உயிரை விதைத்து நிலத்தை செழிக்கச் செய்யும் இயக்கம் !
தாய்மொழி காத்திட தன்னுயிர் ஈந்த வீரத் தியாகிகளின் இலட்சியம் மொழியும் இனமும் காக்கப்பட்டு, தமிழ்நிலம் வளம் பெற வேண்டும் என்பதுதான். தொன்மைமிக்க தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். கணினி காலத்திற்கேற்ற வகையில் தமிழைத் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு உள்ளாக்கியதில் அவரது அரசின் பங்கு முக்கியமானது.
தொன்மை இரும்பு என்ற அறிவியல்பூர்வமான ஆய்வுமுடிவுகளை அண்மையில் வெளியிட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர்.
மொழிக்கும் இனத்திற்கும் கிடைத்துள்ள பெருமைகளுடன் நிலமும் வளம் பெறும்போது உயிரைக் கொடையாக வழங்கிய மொழிப்போர்த் தியாகிகளுக்கான வீரவணக்கம் மேலும் செம்மை பெறும். ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றம் 2025 நிகழ்வில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களும் பங்கேற்றுள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் மராட்டிய மாநில முதலமைச்சர், ஆந்திர மாநில அமைச்சர் ஆகியோருடன் இந்தியா பெவிலியனைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புமாக மாற்றப்பட்டு வருவதையும், அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்பதையும், சக மாநிலப் பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளிப்படுத்திய விதம் உலக அரங்கைக் கவர்ந்தது.
இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில், தமிழ்நாட்டின் அளவு மட்டுமே 43 விழுக்காடாகும். இந்த மகத்தான பங்களிப்பிற்கு திராவிட இயக்கத்தின் பாலின சமத்துவ கொள்கை, நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து வழங்கி வரும் கல்வி வாய்ப்பு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, திராவிட மாடல் ஆட்சியின் விடியல் பயணம் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி என டாவோஸ் நகரில் நடைபெற்ற தொழில்நுட்ப மையத்தில் பெண்கள் Women In Tech Hub என்ற அமர்வில் நமது மாநிலத்தின் அமைச்சர் பெருமையுடன் விளக்கியது உலகளவில் பல நாடுகளையும் வியக்க வைத்துள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொன்மைப் பெருமையையும் அண்மைக்கால வளர்ச்சியையும் இணைத்து, திமில் உள்ள காளையை இலட்சினையாகக் கொண்ட Bullish On Tamilnadu என்ற முன்னேற்றத்திற்கான முழக்கத்துடன் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
மொழி-இனம்-நிலம் மூன்றும் இணைந்த தமிழர்களின் காலத்திற்கேற்ற வளர்ச்சித் திட்டங்களுடன் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது திராவிட இயக்கம்.