திமுகவின் மிகப்பெரிய பலமும்(?) பலவீனமும் (!)
திமுகவின் மிகப்பெரிய பலமும்(?) பலவீனமும் (!) அதன் ‘அறிவுரையாளர்கள்’ படை தான். கட்சியோ, அரசோ எதுவானாலும் இந்த அறிவுரையாளர் கூட்டம் ஆலோசனை சொல்ல முந்தி நிற்கும். விளைவு, பல நேரங்களில் வேண்டாத வேலையாகவும் இருந்து தொலைப்பது தான் பரிதாபம் ஆனால் என்ன செய்ய இம்மி விலகாத நடுங்காத முள்கள் கொண்ட அவர்களது தன்முனைப்பு ‘ தராசுகள் ‘ அமைதியாக இருந்து தொலைக்க முடியாது.
போகட்டும் சமீபத்திய அறிவுரை ஆலோசனை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்- திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் ஒப்பீடு. இந்த தன்முனைப்பு அறிவுரையாளர்கள் ஆலோசனை தேவையற்ற விவாத பொருளாகி இருக்கிறது.
இதைத்தான் அனுகூல சத்ரு என வடமொழி பேசுகிறது எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களின் வாய் வீச்சு விவகாரமாகி இருக்கிறது. நிதித்துறை செயலாளருக்கே தினசரியாக பொருளாதார ஆலோசனை சொல்ல இவர்கள் தயார் நிலையில் உள்ளனர். என்ன செய்ய? “அறிவாளிகள் கட்சி” என்று சொன்னால் இந்த அபத்தக் களஞ்சியங்களும் கூட வந்து தொலையும் தானே? வந்து தொலையட்டும்.

இந்த அறிஞர் தொகையறாவுக்கு ஒரு பழைய செய்தியை நினைவூட்ட விரும்புகிறேன். 1990 களில் தமிழ் தொலைக்காட்சி அரங்கில் (சன் டிவி என நினைவு ) ரவி பெர்னாட் எனும் நேர்காணல் பிரபலம் ஒருவர் இருந்தார். அப்போது காங்கிரஸ் அரசு. பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் ப. சி அவர்கள் ஒன்றிய வணிகத்துறை அமைச்சராக இருந்தார். அப்போதைய நிதி அமைச்சர் திரு மன்மோகன் சிங் அவர்கள். இந்தியா வெகு வேகமாக பொருளாதார நவதாராளமயமாக்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காலம். பெருமளவில் ஐ எம் எப் கடன் நிதி உதவி பெற முனைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. பொருளாதார தாராளமயமாக்கல் பெரும் பேசு பொருளாக இருந்தது. இடதுசாரி தோழர்கள் அதனை கடுமையாக எதிர்த்து வாதித்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சன் டிவியில் ப.சி அவர்களை ரபி பெர்னார்ட் ஒரு சிறப்பு நேர்காணல் செய்தார். நேர்காணலின் துவக்கத்திலேயே ரபி பெர்னாட் ஒரு பீடிகையோடு ‘சார், நாம் ஐ எம் எப் கடன் பெற முனைந்து நிற்கிறோமே, இது தொடர்பிலான மெக்சிகன் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி தெளிவுபடுத்திக் கொண்டுதான் இதைச் செய்கிறோமா ‘ என்று கேட்டார். அதாவது அப்போது தென்னமெரிக்க நாடான மெக்ஸிகோ மேற்படி கடன் பெற்று அதன் விளைவாக பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வதாக ஒரு பெரு விவாதம் நடந்தது அதையே ரவி பெர்னாட் தனது நேர்காணலின் துவக்க புள்ளியாக ஆக்கி இருந்தார்.
ப. சி, தெளிவான ஆங்கில மற்றும் தமிழ் மொழி விளக்கங்களை பேசுபவர் தான் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் ஒன்றிய வருவாய்த்துறையில் இடைநிலை அதிகாரியாக பணிபுரிந்தவன் என்ற வகையில் அது பற்றி எனக்கு ஒரு நேர்மறையான பார்வை உண்டுதான்.ஆனாலும் அதிகப் பிரசங்கித்தனங்களை அவர் மிகக் கடுமையாக எதிர்கொள்வார் சொல்லப் போனால் ஓரளவில் கொஞ்சம் அதிகமாக பேசுகிறாரோ என்று எண்ண வைக்கும் அவரது பேச்சு. ஆம் அதை arrogance என்று கூட துறை சார்ந்த அதிகாரிகளிடையே பேச்சு உண்டு.
அன்று அந்த நேர்காணலிலும் அது நிகழ்ந்து விட்டது. ரபி பெர்னாட் கேள்வி முடிந்ததும் ப.சி, கொஞ்சம் காட்டமாக, ‘ சிறப்பு நீங்கள் சொல்லும் மெக்சிகன் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன் நான் புரிந்து கொள்கிறேன்’ என பதில் சொன்னார். தொலைக்காட்சி விவாத நேர்காணல் சாம்ராட் க்கு சர்வாங்கமும் ஒடுங்கி விட்டது. கொஞ்சம் ஆடித்தான் போனார். அவரால் மெக்சிகோ நாட்டின் பொருளாதார சிக்கல் குறித்த எந்த தகவலையும் பேச இயலவில்லை காரணம் பலரும் பேசும் குறிப்பாக இடதுசாரி தோழர்கள் பேசிய மெக்சிகன் எக்ஸ்பீரியன்ஸ் என்ற சொல்லை மட்டும் அறிந்து பயன்படுத்தியதன் விளைவு அப்படியானது. இது ப சி அவர்கள் ஒரு அரைவேக்காட்டுத்தனத்தை எதிர் கொண்ட முறை. நினைவில் இருக்கட்டும்.
இதுதான் இங்கே சிக்கல். கடன் என்பது வளர்ச்சி பொருளாதரத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதை அறியாமல் அரசு முழுமையாக கடன் என்ற ஒன்றே இல்லாமல் செயல்பட வேண்டும் என்று நினைப்பதே ஒருவகையில் அறிவீனம் என்று மட்டும் தான் கருத முடியும்.

கொஞ்சம் எளிமையான மொழியில் சொன்னால்( இப்படிச் சொல்வது முறையில்லை தான்) கடன் இல்லாத அரசு செயல்படாத அரசு அல்லது அரசு என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதே பொருள். வருவாய் எவ்வளவோ அதற்குள்ளாக செலவழிப்பது என்பது பொருளாதார சிந்தனையே இல்லை. சிறு குறு முதலீட்டாளர்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள், அரசுகள் அனைத்தும் கடன் எனும் பகுதி இல்லாமல் இயங்குவது இல்லை இயங்க முடியாது என்பதுதான் எளிமையான உண்மை. இதன் பொருட்டு அன்றைய நேர்காணலில் ‘கடன் ஏன் முழுமையாக போய்விட வேண்டும்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
பொருளாதாரம் குறித்த குறைந்தபட்ச அக்கறை கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விவகாரம் இந்தியாவில் மாநில அரசுகள் கடன் பெற வரன்முறைகள் உள்ளன அதை மீறி அவைகளால் கடன் பெற இயலாது. அதுமட்டுமில்லை ஜிஎஸ்டி போன்ற ஒன்றிய அரசு மேலாதிக்க வரி விதிப்பு முறை வந்த பிறகு மாநில அரசுகளுக்கு தங்களது தனித்த நிதி ஆதாரங்களை உருவாக்கும் வழிவகைகள் இல்லவே இல்லை. மாநில அரசுகளின் தனித்த நிதி ஆதாரங்கள் மிகச் சொற்பமானவை. எனவே மாநில அரசுகள் தங்கள் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களை முற்றிலுமாக கடன் எனும் வழியில் மட்டுமே திரட்ட இயலும். இந்த அடிப்படை புரிதல் இல்லை எனில் பொருளாதாரம் குறித்த விவாதங்களில் காதுகளை திறந்து வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் நல்லது.
சரி, தமிழ்நாடு அரசு கடன் இல்லாத அரசாக இருக்க வேண்டும் என்பதை ஒரு பேச்சுக்காக ஏற்பதாகவே இருக்கட்டும். இதையே ஒன்றிய அரசு தொடர்பில் நாம் சொல்ல இயலுமா? ஒரு உண்மை தகவல் என்னவென்றால் மாநில அரசுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் ஒன்றியத்திற்கு இல்லை அந்த வகையில் ஒன்றிய அரசின் கடன் அதன் வருவாயின் சதவீதமாக பார்த்தால் மிரண்டு போவோம். அந்த அளவு மித மிஞ்சிய கடனில் மிதக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
இதில் வேடிக்கை இப்படி ஒன்றிய அரசு கடனில் உருவாக்கப்படும் துறைமுகங்களும், விமான நிலையங்களும்,ரயில் தடங்களும், அதானிக்கு ‘ முதலீடில்லாத ‘ நிறுவனங்களாக தாரை வார்க்க படுகிறது என்பதுதான் செய்தி.
— சுபகுணராஜன் VMS








Comments are closed, but trackbacks and pingbacks are open.