சொல்வெளி அரங்கினில் மலர்ந்த “உதிரிலைகளில் மீந்த பச்சையம்”
சொல்வெளி அரங்கினில் மலர்ந்த “உதிரிலைகளில் மீந்த பச்சையம்”
கும்பகோணம் சொல்வெளி இலக்கியக் கூடம் நிகழ்த்திய நான்காவது நூலறிமுக அமர்வு அது. மௌவல் பதிப்பகமும் இணைந்து நடத்தியது. கடந்த ஞாயிறு (14.09.2025) சிறப்பாக நிகழ்ந்தேறியது நூலறிமுகம். கவிஞர் பழ. புகழேந்தி எழுதி, மௌவல் பதிப்பகம் பதிப்பித்த நூல் “உதிரிலைகளில் மீந்த பச்சையம்”.

கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமையேற்றிட, கவிஞர் ஜி.பி. இளங்கோவன் வாழ்த்துரைக்க, கவிஞர் கலைபாரதி, கவிஞர் சாய்மீரா இருவரும் நூல் குறித்தான அறிமுக உரையினைச் செழுமையுடன் ஆற்றினார்கள்.

தொல்லியல் ஆர்வலர் கௌரே இ. கணேசன், கவிஞர்கள் வலங்கைமான் நூர்தீன், ஆங்கரை பைரவி, தமிழ்ப்பிரியன், துவாரகா சாமிநாதன், ஆடலரசன், தேவரசிகன், செருகுடி செந்தில், மா. செல்வகுமார், கவிஞர்கள் குழலி குமார், குடந்தை அனிதா, சாய் மீரா, குடந்தை பிரேமி, புவனா, தாரா மற்றும் பலரும் ஆர்வமுடன் நிகழ்வினில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தலைமை உரையாற்றிய கவிஞர் கோ. கலியமூர்த்தி :
சொல்வெளி இலக்கியக் கூடம் இயங்குகிற கும்பகோணம் நகரமானது, தமிழின் படைப்பாற்றல் பிதாமகன்கள் பலரும் பிறந்த மண் ஆகும். எனது கவிதை நூலான “கூடு திரும்பும் அந்தி” ஆனது சொல்வெளியின் பிறந்த வீடான “தாழ்வாரம்” இலக்கிய அமைப்பில் தான் வெளியிடப்பட்டது. சொல்வெளி இலக்கிய அமைப்பையும் கடந்த ஆண்டு தொடங்கி வைத்து உரை நிகழ்த்திய மகிழ்வான நினைவுகளும் எனக்கு உண்டு.
சொல்வெளி அரங்கினில் நூலறிமுகமாகும் கவிஞர் பழ. புகழேந்தி அவர்களின் “உதிரிலைகளில் மீந்த பச்சையம்” ஆனது, முதுமையிலும் இளம் வயது காதலையும், அந்த முதுமைக் காதலையும் இணைத்து அசை போட வைக்கும் பசுமையான நினைவுகளாகும். மிகச் சிறப்பான கவிதைத் தொகுதி.

கவிஞர் கலைபாரதி நூலின் அறிமுக உரை :
பாவேந்தர் பாரதிதாசன் தனது “குடும்ப விளக்கு” நூலின் ஒரு பகுதியில் முதியோர் காதல் குறித்து எழுதியுள்ளார். நமது கவிஞரோ முதியவர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம், இயலாமை, பதை பதைப்பு, பரிதவிப்பு போன்றவைகளுடன் பாசாங்கு இல்லாத அவர்களது காதலை “உதிரிலைகளில் மீந்த பச்சையம்” கவிதைத் தொகுப்பு முழுதுமாகத் தூவியுள்ளார்.
வாழ்ந்த வாழ்க்கையின் வசந்தங்களை மறு நினைவூட்டல் செய்கின்றன பல கவிதைகள். கவியரசு கண்ணதாசனின், “உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே உறங்க வைத்தே விழித்திருப்பாயே” என்று ஆத்மார்த்தமான வரிகளின் கவித் தெறிப்பு பழ. புகழேந்தி அவர்களின் கவிதைத் தொகுப்பிலே சிதறிக் கிடக்கின்றன. அது மட்டுமல்ல சங்க இலக்கியங்கள் ஆன பரிபாடலிலும், புறநாநூற்றிலும் முதியோர் காதல் சில பாடல்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளன. நம் சம காலத்தின் கவிஞரோ தனது நூலில் முதியோர் காதலின் வசந்தமிகு வன்னங்களையும், வற்றாத ஏக்கங்களையும் விட்டுவிடாமல் தொடுத்தியம்பியுள்ளார்.

கவிஞர் சாய் மீரா நூலின் அறிமுக உரை :
என் பால்யத்தில் தாத்தா பாட்டியைப் பார்த்து வளர்ந்தவள் நான். முதியோர்களின் எதிர்பார்ப்பு, மனதுக்குள் மருளுகின்ற இயலாமை உணர்ந்தவள். இந்நூலின் பல கவிதைகளோ எனக்கு அச்சத்தையும் மன நடுக்கத்தையும் தோன்றச் செய்துள்ளன. இந்நூலின் கவிதைகளில் வெளிப்பட்டவைகள் நாளை, என் வாழ்விலும் “உதிரிலைகளில் மீந்த பச்சையம்” ஆகலாம். உணர்வுகளின் மேலீட்டினால் எங்கேனும் அழுது விடக் கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு தான், இந்த நூலறிமுக உரையினை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
இறுதியாக சொல்வெளி இலக்கியக் கூடத்தின் அமைப்பாளர் கவிஞர் கோ. பாரதிமோகன் நன்றி உரையாற்றிட, நூலறிமுக நிகழ்வு இனிதே நடந்தேறியது.
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
Comments are closed, but trackbacks and pingbacks are open.