞரையும் என்னையும், துணை முதலமைச்சரையும் பாராட்டினார்கள். திராவிட மாடல் அரசு மாற்றுத் திறனாளிகளாக உள்ள உங்களின் பின்னால் எப்போதும் உடன்இருப்போம். நம்பிக்கையோடு இருங்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசும்போது,“தற்போது கிராம ஊராட்சி அமைப்புகள் இல்லை. அதனால் தற்போது செயல்பாட்டில் உள்ள ஊராக உள்ளாட்சி அமைப்புகளாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளில் 4% மாற்றுத் திறனாளிகள் ஜூலை மாதம் முதல் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பெற்று மாற்றுத் திறனாளிகளை ஊராக உள்னாட்சி அமைப்புகளின் நியமனம் செய்வார்கள். இதனால் மொத்தமுள்ள 4000 நியமனங்களில் தற்போது 2,984 பேர் பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிவித்தபோது, அரங்கத்தில் எழுந்த கரவொலி விண்ணில் மோதி மண்ணில் மறைந்தது. சுமார் 8.00 மணியளவில் முதல்வர் அன்பும் கனிவும் கலந்த உரையை நிறைவு செய்தார்.
வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் அரசின் சார்பில் விருந்தோம்பல் வழங்கப்பட்டது. விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளை மாலை 3 மணி முதல் இரவு 8 மணிவரை ஓய்வில்லாது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர், முன்னாள் சென்னை மேயர், இந்நாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்கள். இந்தப் பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற அமைச்சர் சுப்பிரமணி அவர்களின் அறிவுரைகள் உதவியாக இருந்தன என்பது கூடுதல் செய்தி. விழா முடிந்து மாற்றுத் திறனாளிகள் தங்களின் இல்லம் நோக்கி சென்றபோது அனைவரின் விழிகளிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் ஒளிவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்கவும் உணரவும் முடிந்தது என்றால் அது மிகையில்லா உண்மையாகும்.
பாராட்டு விழா குறித்து பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களை இந்தச் சமூகம் உடல் ஊனமுற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்தபோது, நீங்கள் இந்த உலகத்தையே மாற்றும் திறனாளிகள் என்னும் பொருள்பட ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று எங்களுக்கு புதிய பெயரைப் புனைந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். எங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் துணை முதல் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி. உள்ளாட்சி அமைப்புகளில் 4% பதவி நியமனம் எங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூலை முதல் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற முதல்வரின் அறிவிப்பு எங்களின் செவிகளில் விழுந்து தேனாய் இனிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள உறுப்பினர்களின் அனைத்து உரிமைகளும் நியமனம் செய்யப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உண்டு. மாத ஊதியம், அமர்வு படிகளும் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடரவேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் 2026 தேர்தல் களத்தில் செயலாற்றுவோம்” என்று கூறினார்.
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு, நீங்கள் ஒதுக்கப்பட்ட மக்கள் அல்ல, உரிமையோடு வாழத் தகுதி படைத்த மக்கள் என்று அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் திராவிட மாடல் அரசின் முதல்வரை காலம் உள்ளளவு மாற்றுத் திறனாளிகள் வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள் என்பது மிகைப்படுத்தப்படாத பேரூண்மையாகும்.
— ஆதவன்