இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய இறையாண்மையையும் காக்கின்ற … சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் !

0

சாம்சங் தொழிலாளர்களே ! உங்களின் தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இருங்கள் ! உழைக்கும் வர்க்கம் உங்களுடன் நிற்கின்றது! யாசித்துப் பெறுவதல்ல தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை!

தொழிலாளர் வர்க்கத்தின் தியாகத்தால் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை விட்டுக் கொடுக்கச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

இந்திய தலைநகரம்  அருகில்  போராடுகின்ற தொழிலாளர்களுக்கு ஆதரவாக வீதியில் “உரக்க பேசு” (Halla Boll) என்ற நாடகம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. வீதி நாடக நிகழ்வில்  கூலிப்படைத்  தாக்குதல் நடத்தியது.  வீதி நாடக கலைஞர் சப்தர் ஹாஷ்மி அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நாள் ஜனவரி 1, 1989.  அடுத்த நாள் அவர் உயிர் பிரிந்தது.

அவர் மரணம் நிகழ்ந்த இரண்டே நாட்களில் அதே இடத்தில் அவரின் கலைக் குழு “உரக்க பேசு” (Halla Boll) என்ற அதே நாடகத்தை நிகழ்த்தயது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

சப்தர் ஹாஷ்மி மனைவி மாலாஸ்ரீ ஹாஷ்மி அவர்கள், தனது கணவரின் துயரமான மரணம் தந்த வலியைத் தாங்கிக் கொண்டு குழுவுடன் பங்கேற்று நடித்தார். அவரின் நெஞ்சுறுதி போற்றத்தக்கது.

samsung2பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று சப்தர் ஹாஷ்மி தியாகத்தைப் போற்றினர். தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இறந்தது ஒரு வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மி.  இந்தியா முழுக்க பிறந்தது தொழிலாளர் வர்க்கத்தின் ஆயிரமாயிரம் வீதி நாடகக் குழுக்கள்.

முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தொழிலாளர் வர்க்கம் உள்ளாகும் போது சமூகத்தின் இதர பிரிவு மக்கள் அமைதி காக்க முடியாது.

நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே போராட்டம் நடக்கும் போது நடுநிலை என்று ஒன்று கிடையாது. நடுநிலை என்று சொன்னால் அது அநியாயத்திற்கே துணைபோகும்.

நியாயத்தின் பக்கம் நின்று, அநியாயத்தை எதிர்த்து கிளர்ந்தெழுவது மனித இயல்பு.

ஆளும் வர்க்கம் சிவில் சமூகத்தின் ஒப்புதலைப் பெறாமல் மக்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்வதில்லை.

சிவில் சமூகத்தின் அமைதியை ஆளும் வர்க்கம் தனக்கான ஒப்புதலாக கருதிக் கொள்கிறது என்று இத்தாலியில் பெனிட்டோ முசோலினியின் பாசிச கொடுங்கோன்மைக்கு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டு மாண்டு போன அன்டோனியோ கிராம்சி கூறினார்.

நல்லவர்களின் அமைதி கொடியவர்களின் கொடுஞ்செயலை விட கொடுமையானது என்று மார்டின் லூதர் கிங் ஜூனியர் கூறுவார். சாம்சங் தொழிலாளர்கள் யாரிடமும் யாசிக்கவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 மற்றும் 21 இந்தியர்களுக்கு தந்திருக்கும் உரிமையை அந்நிய நிறுவனம் பறிப்பதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

கண்ணியமிக்க வாழ்வுரிமையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 வழங்கியுள்ளது, அந்த கண்ணியமிக்க வாழ்வுரிமையை உறுதி செய்ய சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 தந்துள்ளது.

இந்த உரிமையை மறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அரசால் கூட இந்த உரிமையை மறுக்க இயலாது.

அந்நிய நிறுவனம் இந்திய தொழிலாளர்களை சுரண்டிப் பிழைப்பதை இனியும் அனுமதிக்க இயலாது. நியாயமான ஊதியம் பெற தொழிலாளர்கள் பேரம் பேசும் வலிமையை பெறுவதற்காகவே தங்களின் தேவைக்கு ஏற்ற சங்கத்தை சட்டப் படி அமைக்க தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கம் அமைக்க அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் முற்படும் போது அந்த நிறுவனத்தின் பெயரில்தான் அந்த தொழிற்சங்கத்தை அமைப்பார்கள்.

இது இயல்பான ஒன்று. இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரள்வது தனது இலாப வெறிக்கும், உழைப்புச் சுரண்டல் நடைமுறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக  அமையலாம் என்று அந்நிய நிறுவனங்கள் கருதுகின்றன.

நிலம், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் (Land, Labour, Capital, Organisation) இவை நான்கும் இணைந்ததுதான் நிறுவனம்.  இதில் உழைப்பே பிரதானமான பங்கை வகிக்கிறது.  நிறுவனத்தின் பெயரில் நால்வருக்கும் பங்கு உண்டென்றாலும், இதில் உழைப்பை நல்கிய தொழிலாளர்களுக்கு கூடுதல் உரிமை உண்டு.

நிறுவனத்தின் தொழிலாளர்கள், தங்களுக்கான சங்கம் அமைக்கும் போது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது ஜனநாயக மாண்புகளுக்கும், தொழில் தர்மத்திற்கும் எதிரானது.

சாம்சங் நிறுவனத்தின் ஒரு தொழிலாளி விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று பதக்கம் வென்று, உலகமே பாராட்டும் போது, அந்த விளையாட்டு வீரர் சாம்சங் தொழிலாளி என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளக் கூடாது என்று சாம்சங் நிர்வாகம் சொல்லுமா?

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பெயர் வரும், புகழ் வரும் என்றால் நிறுவனத்தின் பெயரை தொழிலாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரத்தில் நிறுவனம் பயன்படுத்தும், அதே தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக சங்கம் அமைக்கும் போது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

போராடும் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தத்   தலைமையுடன் நிர்வாகம் பேச மறுக்கின்றது என்றால் அரசு யார் பக்கம் நிற்க வேண்டும்? யாருக்கு அறிவுறுத்த வேண்டும்?

‘மாநிலத்தை விட்டு போய்விடுவோம்’ என்று அந்நிய நிறுவனம் மிரட்டல் விடுத்தால் அது அரசின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் அல்லவா?

சிலருக்கு வேலை கிடைக்கிறது என்பதற்காக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் தர மறுத்து, இந்திய மக்களின் உழைப்பை அந்நிய நிறுவனம் சுரண்டி, பெரும் இலாபம் ஈட்டுகின்ற போது, தொழிலாளர் அமைதி காக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவது மக்களாட்சி மாண்புகளுக்கு உட்பட்டதா?

தொழிற்சங்க பதிவு மாநில அரசுத் துறை சார்ந்தது. மாநில அரசு, தனது தொழில் சங்கப் பதிவுத்துறையிடம், ‘ஏன் பதிவு செய்ய மறுக்கிறீர்கள்?’ என்று கேட்க முற்படாமல், ‘நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு வாங்கி வாருங்கள் அதன் பின்னர் பார்க்கலாம்’ என்று தொழிலாளர்களிடம் கூறுவது மக்களாட்சியை கேலிச் செய்யும் செயல்.

அரசின் நடவடிக்கையும், சட்ட மன்றங்கள் இயற்றும் சட்டங்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி உள்ளதா? என்று பார்ப்பதுதான் நீதி மன்றத்தின் பொறுப்பு.

அன்றாட நிர்வாகப் பணிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை ஒரு அரசு எதிர்பார்த்துக் காத்திருப்பது, அரசின் பலவீனத்தைக் காட்டுவது மட்டுமல்ல மக்களாட்சியை பலவீனப்படுத்தும் செயல்.

ஒரு பக்கத்தில் ஆளுநர் சட்டப் பேரவை இயற்றியச் சட்டத்திற்கு “நான் கையொப்பம் இட வேண்டும் என்றால் அதை நான் செய்ய மாட்டேன்” என்று பிரகடனப் படுத்தி மக்களாட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மக்கள் இழக்கும் படி செய்கிறார்.

மற்றொரு புறம், பதிவிற்கு ஒரு தொழிற்சங்கம் வந்தால் அதைப் பதிவுசெய்ய வேண்டிய அரசின் துறை, காலம் தாழ்த்தி, அந்நிய நிறுவனம் தனக்கென ஒரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு தந்து, தொழிலாளர் உரிமையை மறுக்கும் செயலுக்கு துணை போகிறது அரசின் தொழிற்சங்கப் பதிவிற்கு பொறுப்பு வகிக்கும் துறை.

இதை விசாரித்து நிலைமையை சரி செய்ய வேண்டிய அரசு, ‘நீதிமன்றம் சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்’ என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும் செயல் அல்ல.

இத்தகைய அணுகுமுறை மக்களுக்கு மக்களாட்சி மீது உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும்.

அரசிற்கு இடித்துரைக்கும் நண்பர்கள் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசின் நிலைமை என்னவாகும் என்று திருக்குறளில் திருவள்ளுவர் விளக்கமாக கூறியுள்ளார்.

போராடும் தொழிலாளர்களுக்கும், அவர்களை வழிநடத்த, அவர்களே தேர்ந்தெடுத்த தொழிற்சங்கத்திற்கும் ஆதரவாக சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அணிதிரள வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைப் பெற்று, விடுதலைப் போராட்டத் தியாகிகளால் உருவாக்கப்பட்டும், வழிநடத்தப்பட்டும், இன்று இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கையாகத் திகழும் அமைப்புதான் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு).

சிஐடியு நடத்திய பெரும் போராட்டமே இன்றுவரை இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களை காத்து வந்துள்ளது.

தனியார் துறையில் தொழிலாளர் நலனைப் பாதுகாத்து வந்ததுடன் தொழில் வளர்ச்சி, நாட்டின் சமுக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளது சிஐடியு.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய இறையாண்மையையும் காக்கின்ற போராட்டம் என்பதை உணர்ந்து கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் நாம் அனைவரும் “தொழிலாளர் வர்க்கம்” என்று உரக்க முழங்குவோம்!

சிஐடியு தலைமையை ஏற்ற சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்கான கோரிக்கை வெல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

சாம்சங் தொழிலாளர்களே!  உங்களின் தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இருங்கள்! உழைக்கும் வர்க்கம் உங்களுடன் நிற்கின்றது.  மன உறுதியுடன் நம்புகிறோம். நாம் வெல்வோம் ஒர் நாள்!

 

– பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை .

Leave A Reply

Your email address will not be published.