ஆசிரியர்களைக் காயப்படுத்த வேண்டாம் ! – பிரின்ஸ் கஜேந்திரபாபு
அரசால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டு, தகுதியுடன் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் சிலரின் பணிகளைப் பாராட்டி நல்லாசிரியர் விருதும் வழங்கிவிட்டு, அத்தகைய ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால்தான் இனி நீங்கள் ஆசிரியராகப் பணி செய்ய முடியும் என்று கூறுவது, ஆசிரியர்களை மனதளவில் காயப்படுத்தும் நடவடிக்கை.
ஆசிரியர்கள் வர்க்கமாக அணிதிரண்டு நியாயத்தை கோர வேண்டிய சூழலில், குழப்பத்தை உருவாக்கும் வகையில் கோரிக்கைகளை சிலர் வைப்பது நியாயமல்ல.
ஆசிரியர்கள் மத்தியில் தவறான கருத்து விதைக்க முற்படுவதை ஏற்க இயலாது.
ஆசிரியர்கள் தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள வேண்டும்.
சமூக ஒடுக்குமுறையின் அளவு வெவ்வேறாக உள்ள நிலையில், சமூக பின்தங்கலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு, அதன் அடிப்படையில் மதிப்பெண் உள்ளிட்ட மற்ற உரிமைகள் வழங்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15 மற்றும் 16 வழிவகுத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், அதன் கூறுகளுக்கும் எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் அவற்றை முற்றிலுமாக நிராகரித்து, சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் பொறுப்பு மிக்க ஆசிரியர்கள், வர்க்கமாக ஒன்றுபட வேண்டும்.
சவால் மிக்க சூழலில் ஆசிரியர் அனைவருக்கும் நெருக்கடி.
இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் உரிமைகள் வெவ்வேறு அளவுகோலில் இருப்பதே சமூகநீதி. அனைவருக்கும் சமவாய்ப்பை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு அடிப்படையில் உள்ள உரிமைகள் வெவ்வேறாக அமைந்துள்ளது என்பதை உணர வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 மெய்யாலுமே அனைவருக்கும் உறுதிசெய்ய கூறு 15 மற்றும் 16 அடிப்படையில், வெவ்வேறு அளவுகளில் ஒடுக்குமுறை என்பதால் இட ஒதுக்கீடு உரிமையிலும் வெவ்வேறு அளவுகோல் இருக்கத்தான் செய்யும் என்பதை பொறுப்புடன் உணர்ந்து, அனைவருக்கும் உரிய நியாயங்கள் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும்.
ஆசிரியர் சமூகம் தனது கடமையை உணர்ந்து ஒன்றுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.