கல்குவாரியில் இரட்டை கொலை !
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் திங்கள்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த பெரியம்மா (75), பாவாயியின் (70) ஆகிய இரண்டு மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்கள் அணிந்திருந்த இரண்டு பவுன் நகை மற்றும் வெள்ளி கால் காப்புகள் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார், இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்பி விமலா உத்தரவின்பேரில் சேலம் காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடி வந்தனர். மேலும் கல்குவாரிக்கு அருகே வசித்து வந்த பொதுமக்களும் சம்பவம் நடந்த காலை கல்குவாரி அருகே அய்யனாரை பார்த்ததாக கூறினார். இது தொடர்பாக கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளான இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை வனப்பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற குற்றவாளி அய்யனார் காவல் உதவி ஆய்வாளர் கண்ணனை கையில் கத்தியால் வெட்டினார். அதை தடுக்க சென்ற காவலர் கார்த்திகேயனை அய்யனார் வெட்ட முயற்சிக்கும் போது அவர் விலகிக் கொண்டார். இதைப் பார்த்த மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எச்சரித்ததால் அவரையும் வெட்ட முயற்சி செய்ததால் சுதாரித்துக் கொண்ட செந்தில்குமார் தற்காப்புக்காக தன் கை துப்பாக்கியால் அய்யனாரின் வலது காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டது.
உடனே காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரும், அய்யனாரும் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அய்யனாரை அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து உதவி ஆய்வாளர் கண்ணனிடம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றும் சங்ககிரி உதவி கண்காணிப்பாளர் தனசேகர் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.