40 / 40 – தட்டி தூக்கிய மு.க.ஸ்டாலின் – வாக்கு வங்கியில் சரிந்த தி.மு.க. 

0

40 / 40 – தட்டி தூக்கிய மு.க.ஸ்டாலின் – வாக்கு வங்கியில் சரிந்த தி.மு.க.   – நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் – 2024 – தமிழ்நாடு – நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றது. காலை 10 மணியளவில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. திமுக எல்லா தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் ஈரோட்டு, விருதுநகர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலைப் பெற்றிருந்தது. பாஜக கூட்டணி திருநெல்வேலி, தருமபுரி ஆகிய தொகுதிகளில் முன்னிலைப் பெற்றிருந்தது. பிற்பகல் 2 மணியளவில், திமுக கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 38 இடங்களில் முன்னிலைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதியிலும் முன்னிலைப் பெற்று திமுகவின் 40க்கு40 என்ற முழக்கத்தை முறியடித்துவிடுமோ என்ற அச்சம் தமிழ்நாடு முழுமையும் பரவியிருந்தது.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

மாலை 5 மணி நிலவரப்படி தருமபுரியில் திமுக – பாமக இடையே வெற்றிகான இழுபறி இருந்த நிலையில், திமுக முன்னிலைப் பெற்றது. பின்னர் திமுகவின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குப் பின்னரும் விருதுநகரில் காங்கிரஸ் – தேமுதிக இடையே முன்னிலை நிலவரம் மாறிமாறி வந்ததுகொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு கடைசி சுற்று எண்ணப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி சாத்தியமானது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்தாகூரிடம் வெற்றியைப் பறிக்கொடுத்தார்.

நள்ளிரவுக்கு மேல்தான் விருதுநகர் காங்கிரஸ் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் அங்கே பாஜக வேட்பாளர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் 2ஆம் முறையாக வெற்றிப்பெற்று, பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

- Advertisement -

தேர்தல் பரப்புரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையின்போது “நாடும் நமதே, நாற்பதும் நமதே” என்று கூறிவந்தார். அது நடக்காது திமுக 32 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றே புதிய தலைமுறை, தந்தி டிவி தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துகணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தலை மிகுந்த எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொண்டது. மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி பரப்புரைகள் செய்யப்பட்டன. தேர்தல் களப்பணியைத் திமுக சுறுசுறுப்புடன் மேற்கொண்டது.

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் உதயசூரியன் இல்லையே என்ற கவலையைத் தொடக்கத்தில் வைத்திருந்தாலும், வாக்குப் பதிவு தொடங்கிய சில வாரங்களுக்கு முன்பு திமுகவினர் புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைத் திமுக பெற்றுள்ளது.

2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கலைஞர் தலைமையில் இருந்த திமுக கூட்டணி 40க்கு 40 என்று வெற்றிப் பெற்ற வரலாறு உண்டு என்றாலும் அப்போது திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் 15, தற்போது 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்லி அனைத்து தொகுதிகளையும் தட்டித் தூக்கிய மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்தான். இப்படியான ஒரு மாபெரும் வெற்றியை இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எந்தக் கட்சியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

திமுகவின் வெற்றிக் கொண்டாடங்கள் முடிவுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றிருந்த சதவீத புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் புள்ளிவிவரங்கள் திமுகவுக்கு எச்சரிக்கை மணியையும் கொடுத்திருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40இல் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி 53% வாக்குகளைப் பெற்றிருந்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கூட்டணியுடன் போட்டியிட்டு 40க்கு 40யும் பெற்ற நிலையில் திமுகவின் வாக்கு வங்கி 47%ஆக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தனிப்பட்ட நிலையில் 2019 தேர்தலில் 34% பெற்றிருந்த நிலையில் 2024 தேர்தலில் 27% என்று சரிந்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் 4% வாக்கு வாங்கியைக் கொண்டிருந்த கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்த 4 வாக்குகள் திமுகவுக்கு வரவில்லை என்பதும் உறுதியாகின்றது.

நான்கு முனைப்போட்டியில் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குகள் குறைவதும், வித்தியாசங்கள் குறைவதும் இயற்கை என்றாலும் திமுக மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்தும் வலிமையான கூட்டணி அமைத்தும் வாக்கு வங்கி சரிவு என்பதை திமுக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த எச்சரிக்கை மணியாகவே பார்க்கவேண்டியுள்ளது.

திமுக கூட்டணியின் வாக்கு வாங்கி 6% குறைந்ததுள்ளது. அதில் திமுகவுக்கு மட்டும் 7% வாக்கு வாங்கி குறைந்துள்ளது. அடுத்து கலைஞர் காலம் தொடங்கி அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் இணக்கமாக இருந்த திமுக, ஸ்டாலின் காலத்தில் அப்படியான ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற முன்வரவில்லை.

4 bismi svs

2021 சட்டமன்றத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டது ஆட்சிக் வந்து 2.5 ஆண்டுகள் கடந்தும் “நிறைவேற்றுவோம்” என்ற உறுதியை திமுக வழங்காமல், “நிதி நிலை சரியானவுடன் பரிசீலிப்போம்” என்று கூறியதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் வெறுப்படைந்து, தபால் வாக்குகளில் தங்களின் கோபங்களை வெளிப்படுத்தியுள்ளதாக தபால் வாக்குகளின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

தபால் ஓட்டு
தபால் ஓட்டு

தபால் வாக்கு விவரங்கள் (பாண்டிச்சேரி நீங்கலாக 39 தொகுதிகள்)

திமுக – 1,11,150
பாஜக – 62,707
அதிமுக – 50,241
நாம் தமிழர் – 24,318
(தென்சென்னை, தேனி – இருதொகுதிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக கூட்டணி முதல் இடம் பெற்றுள்ளது)

இதில் ஒரு உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்னவென்றால் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்களும் தபால் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். பதிவான தபால் வாக்குகள் 2,48,416. இதில் மூத்தக்குடிமக்கள் 48ஆயிரத்தைக் கழித்தாலும் சுமார் 2 இலட்சம் அரசு ஊழியர்களின் வாக்குகளில், திமுக சுமார் 55%, பாஜக 31%, அதிமுக 25%, நாம் தமிழர் 12% வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இதில் திமுக கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால் திமுக மீது அரசு ஊழியர்களுக்கு இருந்த கோபத்தைக் காட்ட அதிமுகவுக்கு வாக்களித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். பாஜகவுக்கு வாக்களித்து 2ஆம் இடத்திற்கு அரசு ஊழியர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அரசியலுக்குப் புதியவர்களான நாம் தமிழரை நம்பி அரசு ஊழியர்கள் 12% வாக்குகளை அளித்திருக்கிறார்கள் என்பதைத் திமுக புரிந்துகொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசு ஊழியர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்ற எச்சரிக்கையும் இதனுள் பொதிந்து கிடக்கின்றது.

புதிய வாக்காளர்கள்
புதிய வாக்காளர்கள்

திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய வாக்காளர்கள் 9.18 இலட்சம் பேர். கடந்த 2019 தேர்தலைவிடவும் பாஜக 2024 தற்போதைய தேர்தலில் 7% வாக்கு வாங்கி உயர்ந்து 11% உயர்ந்துள்ளது. அப்படியானால் பாஜக இந்தத் தேர்தலில் 27,30,000 கூடுதலாகப் பெற்றிருக்கிறது. நாம் தமிழர் கட்சி வாக்கு வாங்கியை 1% உயத்தியுள்ளது.

இதன் மூலம் 3,90,000 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அதிமுகவும் இந்தத் தேர்தலில் 1% வாக்கு வாங்கியை உயர்த்தி சுமார் 3,90,000 வாக்குகளைப் பெற்றுள்ளது, புதிய வாக்காளர்களின் சுமார் 9 இலட்சம் வாக்குகளில் 8 மடங்கு வாக்குகளைப் பாஜகவும், ஒரு மடங்கு வாக்கை அதிமுகவும், ஒரு மடங்கு வாக்கை நாம் தமிழரும் பெற்றிருக்கின்றது.

இதன் மூலம் புதிய வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதை இப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் தேர்தலிலும் புதிய வாக்காளர்கள் சுமார் 10 இலட்சம் அளவில் இருக்கலாம் என்பதால் திமுக புதிய வாக்காளர்களைக் கவர புதிய தேர்தல் வியூகங்களை வகுக்கவேண்டும் என்பதைத்தான் திமுகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகளாக உள்ளன.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.