child line பரிதாபங்கள் – ஒருமாதகாலபோராட்டம் : எந்த ஜில்லா கலெக்டர் வந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது
#ஒருமாதகாலபோராட்டம்:
ஆகஸ்ட் 17 அதிகாலை 2 மணியளவில் 17 வயதுடைய பெண் குழந்தை காணாமல் சென்றது தகவல் அறிந்த பெற்றோர், கடத்திய பையன் வீட்டில் சென்று முறையிட்டனர். ஆனால் அங்கு பதில் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஏற்கனவே ஜூலை 3 ஆம் தேதி இதேபோல அதே குடும்பத்தைச் சேர்ந்த நீலா என்ற ஒரு பாட்டியின் உதவியுடன் விடுதியில் இருந்து பொய்க் கையெழுத்து போட்டு அழைத்துச் செல்லப்பட்ட பெண் குழந்தை, மூன்று நாள்களாக பள்ளிக்கு திரும்பாததால், பெற்றோர் அந்தப் பையன் வீட்டில் சென்று கேட்டபோது, அக்குடும்பம் குழந்தையை அனுப்ப மறுத்ததோடு அல்லாமல் குழந்தையின் பெற்றோரை அவமானப்படுத்தியும் உள்ளனர்.
குழந்தையின் தாய், என்னை அழைக்கும்போது மாலை 6.30.அப்போது தான் நம் பள்ளியின் புதிய கட்டடங்கள் கட்டிவிருக்கும் இடத்தை அனுபவித்தவர் “உன்னை சீவிட்டு போயிட்டே இருப்பேன் ” என்ற டயலாக்கைக் கேட்டு விட்டு தாசில்தாரிடம் பேசி அமர்ந்திருந்தேன். இந்தச் செய்தி வரவும் “சரி நீங்க அந்த வீட்டிற்குச் செல்லும் வழியில் வெளியில் வந்து நில்லுங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்று கூறி,வீட்டிற்கு வந்து இணையரை அழைத்துச் சென்று அங்கு சேரும்போது இரவு 7.30.
வெளியிலிருந்து நானும் அந்தக் குழந்தையின் பெயர் சொல்லி அத்தனை முறை அழைத்தும் வெளியே வரவில்லை. அந்தப் பையனின் அம்மா “அவதான் வரமாட்டேன்றால்ல உட்டுட்டுப் போவ வேண்டியது” என்று நக்கலாகப் பேச, நமக்கோ சுர்ருனு ஏறி”சரி… அப்போ குடும்பத்தோட station போலாமா?” என்று கேட்டு மொபைலையும் எடுத்தேன். அந்தப் பெண்ணை விரும்புவதாய்க் கூறிய பையன் தலையில் அடித்துக்கொண்டு “என்னை நீ ஜெயிலுக்கு அனுப்பப் பார்க்குறியா? தயவுசெஞ்சி நீ போயிடு” எனக் கத்த ஆரம்பித்தான்.

அப்போதும் அந்தப் பெண்குழந்தை வரவில்லை. நான் உள்ளே போனேன். வர முடியுமா முடியாதா என்று கேட்டேன். நான் இங்க வீட்டிலிருந்தே போய்ப் படிக்கிறேன் மிஸ் என்றாள். Hostel இல் தங்கிப் படிக்கிறாயா இல்ல home க்குப் போறியா என்றேன். அமைதியாகவே இருந்தாள். உனக்கு Free hostel கிடைக்க, ஆட்டோவுக்கு வாடகைக் கொடுக்க நான் எவ்ளோ அலைஞ்சிருக்கேன் தெரியுமா? என்றேன். மீண்டும் அமைதியாகவே இருந்தாள். வலது கையின் நான்கு விரல்களால் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன். கால்கள் சடசடவென என்னுடன் நடந்தது. மீண்டுமொருமுறை இதுபோல் நடந்தால் குடும்பம் முழுக்க station ல தான் நிப்பீங்க என்று கூறிவிட்டு வரும் போது இரவு 9.00 மணி.
எந்தத் தடங்களும் இல்லாமல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை பள்ளிக்குச் சென்று வந்தவள் 3 நாள் விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்ற போது தான் அவளை அவன் அழைத்துக்கொண்டு போனது தெரியவந்தது.
அந்தப் பெண்ணுடைய வீட்டில் அந்தப் பெண் தான் முதன்முதலாகப் பள்ளியில் காலடி எடுத்து வைத்தவள். அவள் ஒரு மெல்லக் கற்கும் குழந்தை தான். ஆனால் boost up கொடுத்து கொடுத்தே அவளை +2 வரையில் அழைத்து வந்தது எனக்கே பெரிய சவால்தான். எப்படியாவது அவளை காலேஜ் வரையும் படிக்க வைத்துவிட வேண்டுமென்பது அவளுடைய குடும்பத்தின் பெரிய ஆசையாக இருந்தது.
எனக்கோ அவள் எப்படியாவது +2 முடிக்கும் வரையில் பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருத்தலே பெரிய ஆசை. காரணம் அந்தக் குழந்தை ஹார்மோன் பிரச்சனையில் உழன்று தவித்தவள். அவளை ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் abuse ஆகாமல் மீட்டுக்கொண்டுவருவதே எனக்கு சவாலாக இருந்தது.
அதனால் தான் அவளின் +2 வரைக்குமான கல்வியில் pass,fail என்பதைத் தாண்டி அப்படி ஓர் ஆசை. அவள் காணாமல் போய் ஒரு வாரம் கழித்துதான் எனக்கு விஷயம் தெரிந்தது. உடனே 112 என்ற national helpline எண்ணைத் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை நாடினேன். அவர்களோ நீங்கள் 1098 ஐத் தொடர்புகொண்டு register செய்யுங்கள் என்று கூற, நானும் எப்போதும் போல 1098 ஐ அழைத்து நொந்து போய், இணைப்புக் கிடைக்காமலேயே ஏமாந்து வைத்தேன்.
அடுத்த வழியான மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் தலைமையைத் தொடர்பு கொண்டேன். விஷயத்தைக் கூறினேன். பெற்றோர்களை வைத்து புகார் கொடுங்கள் என்று கூற நானும் வைத்துவிட்டேன். Personal ஆக CID ஒருவரிடம் உதவிக் கேட்டேன். அவரும் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திலுள்ள காவலர் ஒருவரின் எண்ணை அனுப்பினார். தொடர்பு கொண்டேன்.
அப்போதுதான் அவர் அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும், பெண் காணாமற்போனது நம் எல்லை இல்லை என்பதால் வேப்பங்குப்பம் Station சென்று புகார் கொடுக்கும் படி கூறியனுப்பியதாகவும் கூறினார். ஜூலை மாதம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூற அவரும் உதவுவதாக வாக்களித்தார்.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய தேடலில் அவளின் பெற்றோரிடம் சனிக்கிழமைதான் பேச முடிந்தது. அந்த ஊரிலுள்ள நம் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோரிடம் கூறி, அந்தப் பெண்ணின் அண்ணனுடைய எண்ணை வாங்கி பேசினேன்.
சனிக்கிழமை இரவு 7 மணிபோல் பள்ளியிலிருந்து திரும்பினேன். பார்த்தால் அவளின் பெற்றோர் இருவரும் எதிரிலிருந்த புல்வெளியில் அமர்ந்திருந்தார்கள். அழுதார்கள்.
வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும் நாளைக்கு வந்து (Sunday) FIR copy வாங்கிக்கொள்ளும்படியும் கூறியதாகக் கூறினர். எதற்கும் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் சென்று கடத்திய பையன் குறித்து கேட்போம் என்று சென்ற போது அங்கே இருந்த காவலர் “மேடம் …girl missing ஆனது நம்ம limit இல்லாததால நம்மால எதையும் செய்யமுடியாது ” என்று கூற “Sir… ஆனா கடத்தியவன் நம்ம limit ல இருக்கானே ?” என்று கேட்டபோது பதிலில்லை.
அடுத்த நாள் FIR வாங்கிப் பார்த்தேன்.பெற்றோர் எழுதிக் கொடுத்த complaint கும் FIR இல் பதியப்பட்டதற்கும் தொடர்பே இல்லாதது போல் இருந்தது. கேர்ள் missing 154 cpr மட்டும் போடப்பட்டிருந்தது. Suspection என்ற இடத்தில் அந்தப் பையனின் பெயரைக் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை.
FIR copy வருவதற்கு முன்னால் அஜீத் செல்வராஜ், திராவிடப்பாண்டியன் , வளவன் அண்ணா , திருவண்ணாமலை District Collector PC, ஆரணி கோர்ட் உதவியாளர் என பலரையும் தொடர்புகொண்டு உதவிக்காக அலைந்தேன். பெண் திருவண்ணாமலை மாவட்டமாக இருந்தால் சட்டென முடித்திருக்கலாம். வேலூர் மாவட்டமாய்ப் போனதால் எதையும் செய்ய முடியாமல் கையறு நிலைக்குச் சென்றேன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து எத்தனையோ முறை child line 1098 ஐத் தொடர்புகொள்ள முயற்சித்து ஒரு முறை கூட அழைப்பு இணைக்கப்படவே இல்லை. NGO கையில் இருந்தபோதே child line மூலம் அத்தனை rescues from child labour,child marriage ,dropout children என அத்தனை நடந்திருக்கிறது. ஆனால் எப்போது அரசே ஏற்றதோ அப்போதிலிருந்து ஒரு rescue கூட என்னாலெல்லாம் செய்ய முடியவில்லை. திங்கள் காலையில் எப்படியாவது child line விஷயத்தை அம்பலப்படுத்தவேண்டும் என்று நினைத்து 1098 ஐ அழைத்தேன். கால் recording போட்டேன். என்ன அதிசயம்…call connect பண்ணாங்க. விஷயத்தைக் கூறினேன்.
அடுத்த ஒருமணி நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள ஊழியரிடமிருந்து phone. நாங்கள் நாளைக்கு வருகிறோம் என்று. Mam…pls ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தை abuse ஆவது அதிகரித்துக்கொண்டே செல்லும் என்று கெஞ்ச நானென்ன செய்வது மேடம், ஆளில்லை என்றனர்.
அடுத்த நாள் அந்தப் பையனின் தகவல்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு பையனின் வீட்டிற்குச் செல்லும் முன் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சென்று police ஐ அழைத்தால் இது சம்பந்தமா ஏற்கனவே வேப்பங்குப்பம் Station இல் FIR போட்டாச்சு. அதனால நாம எதுவும் பண்ணமுடியாது என்று JMR police station இல் கூற அவர்களும் திரும்பி சென்றுவிட்டதாக ,நான் அழைத்துக் கேட்டபோது கூறினர்.
3 வாரம் உருண்டோடியது. தேவநேயன் தோழரிடம் இறைஞ்சுகிறேன். மேல்மட்டத்திலிருப்பவர்கள் சொன்னால் மட்டுமே வேப்பங்குப்பம் SI விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை. ஆனால் மேல்மட்டம் யாரும் செவிசாய்க்கவில்லை.
3 வாரம் ஓடியது. கடந்த வாரம் சனிக்கிழமை (16.9.25) கடத்திய பையனின் எண்ணிற்கு அழைப்பு விடுக்கிறேன். Ring போகிறது. ஆனால் எடுக்கவில்லை. மதியம் போல அவன் அழைக்கிறான்.பேசுகிறேன். சட்டம் எப்படிப்பட்டது எனச் சொல்கிறேன்.
அந்தப் பையனின் அம்மா ரஞ்சனியும் அப்பா செல்வராஜும் தம்பி பிரதாப்பும் ஏற்கனவே கூறியது போல எந்த ஜில்லா கலெக்டர் வந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது என்ற வாசகத்தையும் உங்களுக்கு நாலு பேரு இருந்தா எங்களுக்கும் நாலு பேரு இருப்பாங்க என்ற வாசகத்தையும் அவனுக்கு நினைவூட்டிக் கேட்டபோது அவன் அவ்வளவு அசால்டாக கூறுகிறான் “மேடம்…அந்தப் பொண்ணுக்கு 20 வயசு ஆவுது. ஆதார் அட்டையில இருக்கு” என்றான்.
தம்பி ஆதார் அட்டையிலிருக்கிறது எதுக்குமே செல்லாதுனு உனக்குத் தெரியாதா என்று கேட்டபோது அவன் முழித்தான். அழைத்து வந்து விட்டால் உன் மனைவி, உன் குழந்தை என வாழ வழியிருக்கு. இல்லையென்றால் உன்னிடம் கைநீட்டி எல்லா போலீசும் வாங்கிட மாட்டாங்க. ஒருநேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டாங்க பா police. அவங்களை சாதாரணமா எடை போடாதே என்று சொல்லி வைத்துவிடுகிறேன்.
ஒருவாரம் கடந்து இன்றுடன் 11 நாள் ஆகிறது. இன்னைக்குக் கூட்டிவரேன் ,நாளைக்குக் கூட்டிவரேன் என்று அளந்தவன் இன்று அவனாக வந்தானோ இல்லை காவல்துறை வரவைத்ததோ தெரியவில்லை.
வந்திருக்கிறான். வந்தவன் பெண்ணின் ஆதாரில் இருக்கும் வயதைக் காண்பித்ததும் ஜமுனாமரத்தூர் காவல் ஆய்வாளர் திரு .சங்கர் SI அவர்கள் அதையே ஏற்றுக்கொண்டு பேச, அந்தப் பையனின் மனைவியிடம் “இந்தாம்மா உன் புருஷனைக் கண்டுபிடிச்சி கொடுக்கச் சொன்ன. கொடுத்துட்டோம். கூட்டிட்டுப் போய் உங்க வீட்ல வச்சிப் பேசிக்கோங்க” என்று கூறியது நம் காதுக்கு வர,
மறுபடியும் போளூர் கோர்ட், திருவண்ணாமலை கோர்ட், தேவநேயன் தோழர்,நீ தியரசர் சந்துரு என ஒவ்வொருவராக அழைத்து ஆதாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற விஷயத்தை SI இடம் கூறுமாறு வேண்ட, அவர்களும் அவ்வண்ணமே செய்யத் தொடங்கி, அதற்கு இடையில் பெண்ணின் டி ஐத் தேடி எடுத்து , காவல் நிலையத்தில் இருக்கும் ஒருவருக்கு அனுப்ப அதன் copy கிடைக்கப்பெற்றதும் வேப்பங்குப்பம் SI இடம் பெண்ணின் பெற்றோர் முன்பு பையனையும் பெண்ணையும் ஒப்படைத்துள்ளனர். எங்கே அவனுக்குத் தண்டனை தராமல் விட்டுவிடுவார்களோ என்ற பயமும் கவலையும் மேலிடுகிறது. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை இருப்பவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான் என்றால் அதுவும் அவனுடைய மொத்தக் குடும்பமும் இதற்கு உடந்தையாக இருக்கிறது என்றால் அவர்களை எப்படி சும்மா விடுவது ? இன்னும் எத்தனை பெண்ணை அவன் இப்படி ஏமாற்றுவான் ? அந்தப் பையனின் அம்மா காவல் நிலையத்தில் வைத்துக் கூறுகிறாளாம் ” இன்னும் எத்தனை பொண்ணை என்பையன் கல்யாணம் பண்ணி வந்தாலும் அத்தனை பொண்ணுங்களையும் வச்சி நான் பார்த்துக்குவேன்” என்று. அவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தமிருக்கும்? ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தப் பொண்ணை அவனுடன் வாழ விடாமல் விரட்டியடித்து விட்டு, இப்படி சொல்ல அவளுக்கு எவ்வளவு கொழுப்பிருக்கும்?
ஒரு மாதகாலம் ஒரு பெண் குழந்தையின் கல்வியைத் திருமணமான ஒரு பையன் வேட்டையாடுகிறானே என்ற கோபமும் வலியும் லேசானது அல்ல. நொடிப்பொழுதில் அத்தனை குழந்தைத் திருமணங்களை நிறுத்தியவளால் இன்று ஒரு பெண் குழந்தையை மீட்க முடியவில்லையே என்ற வலி இந்த 1098 இன் மீதும் காவல்துறையின் மீதும் பீறிட்டு வருகிறது.
ஜவ்வாது மலையில் மட்டும் தற்போது அவ்வளவு குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல் நிலையத்திற்குச் சென்றால் அவ்வளவு மெத்தனமாகப் பதில் கூறுவதாகப் பெண் குழந்தைகளின் பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைத் திருமணங்கள் குறைந்திருந்தது. தற்போது வந்த அனைத்து முகூர்த்தங்களிலும் மலையடிவாரத்திலிருக்கும் ரேணுகாம்பாள் கோயில், தீர்த்தமலை கோயில், ஆலங்காயம் அருகிலுள்ள ஒரு கோயில், அத்திப்பட்டு முருகன் கோயில், நம்மியம்பட்டு அருகிலுள்ள மச்சூர் கோயில் என அத்தனை இடங்களிலும் மிகச் சாதாரணமாக குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தயவு செய்து 1098 எனும் child line ஐ ஏதாவது ஒரு NGO இடமே ஒப்படைத்து விடுங்கள்.
குழந்தைகள் தொடர்பான அத்தனை ஆணைகளும் சட்டங்களும் திட்டங்களும் கிடப்பிலேயே போட்டுவிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் காவல்துறையை எச்சரிக்கும்படி வேண்டுகிறேன்.
Maha Lakshmi
ஆசிரியர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.