வெள்ளாளர் சமூகம்! சாதிக்காகவா? அரசியலுக்காகவா?
வெள்ளாளர் சமூகம் ! சாதிக்காகவா ? அரசியலுக்காகவா ? Dr.V.J. செந்தில்
ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், எதிர்வரும் ஜூலை 13 அன்று, திருச்சி பொன்மலை ஜி கார்னரில் “இன எழுச்சி சமுதாய மாநாடு” ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒரு மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் மாநாடு நடத்தப்படுவதற்கான நோக்கம் குறித்த கேள்விகளோடு, இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மருத்துவருமான டாக்டர் வி.ஜே.செந்திலுடன் அங்குசம் சார்பில் கலந்துரையாடினோம்.
திருச்சியில் பிரபலமான ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான வி.ஜே.செந்தில், பிஸியான மருத்துவர் என்ற அடையாளத்தையும் தாண்டி, தனது தாத்தா ஜி.விஸ்வநாதன், தந்தை ஜெயபாலை தொடர்ந்து வளரும் இளம் அரசியல்வாதியாகவும் தமிழகத்தை வலம் வருகிறார். மாலையில் வேலூர், இரவு திருச்சியில் தனது மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை இதற்கு இடையில் சமூக மக்களை ஒருங்கிணைக்கும் பணி என்பதான பரபரப்புக்கு மத்தியில் மருத்துவர் வி.ஜே.செந்திலை சந்தித்தோம்.

”இது முழுக்க முழுக்க சமுதாய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாநாடுதான். அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமெல்லாம் கிடையாது. எங்களது சமுதாயத்திலேயே, 42 உட்பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள். ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒரு சங்கம் அதற்கு ஒரு தலைவர், செயலர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒரே வேளாளர் சமூகமாக ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த மாநாட்டை நடத்த விருக்கிறோம்.” என்கிறார்.
தற்போதைய அரசியல் சூழலில், வேளாளர் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரதிநிதித்துவம் தற்போது இல்லை. எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாக, அமைச்சர்களாக இல்லாதிருப்பது எங்களுக்கு ஏக்கமாகத்தான் இருக்கிறது. திருச்சியில் எங்கள் சமுதாயம் அடர்த்தியாக உள்ள நிலையில்கூட, எங்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் பல்வேறு உட்பிரிவுகளாக பிரிந்திருப்பது ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
42 பிரிவுகளாக பிரிந்திருந்தாலும், நாங்கள் அனைவரும் வேளாளர் – வெள்ளாளர் சமூகம்தான். தமிழகம் முழுவதும் எப்படியும் இரண்டு கோடிக்கும் மேலான சமூக மக்கள் இருக்கிறார்கள். முதலில், எங்களுக்குள் ஒருங்கிணைப்பு வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறோம்.” என்றார்.
மேலும், “சாதிவாரி கணக்கெடுப்பு இன்றைய சூழலில் அவசியமானது” என்பதை வலியுறுத்தும் டாக்டர் செந்தில், 42 உட்பிரிவுகளையும் உள்ளடக்கி அவற்றை வேளாளர் – வெள்ளாளர் என்ற பொது வகைப்பாட்டின் கீழ் வகைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கிறார். இந்த பிரிவுகளின் காரணமாக, தங்களது உட்பிரிவுகளில் சிலர் முற்பட்ட வகுப்பினராகவும், பெரும்பாலான பிரிவுகள் பிற்பட்ட வகுப்பினராகவும் சாதிய ரீதியில் வகைப்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி, இந்த முரண் களையப்பட வேண்டும் என்கிறார்.

அரசியல் கட்சிகளைப்போல, தலைவர், செயலர் என்ற பதவிகளையே தவிர்த்திருப்பதாகவும், சங்கங்களின் ஒருங்கிணைப்பு என்ற வகையில், ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை மட்டுமே பிரதானபடுத்தி வேளாளர் சமூகங்களை ஒருங்கிணைத்து வருவதாகவும் குறிப்பிடும் செந்தில், “தலைவர் என்று நியமித்துவிட்டால், அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி தனிப்பட்ட ஆதாயம் பெறும் நோக்கில் சங்கத்தை பயன்படுத்திவிடும் சூழல் இருக்கிறது.
குறிப்பிட்ட உட்பிரிவில் ஒரு தலைவர் இருக்கிறார் எனில், அவருக்கு அடுத்து அதே உட்பிரிவில் உள்ளவர்கள்தான் தலைவராக வேண்டுமென்ற சிந்தனையும் மேலோங்கிவிடும். இதையெல்லாம் தவிர்க்கவே, ஒருங்கிணைப்பாளர் என்ற அளவில் இந்த கூட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.
யாரும் எந்த சூழலிலும் சமுதாயத்தின் ஒற்றுமையை காட்டி தனிப்பட்ட ஆதாயம் அடைந்துவிடக்கூடாது என்பதே இதன் நோக்கம். மற்றபடி, சமுதாய மக்களின் முன்னேற்றம், அவர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சி குறித்து அதற்காக இந்த சங்கமும் அதன் ஒருங்கிணைப்பும் பாடுபட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.” என்கிறார்.
நிறைவாக, ”ஜூலை-13 அன்று நடைபெறும் மாநாட்டில், தமிழகத்தின் 18 ஆதீனங்களும் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். சில முன்னணி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டாலும், அவர்களும்கூட எங்களது சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற என்பதிலிருந்தே பங்கேற்கவிருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக இல்லாமல், பல்வேறு பிரிவுகளாக பிரிந்துகிடக்கும் எங்களது சமூகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் அவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் நடத்தப்படும் மாநாடு” என்பதாக தெளிவுபடுத்துகிறார், மருத்துவர் வி.ஜே.செந்தில்.
முழுமையான வீடியோவை காண :
வெள்ளாளர் சமூகம் ! சாதிக்காகவா ? அரசியலுக்காகவா ? Dr.V.J. செந்தில்
— நேர்காணல் : வே.தினகரன்.