தீபாவளி என்றாலே, பட்டாசுதான். விலை மலிவான பட்டாசை கம்பெனியிடமிருந்தே நேரடியாக வாங்கலாம் என்பதாக, வாட்சப் , பேஸ்புக் , இன்ஸ்டா போன்ற தளங்களில் வெளியான புரோமோஷன் வீடியோவை பார்த்து , போலி பட்டாசு நிறுவனத்தில் பல கோடி ரூபாயை இழந்து பட்டாசு கனவு புஸ்வானமாகி விவகாரம் போலீசு கேசு வரை போயிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளுயன்சர் பாலாஜி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ என்ற பக்கத்தின் மூலம் லோக்கல் பாஷையில் பேசி அப்பகுதியில் பிரபலமாகி வருகிறார்.
பாலாஜி அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோரின் காமெடி ரீல்ஸ்களை பார்த்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இணைந்து இருக்கிறார்கள்.
அப்படி ஒரு பாலோயர் கடந்த மாதம் ”பாண்டியன் கிராக்கர்ஸ்” பட்டாசு கடையின் ஓனர் பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டவர், தம்பி! நீங்க ரொம்ப சூப்பரான ரீல்ஸ் போடுறீங்க , அப்படியே நம்ம பட்டாசு கம்பெனிக்கும் இந்த தீபாவழி கொண்டாட “பாண்டியன் பட்டாசு இருக்கு ” என புரோமோட் செஞ்சு கொடுத்தா நல்லா இருக்கும். அதுக்கு பெமெண்ட் பேசிக்கலாம்” என ப்ரமோஷன் வீடியோ செய்யச் சொல்லிக் கேட்டுள்ளார்.
அதற்கு ஓகே சொல்லி ஒப்பந்தமான பாலாஜியின் G-Pay எண்ணிற்கு 35 ஆயிரம் ருபாய் வந்து சேர்ந்தது. உடனே பாண்டியன் கிராக்கர்ஸின் வெப்சைட் மற்றும் பட்டாசு ஆர்டர் ஃபார்முலா குறித்து அலசி ஆராய்ந்து அந்நிறுவனம் உண்மைதான் என எண்ணி புரோமோட் செய்து வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில், இந்த வாட்ஸ் ஆப் எண்ணில் ஹாய் மெசேஜ் அனுப்பினால், வெப்சைட் லிங்க் ஷேர் செய்யப்படும். அதை கிளிக் செய்தால் காம்போ பேக், கிப்ட் பேக் என ரகம் ரகமாக பட்டாசு வெரைட்டிகள் லிஸ்டில் காட்டும். அதில் எது வேண்டுமோ , அதை card செயது வெப்சைட்டில் வரும் QR Code – ஐ ஸ்கேன் செய்து பெமெண்ட் அனுப்பி வைத்தால், வழங்கிய தேதியில் வீட்டிற்கே பட்டாசு டெலிவரி செய்யப்படும் என விளம்பரம் செய்துள்ளார் பாலாஜி.
இந்த விளம்பரத்தைப் பார்த்த இவரது ஃபாலோயர்ஸ்கள் பலர் “பாண்டியன் கிராக்கர்ஸ்க்கு ரூ 2000 முதல் 10 ஆயிரம் வரை பணம் செலுத்தி பட்டாசுக்கான ஆர்டர்களை எடுத்து வந்தனர். மேலும், புரோமோஷன் செய்த பாலாஜியும் புரோமோஷனுக்காக பெற்ற தொகையான 35 ஆயிரத்தில் , 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி பட்டாசு ஆர்டர் பெற்றுள்ளார்.
தீபாவளி நெருங்கியும் பட்டாசு வராததால், சந்தேகமடைந்த ஃபாலோயர்ஸ்கள் ‘பாலாஜி இருக்காரா’ என்று பாலாஜி வீட்டின் கதவை தட்டியும் ,தொடர்பு எண்ணிற்கும் அவரிடம் விவரத்தைக் கூறியுள்ளனர்.
அதிர்ந்த போன “பாலாஜி” அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது , ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதையடுத்து அவர்களது இணையதளம் சேவையும் இல்லாதது கண்டு அதிர்ந்து போனவர், ஃபிஷிங் மோசடியில் தான் சிக்கியதை உணர்ந்த பாலாஜி , அக்டோபர் 18 அன்று இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் “மாவட்ட எஸ்பி இருக்காரா ? ” என கதவை தட்டி , திட்டமிட்டு போலி வெப்சைட் தொடங்கி பட்டாசு விற்பனை என்ற பெயரில் எங்களிடம் ஏமாற்றி பல லட்சக்கணக்கில் சுருட்டியதாகவும் அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று எஸ்பியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரை போலவே . திருவண்ணாமலை சேர்ந்த “ஆவின் முருகன்” என்பவரும் சிவகாசி “அய்யனார் கிராக்கர்ஸ்’ என்னும் பட்டாசு நிறுவனத்தில் 7 500 ரூபாய்க்கு பணம் அனுப்பி காம்போ ஆர்டர் செய்துள்ளார். வெறும் 2000 ரூபாய்க்கு மதிப்பிலான பட்டாசுகளை அனுப்பி ஏமாற்றிவிட்டதாக, அந்த நிறுவனத்தின் எண்ணிற்கு தொடர்ந்து முயற்சிக்கும்போது தன்னுடைய எண்ணை பிளாக் செய்துவிட்டதாகவும் மற்ற எண்ணில் அழைத்தாலும் பதிலளிக்காமல் துண்டித்து விடுவதாகவும் தனது முகநூல் பக்கத்தில் தான் ஏமாற்றப்பட்டதை ஆதங்கத்தோடு பதிவிட்டுள்ளார் .
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,‘பாலாஜி இருக்காரா’ தவிர பெங்களூரு ‘அம்மாவா ட்ரோல் – வேலூர் ‘பன்னீர் செல்வம்’ – ‘வேலூர் 2.0 , போன்ற இன்ஸ்டா பக்கங்கள் உட்பட தமி்நாடு ஆந்திரா – கர்நாடகாவிலும் “பாண்டியன் கிராக்கர்ஸ்” கும்பல் பட்டாசு விளம்பரம் செய்து தங்களது கைவரிசையை காட்டியது கண்டுபிடித்துள்ளோம்.
மேலும், பாண்டியன் கிராக்ஸ் கும்பல் இதுவரை சுமார் 10 கோடிக்கும் மேல் ஏமாற்றியதை கண்டறிந்துள்ளதாகவும்; ஆன்லைனில் தெரியாத வெப்சைட்டை நம்பி பட்டாசு ஆர்டர் செய்ய வேண்டாம். இதுபோன்ற போலி நிறுவனங்களுக்கு புரோமோஷன் செய்து மக்களை பலிகடாக்க வேண்டாம் எனவும்; யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, அல்லது சைபர் கிரைம் இலவச எண் 1930 வாயிலாகவோ , சைபர் கிரைம் புகாரளிப்பு இணையதளம் www.cybercrime.gov.in வாயிலாகவோ புகார் அளிக்கலாம்’’ என கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் போர்வையில், டுபாக்கூர் கும்பல் போலி முகவரி கொடுத்து” பட்டாசு SCAMMER’S ” நடத்தி நிஜ பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் . மற்றும் பட்டாசு பிரியர்களுக்கு ஃபயர் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— மணிகண்டன்










Comments are closed, but trackbacks and pingbacks are open.