அங்குசம் பார்வையில் ‘கூலி’
தயாரிப்பு : ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன், டைரக்ஷன் : லோகேஷ் கனகராஜ், ஆர்ட்டிஸ்ட் : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், செளபின் ஷாகிர், உபேந்திரா, ரெபா மோனிகா ஜான், காளிவெங்கட், கண்ணா ரவி, மோனிஷா ப்ளெஸ்ஸி, சார்லி, ரச்சிதா ராம், லொள்ளுசபா மாறன்,திலீபன், ரிஷிகாந்த், பூஜா ஹெக்டே [ மோனிகா பாடலுக்கு மட்டும் ] ஒளிப்பதிவு : கிரிஷ் கங்காதரன், எடிட்டிங் : பிலோமின் ராஜ், இசை : அனிருத், ஸ்டண்ட் : அன்பறிவ், டான்ஸ் : சாண்டி, கூடுதல் திரைக்கதை : சந்த்ரு அன்பழகன், பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் ரியாஸ்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டணம் துறைமுகம் வழியாக தங்கக் கடிகாரம் ஏற்றுமதி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் இதயத்தை அறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொடூர வேலையைச் செய்கிறார் பிரபல தாதா சைமன் [ நாகார்ஜுனா]. இந்த வேலையை முன்னின்று செய்பவர், சைமனின் நம்பிக்கைக்குரிய அடியாள் தயாள் [ செளபின் ஷாகிர்].

பிரபல ஆராய்ச்சியாளர் ராஜசேகர் { சத்யராஜ்] மின் தகன இரும்பு நாற்காலி ஒன்றை கண்டுபிடிக்கிறார். இதை அரசாங்கம் ரிஜெக்ட் செய்துவிடுகிறது. இதைத் தெரிந்து கொண்ட சைமைன் கும்பல், இதயத்தை அறுத்தெடுத்த பின் தங்களிடம் இருக்கும் நூற்றுக் கணக்கான பிணங்களை எரிக்க, சத்யராஜையும் அவரது மகளையும் [ ஸ்ருதி ஹாசன் ] மிரட்டி மின் தகன நாற்காலி டெக்னாலஜியைப் பயன்படுத்தி பிணங்களை எரித்து சாம்பாலாக்கும் பகீர் வேலையை தொடர்ந்து செய்கிறது.
இந்த நிலையில் தான் தனது ஆருயிர் நண்பன் ராஜசேகர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்ட அதிர்ச்சித் தகவல் கிடைத்து விசாகப்பட்டணம் செல்கிறார் சென்னையில் மேன்சன் ஒன்றை நடத்தும் தேவா [ எ] தேவராஜ். அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார். நண்பனின் சாவு இயற்கையானது அல்ல, அது கொலை என்பதைத் தெரிந்து நாகார்ஜுனா கும்பலைப் பழி[லி]வாங்க ஸ்ருதியுடன் கிளம்புகிறார் ரஜினி.
க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா ரசிக மகா ஜனங்களே…
சினிமாவுக்கு வந்து பொன்விழா[50]ஆண்டில் இன்றும் ’சூப்பர் ஸ்டார்’ நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் ஆகப்பெரிய ஆளுமை ரஜினிகாந்தின் பவளவிழா [ 75 வயது ] ஆண்டில் ரிலீசாகியிருக்கும் இந்த ‘கூலி’யில் ஒன்றிரண்டு சீன்கள் தான் ரஜினிகாந்தின் டிரேட் மார்க் சீன்களாக இருக்கு என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அவரது எண்ட்ரி சீன் மாஸாக இல்லை என்பது தான் உண்மை. இதெல்லாமே சூப்பர் ஸ்டாருக்கும் தெரியும் என்பதும் உண்மை. மேன்ஷனில் இரண்டு கைகளில் கறிவெட்டும் ஸ்டீல் கத்தியுடன் வருவதெல்லாம் ரஜினியின் தீவிர ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.
தனது ‘5821’ கூலி நம்பர் ஃப்ளாஷ் பேக்கை நாகார்ஜுனாவிடம் சொல்லும் சீனில் ரஜினி என்கிற மகாநடிகனின் முகபாவனைகள் ரொம்ப ரொம்ப ரசிக்க வைக்கின்றன. அதே போல் ஸ்ருதி ஹாசனிடம் அவர் காட்டும் பாசம், பரிவு, அக்கறை நம்மை கண்கலங்க வைக்கிறது. என்ன ஒண்ணு ஸ்ருதியின் அப்பாவாக சத்யராஜ் வரும் சீன்கள் பெரும்பாலும் குறைவு, அதுவும் கூட மாண்டேஜ் பாணியில் போய்விட்டது பரிதாபம்.
படத்தில் செளபின் ஷாகிரும் ஸ்ருதியும் தான் நம் மனதில் ஒட்டுகிறார்கள். ஸ்ருதியை முக்கால்வாசி சீன்களில் பதட்டத்திலேயே ஓட வைத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
இந்தக் கூலியில் நமக்கு பெருத்த சந்தேகம், படம் முடிந்து பலமணி நேரமாகியும் தீராத சந்தேகம் என்னன்னா… இதுல நாகார்ஜுனா எதுக்கு? உபேந்திரா எதுக்கு? அமீர்கான் எதுக்கு?
ஹலோ லோகேஷ் கனகராஜ் பிரதர்… எங்களையெல்லாம் பார்த்தா எப்படியா தெரியுது உனக்கு? 50 ஆண்டுகளுக்கு முன்னால, அதாவது ரஜினி சினிமாவுக்கு வந்த புதுசுல டைரக்டர் எம்.கர்ணன், இதைவிட பக்காவா படம் எடுத்துட்டுப் போய்ட்டாரு. ஆனா நீங்களோ.. நல்ல அழுத்தமான கதையையும் அதற்குண்டான திரைக்கதையையும் நம்பமால், இந்த மாதிரி மல்டி லாங்குவேஜ் ஸ்டார்களையும் காட்டுக் கத்தல் ஃபேமஸ் அனிருத்தையும் காஸ்ட்லியான மேக்கிங்கையும் மட்டுமே நம்பிக்கிட்டே இருந்தா சீக்கிரமே உங்களுக்கு ரிடையர்மெண்ட் ’கூலி’ கிடைக்கும்.
சூப்பர் ஸ்டாரின் பொன் விழா ஆண்டில் வெளியாகியிருப்பதால், அவருக்காகவும் அவரின் எளிய குணத்திற்காகவும் இதற்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை. விமர்சிக்க ஆரம்பித்தால் சீனுக்கு சீன் நார்நாராக கிழித்து லோகேஷ் கனகராஜை டோட்டல் டேமேஜாக்கிவிடலாம்.
சூப்பர் ஸ்டாரின் வெறித்தனமான ரசிகர்களுக்கே சுமாரான கூலி தான். அனைத்து வயதிலும் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் அபிமானிகளுகோ சேதாரம் அதிகம்.
— மதுரை மாறன்