அரசியல் நாட்களின் வசீகர சக்தி! என் மானசீக குரு!- திருச்சி சிவா எம் பி
எல் ஜி என எல்லோராலும் அழைக்கப்பட்ட எல் கணேசன், எங்கள் போராட்டக் களங்களின் லெஃப்டினெண்ட் ஜெனரல். என் போன்றோரின் ஆரம்ப அரசியல் நாட்களின் வசீகர சக்தி! என் மானசீக குரு!
துணிச்சல், வீரம் இவற்றின் ஒட்டு மொத்த உருவம், கேட்போரை கவர்ந்திழுக்கும் கணீரென்ற தனித்தன்மை பொருந்திய வெண்கல குரல், ஆழ்ந்த கற்றறிவு, அருவி போல் ஆங்கில பொழிவு. இவர் பேசும் மேடைகளில் உடன் சென்று பேசுவதில் அளவில்லா பெருமிதம். சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகளின்போது சண்டமாருதம், இந்தி எதிர்ப்பு போர்க்களத்தின் முன்னணி தளபதியாக அவசரநிலை காலத்தில் “மிசா“ சிறைவாசியாக, 1986 குண்டு வெடிப்பு நிகழ்வில் பொய் குற்றச்சாட்டு போன்ற நேரங்களில் அவர் காட்டிய அபரிமிதமான மன உறுதி, தைரியம் அளவிட முடியாத ஒன்று. கழகத்தில் அண்ணா, கலைஞர் ஊட்டிய குடும்ப பாசத்தின் எடுத்துக்காட்டு இவரே!
அன்பு, அரவணைப்பு, இளையோரையும் சமமாக நடத்திடும் பெருங்குணம் என அண்ணனுக்கு ஈடு மற்றொருவரில்லை. அண்ணாவின் அன்பையும், கலைஞரின் நம்பிக்கையையும், கழகத் தோழர்களின் அளவற்ற அன்பையும் ஒருசேர பெற்றவர்.
சிலர் அருகில் இல்லாதபோதும், அவர்களை நினைக்கும்போதே முதலில் அவர்களின் குரல்தான் கேட்கும். அந்த வகையில் அண்ணா, கலைஞர், பேராசிரியர் வரிசையில் இவரும் ஒருவர்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை நிறைந்த வாயுடன் “என்னங்கையா எப்பிடி இருக்கீங்க,“ என்று பார்த்தவுடன் கேட்கும் குரலில் பாசம், மரியாதை, மகிழ்ச்சி எல்லாம் கலந்து இருக்கும். உடன் சுற்றுப்பயணம் சென்று திரும்பும்போது கிளம்ப நமக்கு மனமே வராது. பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இவர் அறையில்தான் கூட்டம் நிரம்பி வழியும். “I belong to his school of thought,” என்று சொல்லிக் கொள்வதில் பெருமை.
கொள்கைப் பிடிப்பும், தாய்மொழிப் பற்றும், முற்போக்கு சிந்தனையும், பொதுவுடமை சித்தாந்த ஈடுபாடும், அருவியெனப் பேச்சும், கழக உடன்பிறப்புகளிடம் தோழமை உணர்வும், எல்லாவற்றிற்கும் மேல் தலைமையிடம் கொண்ட விசுவாசமும் இவருடைய தனித்தன்மைகள்.
இவரால் இயக்கப் படை வீரர்களாய் உருவானோர் ஏராளம். அந்த தாக்கத்தின் சுவடுகள் இன்னும் உண்டு. அதில் நானும் ஒருவன். வயது 90ஐ கடந்திருக்கலாம். பிரிவென்பதும் இயற்கைதான். ஆனால் அண்ணன் எல் ஜி அவர்களின் மறைவு இந்த இலக்கணங்களுக்குள் அடங்காது.
காலையில் இந்த செய்தி செவியில் விழுந்ததிலிருந்து செயலற்று உட்கார்ந்திருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதும் அளவு நினைவுகள் அலை அலையாக!
இயக்கத்திற்கு ஒரு படைத் தளபதியின் இழப்பு, கழகத்தலைவருக்கு ஓர் அன்பு அண்ணனின் இழப்பு! எனக்கு குருவை இழந்த தவிப்பு! என் சொல்வேன்? யாருக்கு என்னால் தேறுதல் சொல்ல இயலும்? அன்பின் இருப்பிடம், பொறுமையின் வடிவம், கொள்கைவாதிக்கு கிடைத்த உற்ற துணை என் அண்ணி கமலாவின் முகத்தை எப்படிப் பார்க்க இயலும்? அவர் பெற்ற செல்வங்கள் எல் ஜி அண்ணா, மாதவி, கோயிந்தநாதன், இவர்களோடு அவரின் பிரியாத நிழலாக, இன்னலுற்ற நேரத்திலும் விலகாத உறவாக நிலைத்து நின்ற ஓட்டுநர் ராஜமாணிக்கம் இவர்களுக்கெல்லாம் ஆறுதல் எப்படி சொல்வதென தெரியவில்லை.
உடலால் அவர் இனி இல்லை. ஆனால் உணர்வால், ஊட்டிய பாசத்தால், திராவிட இயக்க கொள்கைப் பற்றால் என்றும் அவர் நம்முடனே இருப்பார்!
திருச்சி சிவா
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.