ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு ! பெண் போலீசுக்கு மிரட்டல் !
ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு… பெண் போலீசுக்கு மிரட்டல் !
தஞ்சாவூர் சூரக்கோட்டையில் தனியார் பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் தகராறு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் குடிபோதையில் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதில் ஒருவர் ஓட்டுநரை அடிக்கப் பாய்கிறார். சில அடிகளும் விழுகிறது. அதே பகுதியை சேர்ந்த சிலர், அந்த போதை ஆசாமிகளை சமாதானம் செய்கிறார்கள். “டிரைவர் மாப்ளதான் விடுடா” என்கிறார். “மாப்ளயாவது … ***யாவது” என ஆபாச அர்ச்சனைகளுடன் அடாவடி செய்கிறார்கள்.
அப்போது, அதே பேருந்தில் பயணித்த பெண் போலீசு ஒருவர் அந்த இளைஞர்களிடம் சமாதானம் பேசுகிறார். அதற்கு அந்த போதை ஆசாமிகள் அவர் ஒரு போலீசு என்றும் பாராமால் குறைந்தபட்சம் பெண் என்றும் பாராமல் அவ்வளவு ஆபாசமாகவும் திமிராகவும் பேசுகிறார்கள்.
ஓட்டுநரிடம் பொறுமையாக இருங்க சார் என்றும்; தகராறில் ஈடுபடும் போதை ஆசாமிகளிடம் என்னப்பா? எதுக்குப்பா அடிக்கிறீங்க? என்றும் ஓட்டுநரிடம் எதுவும் பேசாதீங்க என்றும்; அந்த போதை ஆசாமிகளிடம் தம்பி வண்டியை எடுங்கப்பா என்றும் அவ்வளவு மரியாதை கொடுத்து பேசுகிறார். ஆனாலும், அந்த போதை ஆசாமிகளோ, ஓட்டுநரை அடிக்கிறார்கள். ஒருவர் செருப்பால் அடிக்க பாய்கிறார்.
பஸ்ஸ எடுக்கனும் வண்டிய எடுங்க என்று அந்த போலீசார் சொல்ல, அவரிடமும் பாய்கிறார்கள் அந்த போதை ஆசாமிகள். “நீ வீடியோ எடு. உன்னால என்ன பன்ன முடியும்? உனக்கு என்ன வேலை? உங்களுக்கு இது தேவையில்லை. என் மேல எஃப்.ஐ.ஆர். போடு.” என்று வாக்குவாதம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில், பேருந்தில் மேலே ஏறி, பெண் போலீசை அடிக்க பாய்கிறான் போதை ஆசாமி ஒருவன். பொதுமக்களும் நடத்துனரும் அவனை தடுத்து கீழே இறக்குகிறார்கள்.
கடைசி வரையில், பேருந்தின் குறுக்கே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்க மறுத்து அடாவடி செய்கிறார்கள். வேண்டுமென்றால், டூவீலரில் ஏற்றிவிட்டு வண்டியை எடு என்கிறார்கள். அந்த பெண் போலீசாரை பார்த்து, வா, போ என்று ஒருமையிலும் ஒருகட்டத்தில் அறிவோடு பேசு என்றும் மரியாதைக் குறைவாக பேசுகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு கட்டத்தில், “100-க்கு கூப்பிட நீங்க யாருங்க? உங்களால முடிஞ்சத நீங்க பார்த்துக்கங்க. எங்களால முடிஞ்சத நான் பார்த்துக்கிறேன். உங்கள மாதிரி ஆயிரம் பேர பாத்துட்டேன். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு. உன்னால முடிஞ்சத என்ன வேனா பண்ணிக்கோ”னு அவ்வளவு திமிராகவும், ஒருமையிலும் கையை நீட்டி மிரட்டும் தொனியிலும் பேசுகிறார், அந்த போதை ஆசாமிகளுள் ஒருவர்.
தங்களை மோதுவது போல பேருந்தை இயக்கினார் என்பதுதான் இங்கே இவர்களுக்கிடையே பஞ்சாயத்து. அதை எவ்வாறு அணுக வேண்டுமோ, அவ்வாறு அணுகுங்கள். பேருந்து பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துக்கு வழி விடுங்கள் என்றுதான் அந்த பெண் போலீசார் சமாதானம் செய்கிறார்.
பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபடும் அந்த ஆசாமிகளோ, தாங்கள் அனைவரும் நிதானம் இல்லாத அளவுக்கு போதையில் இருக்கிறோம் என்பதையே மறந்து, பேருந்து ஓட்டுநரிடம் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்று சட்டம் வேறு பேசுகிறார்கள். கடைசி வரையில், பேருந்தின் குறுக்கே நிறுத்தப்பட்ட டூவீலரை எடுக்க முடியாதென்று அடாவடி செய்கிறார்கள். வேண்டுமென்றால், அதன் மீது ஏற்றிவிட்டு வண்டியை எடுத்து போ என்கிறார்கள்.
தலைக்கேறிய போதையில், 50-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற பேருந்தை வழிமறித்து அடாவடியில் ஈடுபட்டதோடு, அதனை சமாதானம் செய்ய முயன்ற பெண் போலீசை அவமரியாதையாக நடத்தி அவருக்கே மிரட்டலும் விடுத்த போதை ஆசாமிகளை போலீசார் தட்டித் தூக்கி தக்கப்பாடம் புகட்ட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
— ஆதிரன்.