இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா !
திருத்தவத்துறை என்னும் இலால்குடியில், திருவள்ளுவர் கழகமும், பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழுவும் இணைந்து தெய்வச் சேக்கிழார் விழாவை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் மே 30 மற்றும் 31 ஆம் நாள் கொண்டாடியது.
இவ்விழாவின் முதல் நாள் நிகழ்வு திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் உலக. புவியரசு அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அருளிய பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் நூலுக்கு சைவப் பெருநாவலர் அ. நடேச முதலியார் அவர்கள் எழுதிய உரை நூலை 59 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பதிப்பாக திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகபரமாசாரிய சுவாமிகள் தலைமையேற்று வெளியிட்டார்.
அதன் முதல் பிரதியை திருவாவடுதுறை ஆதீனப் புலவர் திரு சு.குஞ்சிதபாதம் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நூல் குறித்த அறிமுக உரையினை நூலின் பதிப்பாசிரியர் இலால்குடி பா. எழில்செல்வன் அவர்களும், நூல் ஆய்வுரையை பேராசிரியர் ப.வெங்கடேசன் அவர்களும் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் ஓதுவார் திருமுறைக் கலாநிதி வே.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு ” திருமுறைச் செல்வர்” என்னும் பட்டமும் பொற்கிழியும் திண்டுக்கல் சிவபுரம் ஆதீனத்து குரு மணிகளின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.
அன்றைய நாளில் இறுதி நிகழ்ச்சியாக “பட்டினத்தார் போற்றிய மூவருள் நம் நெஞ்சைக் கவர்ந்து நிற்பவர் யார்?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் முனைவர் இரா.மாது அவர்கள் நடுவராகவும் “சிறுத்தொண்டரே!” என்னும் அணியில் முனைவர் கோ.ப.நல்லசிவம் மற்றும் திருமதி ரேகா மணி அவர்களும் “திருநீலகண்டரே! “என்னும் அணியில் திருமதி கற்பகலட்சுமி சுரேஷ் மற்றும் வழக்கறிஞர் அ.க.இராஜாராமன் அவர்களும், “கண்ணப்பரே!” என்னும் அணியில் முனைவர் ந.விஜயசுந்தரி மற்றும் பா.சிவமாதவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கான தொகுப்புரையை ப.சு நாடுகாண் குழுவின் பொருளாளர் திரு.த.முருகானந்தம் அவர்களும்,நன்றியுரையினை திருவள்ளுவர் கழகம் பொருளாளர் திரு ந.பாபு தம்பாச்சியா விஸ்வநாதன் அவர்களும் வழங்கினார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி ப.சு நாடுகாண் குழுவின் தலைவர் முனைவர் சண்முக.செல்வகணபதி அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. திருக்கையிலாய பரம்பரை, செங்கோல் ஆதீனம், 103வது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் தலைமையேற்று பூவாளூர் அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில் சிவாச்சாரியார் P.கண்ணன் அவர்களுக்கு “திருவருட்செல்வர்” என்னும் விருதினையும், கவிஞர் மணமேடு குருநாதன் அவர்களுக்கு “தெய்வத் தமிழ்ச் செல்வர்” என்னும் விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தொடர்ந்து திருத்தவத்துறை அறநெறிக்கழகத் தலைவர் அரிமா க.ஜெயகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். ப.சு நாடுகாண் குழுவின் துணைச்செயலாளர் அ.சந்திரசேகர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
தெய்வச் சேக்கிழார் பெருமானின் குருபூஜையை முன்னிட்டு அடியார் புடைசூழ தெய்வச் சேக்கிழார் பெருமான் யானை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.