அதிமுகவுக்கு ஆபத்து , 2036 வரை நம்ம ஆட்சிதான் ! ஸ்டாலின் ஆருடம்..!
பாஜக வால் அதிமுகவுக்குதான் ஆபத்து . 2026 நாம்தான் 2036 வரை நம்ம ஆட்சிதான் …
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேற்று மாலை 5 மணிக்கு மாவட்ட எல்லையான மாதனூர் வந்தடைந்தார் அங்கிருந்து ஆம்பூர். வாணியம்பாடி ஜோலார்பேட்டை திருப்பத்தூர் வரை சுமார் 40 கிலோமீட்டர் ரோட்ஷோ நடத்தினார் , இரவு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் 9 அடி வெண்கலச் சிலையை திறந்து வைத்து 65 அடி உயர கம்பத்தில் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்பு
இன்று ஜூலை 26+ காலை .ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 273.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கியும் , மாவட்டத்தில் ரூ.174.39 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் ரூ.68.76 கோடி மதிப்பீட்டிலான புதிய பணிகளுக்கு தொடங்கி வைத்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின்,
தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக’ சொல்லியிருக்கிறது.
இந்தியாவின் ஜி.டி.பி-யில் நம்முடைய பங்கு 9.21 விழுக்காடு. அதாவது, இந்திய நாட்டின் வளர்ச்சியில் 10 விழுக்காட்டை கொடுத்து வருகிறோம்.
சமூக முன்னேற்றக் குறியீடுகளிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்திலும் முதலிடம். வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் 2-ம் இடம், நீடித்த வளர்ச்சி மற்றும் மருத்துவ குறியீட்டில் 3-வது இடம்., பணவீக்கம் குறைந்த மாநிலமாக இருப்பது நம்ம தமிழ்நாடுதான் . இந்தியாவிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
வேளாண் துறையில் பாசனப் பரப்பையும், உற்பத்தியையும் அதிகரித்திருக்கிறோம். அதனால் தொழிலாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம், அதிகமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கிறது.
அதற்கு காரணம் நகரப் பகுதி மாதிரியே கிராமப் பகுதிகளும் வளர்ந்தது. நான் கோட்டையில் இருந்து கொண்டு மட்டும் பணிகளை செய்யவில்லை. மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று மாவட்டங்களுக்கு செல்கிறேன் . இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர், இப்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்.
இன்று காலையில்கூட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என்னத் தேவைகள் இருக்கிறது என்று கேட்டேன். அதில் 5 முக்கியமான அறிவிப்புகளை இப்பொழுது வெளியிடப் போகிறேன்.
1 . ஆலங்காரயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழக்கூடிய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் மருத்துவ வசதிப் பெறவும், வேளாண் பொருள்களை விற்பனைச் செய்யவும் ரூ.30 கோடி செலவில் 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்படும்.
2. குமாரமங்கலம் பகுதி மக்களுக்குச் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்கின்ற வகையில் அந்தப் பகுதியில் ரூ.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
3. நல்லகொண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவையொட்டி 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
4 .திருப்பத்தூர் நகர மையப் பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் ரூ.18 கோடி செலவில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படும்.
5. ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்.
இந்த மாவட்டத்திற்கு மட்டும் ரூ.517 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை இந்த விழாவின் மூலம் வழங்கியதாக அறிவித்தவர் கூட்டத்தை பார்த்து விட்டு , நமது மூத்த அமைச்சர் அண்ணன் துரைமுருகன் சொன்னது போல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது கூட நான் இதுபோன்ற ஒரு கூட்டத்தை கண்டதில்லை என்றார். இந்த வரவேற்பைப் பார்க்கின்ற பொழுது கொஞ்சம் இறுமாப்போடு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் 2026 மட்டுமல்ல 31 ஆக இருந்தாலும், 36 ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் தமிழ்நாட்டை ஆளப் போகிறோம், என்றவர்
ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசால் கூட தமிழ்நாட்டில் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தில் இருக்கின்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது ,தெரியுமா? நம்மளை மதம், சாதியால் பிளவுபடுத்த முயற்சி செய்து முடியாததால், மிஸ்டு கால்’ கொடுத்துப் பார்த்தார்கள். அதுவும் முடியாமல் போனதால், கடவுளின் பெயரை `மிஸ் யூஸ்’ செய்கிறார்கள். அரசியல் லாபத்துக்காக , இவர்களின் `போலி பக்தி நாடகத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இது தமிழ்நாடு. தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் மீட்ட மண். அனைத்து மதத்தினரும், தங்கள் உரிமைகளோடு பிற மதத்தினருடன் நல்லிணக்கத்துடன் வாழுகின்ற மண் இது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.
கடந்த 4 ஆண்டுக் காலத்தில், தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3,000 திருக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். ரூ.84 கோடியில் தேவாலயங்களையும், மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் திமுகவின் திராவிட மாடல்.
தமிழ்நாட்டு மக்களை தங்களால் பிரிக்க முடியாததால் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மண்ணுக்கெதிராகப் பின்னப்படுகின்ற சதி வேலைகளைப் புரிந்து, தமிழினத்துக்கு எதிரானவர்களுக்கும், எதிரிகளுக்கும், துணைபோகின்ற துரோகிகளுக்கும் ஒருசேரச் சிறப்பான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எவ வேலு , காந்தி , எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், அண்ணாதுரை, கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள். தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் ஷர்மா மற்றும் கலெக்டர் சிவ சவுந்திரவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
– மணிகண்டன்