“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழப்பான்; என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் காப்பான்”
பைபிள் புனிதமா ? புதிரா ? - 3
இந்த வார்த்தை மத்தேயு 10:39 இயேசுவின் போதனைகளிலேயே மிகவும் ஆழமான மற்றும் முரண்பாடான உண்மையை உணர்த்தும் ஒரு போதனையாகும்.
இங்கு “ஜீவனைக் காப்பது” என்பது ஒரு மனிதன் தன் சுயநலம், உலக ஆசைகள், உடல் சுகம் மற்றும் உலகப் புகழைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது.
கடவுளின் கொள்கைகளை விடத் தன் உயிருக்கு அல்லது உலக வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன், தற்காலிகமாக இந்த உலகில் சுகமாக வாழ்ந்துவிடலாம்.
அப்படிச் செய்வதன் மூலம் அவன் தனது உண்மையான, நித்தியமான ஆன்மீக வாழ்க்கையை (நித்திய ஜீவன்) இழக்கிறான். அதாவது, அழியும் பொருளுக்காக அழியாத ஆன்மாவை இழப்பதாகும்.
என் நிமித்தம்: இதுவே மிக முக்கியமான பகுதி. ஒருவன் சும்மா உயிரை விடுவது பெருமையல்ல; இயேசுவின் போதனைகளுக்காகவும், உண்மைக்காகவும், நீதிக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.
இழக்கிறவன்: தன் சுய விருப்பங்களையும், உலக மேன்மைகளையும் கடவுளின் விருப்பத்திற்காக விட்டுக்கொடுப்பவன்.
இப்படி உலக ரீதியாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவன் அல்லது இழக்கிறவன், கடவுளின் பார்வையில் உண்மையான வாழ்வைப் பெறுகிறான். இது மரணத்திற்குப் பின் கிடைக்கும் பரலோக வாழ்வை மட்டுமல்ல, இந்த பூமியிலேயே அர்த்தமுள்ள ஒரு மேன்மையான வாழ்க்கையையும் குறிக்கும்.
அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இது ஒரு புதிர். “இழந்தால் எப்படிக் கிடைக்கும்?” என்ற முரண்பாடு நமக்குள் கேள்வியாக வரும்.
உலகக் வழக்கில் எதையும் சேமித்து வைத்தால் தான் பாதுகாக்க முடியும். ஆனால், இயேசுவின் இந்த “புதிர்” அதைத் தலைகீழாக மாற்றுகிறது.
விதையை மண்ணில் புதைத்து (இழந்து) செடியாக மாற்றினால் மட்டுமே அறுவடை (காப்பது) சாத்தியம். அதேபோல், தன் “சுயத்தை” (Ego) அழிப்பவன் மட்டுமே உண்மையான அமைதியைக் கண்டடைகிறான். என்பது தான் இதன் உள் அர்த்தம்.
இது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல; வாழ்க்கையின் ரகசியத்தைச் சொல்லும் புனிதமான புதிர். தனது சுகபோகங்களை மட்டுமே காக்க நினைப்பவன் மனநிறைவை இழக்கிறான்; ஆனால் உயர்ந்த நோக்கத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்பவன் வரலாற்றிலும் இறைவனிடத்திலும் என்றும் வாழ்கிறான்.
— ஜீ.தாவீதுராஜ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.