புதிய குவாரி திறக்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள் !
புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்க கள ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புக்குள்ளானது பெரியகுளம் – குள்ளப்புரம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, குள்ளபுரம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், கிரஷர்கள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக கல்குவாரி திறக்க ஆய்வுக்குச் சென்ற கனிமவளத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குள்ளப்புரத்தில் செயல்பட்டு வரும் 10 குவாரிகளையும் மூட வேண்டும் என்றும்; பெரியகுளம் சப்-கலெக்டர் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த குவாரிகளில் ஆய்வு செய்து பாதிப்புகள், விதிமீறல்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரால்டு அலெக்சாண்டர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த பின்னணியில்தான், இருக்கும் குவாரிகளையே மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ள நிலையில், அதே பகுதியில் மீண்டும் புதிய குவாரிகளை அனுமதிப்பதற்காக, ஆய்வு செய்வதற்காக வந்திருந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
— ஜெய்ஸ்ரீராம்.