ஏர் ஓட்டும் எடப்பாடி பழனிசாமி – தமிழகத்தை வழி நடத்திய நிஜக்கதை ! ..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விவசாயக் குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், கிராமப்புறப் பள்ளியில் படித்து, கிளை செயலாளராகப் பதவியில் இருந்து, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.

சாமானிய மக்கள் அடைய முடியாத பெரும் பொறுப்பைப் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இது அவரைப் பெருமைப்படுத்தும் கட்டுரையல்ல. படிப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வரலாற்று பதிவாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

Kauvery Cancer Institute App

குடும்பம்…

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகிலுள்ள நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் கருப்பனகவுண்டர் & தவசியம்மாள் தம்பதியினர். கருப்பனகவுண்டரின் முதல் மனைவி திருமணமான சில ஆண்டுகளிலேயே உயிரிழந்து விடுகிறார். அவருக்குப் பழனியம்மாள் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தையை வளர்ப்பதற்காகவே இரண்டாவதாகத் தவசியம்மளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு விஜயலட்சுமி, கோவிந்தராஜ், பழனிசாமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மே 12, 1954 இல், மூன்றாவது மகனாகப் பிறந்த பழனிசாமி அவர்களே, தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்ற ஆட்சிக்காலத்தில்,  முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவராவார்.

பழனிசாமி மிகவும் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.   கொங்கு வேளாளர் சமூகத்தில் கண்ணகுலத்தை சேர்ந்தவர். பழனிச்சாமி அவர்களின் கொள்ளுப்பாட்டன் காலத்தில் ஈரோடு அருகிலுள்ள நசியனூர் பகுதியில் இருந்து சிலுவம்பாளையத்திற்கு குடிவந்துள்ளனர். கண்ணகுலத்தில், நசியனூர் அப்பத்தம்மாள் கோயிலைக் குலதெய்வமாகக் கொண்டவர்.

இளமைப் பருவம்…

1959-ஆம் ஆண்டு, பள்ளிக்குச் சென்ற பழனிச்சாமி அவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை சிலுவம்பாளையம் ஆரம்பப்பள்ளியில் படிக்கிறார். ஆறாம் வகுப்பு முதல், உயர்நிலை கல்வியைப் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கிப்படித்தார். பி.யூ.சி, பி.எஸ்.சி (விலங்கியல்) பாடத்தைச் சித்தோடு, வாசவி கல்லூரியில் படிக்கிறார். அப்போது கல்லூரி விடுதியில் தங்காமல் மற்ற மாணவர்களோடு வெளியே தனியாக அறை எடுத்துத் தங்கி இருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

பழனிச்சாமி அவர்களின் மச்சான் சின்னசாமி என்பவர் அந்தியூரில் ஆசிரியராகப் பணியாற்றியவர், நாட்டுச் சர்க்கரை, வெல்ல வியாபாரம் செய்து வந்தார். அவரோடு சேர்ந்து பழனிசாமியின் அப்பா, அண்ணன் இருவரும் 1970 ஆம் ஆண்டு வாக்கிலேயே, வெல்ல வியாபாரத்தைத் தொடங்கி விட்டனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் பெருந்துறையில் வெல்ல மார்க்கெட் ஏலம் நடைபெறும். அந்த நேரத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பழனிசாமி அவர்களும், வெல்ல வியாபாரத்தைக் கவனிக்க வருவார். வெல்லம் ஏலம் முடிந்ததும், பழனிசாமி அவர்களும், பவானி யூனியன் சேர்மனாக இருந்த அவருடைய நண்பரும் திரைப்படம் பார்ப்பதற்காக ஈரோடு சென்று விடுவர்.

வணிகத் தொடர்புகள்…

பெருந்துறையில் இருந்த வெல்ல மார்க்கெட்டில், வேட்டுவபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த மக்கள், அதிகாரம் செலுத்தி வந்தனர். அவர்களின் வெல்லம் வியாபாரம் முடிந்த பிறகுதான், மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்ய முடியும். இப்படியே சந்தைக்குப் போகும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். அதனால், வெல்ல வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து 1978ஆம் ஆண்டு, சித்தோட்டில் தனியாக வெல்லம் விற்பனை செய்யும் ஒரு சந்தையை உருவாக்கிக் கொண்டனர்.

பழனிசாமி அவர்களும் கல்லூரிப் படிப்பை முடித்ததும், அப்பாவின் வழியிலேயே வணிகத்தில் இறங்கினார். கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் ஆதரவோடு வெல்லம் கொள்முதல் செய்யும் வியாபாரத்தைத் தொடங்கினார். இந்தப் பகுதியில், கரும்பு நடவு செய்யும் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளையும் கரும்புகளை அவர்களே அறுவடை செய்து, சாறு பிழிந்து, அதைக் காய்ச்சி, நாட்டு வெல்லம், நாட்டுச் சர்க்கரையாக மாற்றி அதை விற்பனை செய்வது வழக்கம்.

அப்படிப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளையும், இருநூறுக்கும் அதிகமான வெல்ல ஆலை நடத்தியவர்களையும் தனது வாடிக்கையாளராகக் கொண்டு, வெல்ல வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்காகப் புல்லெட் மோட்டார் சைக்கிளில் காலை ஆறு மணி முதல், மாலை வரை தொடர்ந்து விவசாயிகளைச் சந்திக்க, கிராமப்பகுதிகளில்  சுற்றிக்கொண்டே இருப்பார்.

எடப்பாடி பழனிச்சாமிகரும்புத் துண்டுகளை வயலில் நடவு செய்வதிலிருந்து, அதன் வளர்ச்சி, நடவு செய்யப்பட்டுள்ள பரப்பளவு, எத்தனை நாள்களில் அறுவடை செய்யலாம், எவ்வளவு வெல்லம் கிடைக்கும் என்பதையெல்லாம் கள ஆய்வுசெய்து, கணக்கிட்டு, விவசாயிகளுக்கு முன்பணம் கொடுப்பது வழக்கம். இதற்காகக் காவிரி ஆற்றின் இருபக்கமும் உள்ள கிராமப்பகுதிகளில் பழனிசாமி சுற்றிக்கொண்டே இருப்பார்.

அதன்பிறகு, வெல்லம் தயாரித்து முடித்ததும், அதை விவசாயிகளிடம் இருந்து வாங்கிக்கொண்டுபோய், பெருந்துறையில் இருந்த வெல்ல மண்டிகளில் சேர்த்து, ஏலம் விட்டு, பணத்தை வாங்கிக் கொண்டுவந்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட முன்பணத்தைக் கழித்துக்கொண்டு, மீதிப்பணத்தை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெல்லத்தின் அளவைக் குறைத்துக் காட்டியும், விற்பனை செய்த விலையைக் குறைத்துக் காட்டியும் சில வியாபாரிகள் மோசடி செய்வது வாடிக்கையாக நடக்கும். பல வியாபாரிகள், இறுதியில் விவசாயிகளுக்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதும் உண்டு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் பழனிசாமி, விவசாயிகளிடம் முன்பணம் கொடுப்பதிலும், வெல்லத்தின்  அளவைக் கணக்கீடு செய்வதிலும், நேர்மையாக நடந்து கொள்வார். வெல்லம் விற்பனை செய்த தொகையை அப்படியே கொண்டுவந்து, விவசாயிகளிடம் ஒப்படைப்பார். 65 கிலோ எடை கொண்ட வெல்ல மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் மட்டுமே எடுத்துக்கொண்டு, மீதிப்பணம் முழுவதையும், அடுத்த நாளே விவசாயிகளின் ஒப்படைத்து விடுவார்.

இப்படி நேர்மையாக நடந்து கொண்டதால் பழனிசாமி அவர்களிடம் வெல்லத்தை ஒப்படைப்பதை விவசாயிகள் விரும்பினர். அவர் வியாபாரம் தொடங்கிய நான்கு ஆண்டுகளில், இவருக்கு வெல்லம் கொடுக்கும் ஆலை உரிமையாளர்களின் எண்ணிக்கை நானூறுக்கும் அதிகமானது. விவசாயிகளின் எண்ணிக்கையும் இரண்டாயிரம் பேரைத் தாண்டியது.

ஒவ்வொரு வாரமும் நான்காயிரம் மூட்டை வெல்லத்தை, சித்தோடு சந்தைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்யும் அளவுக்கு முன்னணி வெல்ல வியாபாரியாக மாறினார். இதன் மூலம், அந்தக் காலகட்டத்திலேயே ஒவ்வொரு வாரமும், பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆளுமை மிக்கவராக விளங்கியுள்ளார்.

வழக்கமாகப் பெருந்துறை வெல்ல மண்டியில், காலையிலேயே ஏலம் முடிந்து விட்டாலும், ஏலம் எடுத்த வியாபாரிகள் மாலையில்தான் பணம் கொடுப்பார்கள். அதுவரை வியாபாரிகள் எல்லோருமே காத்திருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் வீடு திரும்புவார்.

ஆனால், பழனிசாமி வைத்திருக்கும், வெல்லத்தின் ஏலம் நடந்து முடிந்ததும் பணம் வாங்கக் காத்திருக்க மாட்டார். அவரது பெரியம்மா மகனான  விஸ்வநாதனிடம் பணத்தைக் கணக்குபோட்டு, வாங்கிக்கொண்டு வரச் சொல்லிவிட்டு இவர் ஈரோடு கிளம்பி விடுவார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படங்களைப் பார்ப்பார், கல்லூரியில் படித்த நண்பர்களைச் சந்தித்து, அரசியல் பேசுவார். இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புவார். வியாபாரம் செய்து கொண்டிருந்த காலத்திலேயே, தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராகவும், அ.இ.அ.தி.மு.க. ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.

பழனிசாமி மகன் மிதுன்
பழனிசாமி மகன் மிதுன்

வெல்ல வியாபாரம் செய்த காலத்திலேயே, பெற்றோர்கள் விருப்பப்படி சிலுவம்பாளையத்திற்குப் பக்கத்திலுள்ள சேவூர் என்ற ஊரைச் சேர்ந்த இராதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மிதுன் என்னும் ஒரு மகன் உள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தில், பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இதனால், மற்ற சமூகத்தினருக்கு ஏற்ப எண்ணிக்கையில், கொங்கு வேளாளர் சமூகம் வளர்ச்சி பெறவில்லை என்பதற்கான முக்கியமான காரணமாகும்.

அரசியல் வாழ்க்கை

எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கிய 1972 காலத்தில், சேலம் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அ.தி.மு.க. நிர்வாகியாக இருந்தவர் சேலம் கண்ணன். பழனிச்சாமி அவர்களும் அவருடைய பெரியம்மா மகன் விஸ்வநாதனும் சேலம் கண்ணன் அவர்களைச் சந்தித்து, அ.தி.மு.க. கிளைக் கழகத்தைச் சிலுவம்பாளையத்தில் தொடங்கியுள்ளனர். உள்ளூரைச் சேர்ந்த சின்னத்தம்பி, சென்னியப்பன் என்ற இரு நண்பர்கள் இவரோடு தொடர்ந்து பயணித்தவர்கள்.

சேலம் கண்ணன் அதிமுக
சேலம் கண்ணன் அதிமுக

பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சேலம் கண்ணன், எம்.ஜி.ஆர். அவர்களோடும் பிறகு, ஜெயலலிதா அவர்களோடும் நெருக்கமாக இருந்து கட்சியை வளர்க்கப் பாடுபட்டவர். இவர்தான் பழனிசாமி அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்.

1977 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கட்சி விருப்பமனு வாங்கியபோது, எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடப் பழனிசாமியும் விருப்பமனு கொடுக்கிறார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 25 நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், பழனிசாமிக்கு 23 வயதே நடந்து வந்ததால், அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

அப்போது பழனிசாமிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்ட குண்டு குருசாமி என்பவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் சூழல் இருந்தது. சேலம் கண்ணன் அவர்களுக்கு நெருங்கிய நண்பரான சம்பு என்ற ஒருவரின் சிபாரிசின் பேரில் அந்த வாய்ப்பு, ஐ. கணேசனுக்குப் போகிறது. ஐ.கணேசன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

அடுத்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடியில் ஐ.கணேசனே வெற்றி பெறுகிறார். கட்சித் தலைமையின் வேண்டுகோளின்படி, எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட எல்லாக் கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில், சேலம் மாவட்டக் கட்சியின் முக்கிய உறுப்பினரானார்.

1984ஆம் ஆண்டு, நடந்த பொதுத்தேர்தலில், தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. அதனால், பழனிசாமி அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போகிறது.

1985-ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி, அம்மா பேரவையைத் துவக்குகிறார். 1986ஆம் ஆண்டு நடந்த, உள்ளாட்சித் தேர்தலில், நெடுங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைகிறார்.

1989-ஆம் ஆண்டு, அ.தி.மு.க.வில், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் ஓர் அணியாகவும், ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் போட்டியிட்டனர். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எல்.பழனிசாமி என்பவரைக் காட்டிலும், 1,364 வாக்குகள் அதிகம் பெற்ற பழனிசாமி அவர்கள், முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகிறார்.

1990 ஆம் ஆண்டு, சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வருகிறார். 1991 இல், மீண்டும் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கொளந்தக்கவுண்டரைக் காட்டிலும் 41,266 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இரண்டாம் முறை சட்டமன்ற உறுப்பினரானார். 1992&96 காலகட்டத்தில், சேலம் மாவட்டத் திருக்கோவில்களின் வாரியத் தலைவர் பொறுப்புக்கு வருகிறார். 1993&-96 காலகட்டத்தில், சேலம் மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள்(ஆவின்) கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்படுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

1998&99 காலகட்டத்தில், திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகப் போட்டியிட்டுத் தேர்வு செய்யப்படுகிறார். 1999இல், ம.தி.மு.க-வின் வேட்பாளர் கண்ணப்பனிடம் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் தோல்வியுற்றார்.

2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் தலைவர் பதவி ஏற்கிறார். 2004-இல், திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க-வின் சுப்புலட்சுமி செகதீசனிடம் தோல்வியுற்றார். கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு, எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும், அதை ஏற்றுப் போட்டியிடும் வழக்கம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.

2006 இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு, 6,347 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி வாய்ப்பை இழக்கிறார். 2007 ஆம் ஆண்டு, அ.தி.மு. கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார்.

2011இல், 34,738 வாக்குகள் வித்தியாசத்தில், மீண்டும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுகிறார். தமிழ்நாடு அமைச்சரவையில், மாநில நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

2014ஆம் ஆண்டு, அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகிக்கிறார்.

2016ஆம் ஆண்டு, 42,022 வாக்குகள் வித்தியாசத்தில், மீண்டும் எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியை ஏற்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமிடிசம்பர் 5, 2016இல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரைத் தேர்வு செய்யக் கட்சியின் தலைமை முடிவெடுக்கின்றது. இடைக்கால முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறார். 2017, டிசம்பர் 15 அன்று, தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவியேற்றார். அடுத்த நான்காண்டுகள் அந்தப் பொறுப்பில் திறம்படச் செயல்பட்டார்.

2021 பொதுத்தேர்தலில் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் மாபெரும் வெற்றியைப் பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். இவரது தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க. 66 இடங்களைக் கைப்பற்றி, தமிழ்நாட்டின்  பொறுப்பான எதிர்க்கட்சியாகத் திகழ்கிறது.

எடப்பாடி பழனிசாமி அவர்களின் கல்லூரித் தோழரான வழக்குரைஞர் மதி அவர்களிடம் பேசினோம். “நான் கல்லூரிக்குச் சென்ற முதலாண்டு, அவர் இறுதியாண்டு படித்து வந்தார். அப்போது சிலுவம்பாளையத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். எனது வகுப்புத் தோழராக இருந்த ராஜா என்பவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர். அவர் மூலமாகத்தான் எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.

அதன் பிறகு நாங்கள் இருவரும் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். அவர் கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னரும், அந்த வீட்டில் தங்கிக்கொண்டு வியாபார விவகாரங்களைக் கவனித்து வந்தார். அவரது குடும்பத்தினர் எல்லோரும், அந்த வீட்டுக்கு வந்து, தங்கிச் செல்வார்கள். ஒரு கல்லூரி மாணவரின் எந்தச் சராசரி நடவடிக்கையும் பழனிசாமியிடம் இருக்காது. மிக அமைதியாக, தானுண்டு, தன்  வேலையுண்டு என நடந்து கொள்வார்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுடன் - எடப்பாடி பழனிச்சாமி
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுடன் – எடப்பாடி பழனிச்சாமி

எந்தக் கெட்ட பழக்கமும், தொடர்புகளும் அவரிடம் இருக்காது. நல்லவர்களின் நட்புகளைக் கை விடாமல், தொடர்ந்து பின்பற்றி வருவார். அவர் முதன்முதலாக விலிகி ஆனநேரத்தில் அவரது தொகுதியிலிருந்து ஒருவர், வழக்கு விவகாரமாக என்னைச் சந்திக்க வந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்த நான். “உங்க தொகுதி எம்.எல்.ஏ-வைத் தெரியுமா…?” என்று கேட்டேன். “நன்றாகத் தெரியும்” என்று சொன்னவர், எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து, என்னோடு வழக்கு விவரம் தொடர்பாகப் பேசியது குறித்துத் தகவல் சொல்லியிருக்கிறார்.

உடனடியாக எங்களுடைய கடந்த கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, ஒரு நன்றி கடிதம் அனுப்பி இருந்தார். அதில், கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த நினைவுகளை எழுதி இருந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் அவரோடு பழகி வருகிறேன். எடப்பாடி பழனிசாமி என்ற நபரைப்போல இன்னொரு நபரை நம்மால் பார்க்க இயலாது. நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் அவர் வெல்லம், சர்க்கரை வியாபாரத்திற்காக என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். சிறிது நேரத்தையும் வீணாக்காமல் அதைப் பயனுள்ள வழியில் செலவிடுவார்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

எந்த இடத்திலும் அடுத்தவர்கள் கைக்காசைச் செலவு செய்ய அனுமதிக்க மாட்டார். பெரும்பாலும் அவரேதான் செலவுக்கான பணம் முழுவதையும் கொடுப்பார். கெட்ட பழக்கம், நமக்குப் பிடிக்காத நடவடிக்கைகள் அவரிடம் உள்ளது என்று குறை சொல்லவே முடியாது. நம்முடைய மனதில் என்ன நடக்க வேண்டும் என நினைக்கிறோமே, அதையே அவரும் செய்வார். அந்த அளவுக்கு எதிரிலுள்ளவரின் மனநிலையை அறிந்து செயல்படக்கூடியவர்.

ஒருமுறை எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பார்த்துப் பேசிப் பழகியவர் அவருடைய நட்பை இழக்க விரும்ப மாட்டார். அந்த அளவுக்கு நம்மோடு நெருங்கிய தொடர்பில், நம் நலனில் குடும்ப நலத்தில் அக்கறை உள்ளவராக இருப்பார். அவர் முதலமைச்சராக உயர்ந்து வருவதற்கு மிக முக்கியக் காரணமே அவருடைய நல்ல பண்புகள்தான்“ என்கிறார் சேலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மதி.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2022, ஜூலை 11ஆம் நாள், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மாளிகையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2023 முதல், அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மூலம் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பொறுப்பை வகித்து வருகிறார்.

2023, ஏப்ரல் 20-அன்று, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அங்கீகரித்தது. 20 ஆகஸ்ட் 2023 அன்று, அ.தி.மு.க. பொன் விழா கொண்டாட்ட எழுச்சி மாநாடு, மதுரையில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.

25 செப்டம்பர் 2023 அன்று, பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இது இந்திய நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாகும்.

எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகள்…

28 மே 2018 அன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

2019ஆம் ஆண்டில் அவர் தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் 13 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். புலம்பெயர்ந்த தமிழர்களை, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக “யாதும் ஊரே” திட்டத்தைத் தொடங்கினார்.

இந்தப் பயணத்தின்போது அவர் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டைப் பெற்றார். இது அவரது முன்னோடியாக விளங்கிய ஜெயலலிதா தலைமையிலான அரசு பெற்றதை விடவும் அதிக முதலீடாகும்.

எடப்பாடி பழனிச்சாமிபிப்ரவரி 2020இல், பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டன.

புதிதாகத் திறக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவம் படிக்க 1,650 இடங்கள் கூடுதலாகக் கிடைத்தன. இதனால், தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3,400 இடங்களில் இருந்து 5,050 இடங்களாக உயர்ந்தன. இந்தியாவில் உள்ள  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இது கூடுதலான இடங்களாகும். அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  7.5% சிறப்பு இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்தது. இதன்மூலம், ஆண்டுக்கு நானூறு அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகும் கனவு சாத்தியமானது.

கொரானா பேரிடர் காலம்:

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பேரிடர் காலத்தின்போது, எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்யாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்தப் பேரிடர் காலகட்டத்தில், அரசு ஊழியர்களுக்குப் பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்கியது, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆன்-லைன் மூலம் பாடம் நடத்தியது, தேர்வு எழுத வாய்ப்பில்லாத மாணவர்களுக்குப் பழைய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட்டு, தேர்வு முடிவு வெளியிட்டது குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

எடப்பாடி பழனிசாமிமருத்துவமனைகளில் காலியாக இருந்த மருத்துவர், செவிலியர், தொழில்நுட்பப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஊழியர்களை நியமனம் செய்தார். தமிழ் நாட்டில் வாழ்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும், இருபது கிலோ அரிசியும், ஆயிரம் ரூபாய் பணமும் தொடர்ந்து நான்கு மாதங்கள் வழங்கினார்.

தொடர்ந்து மூன்றுமாத காலம் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டிருந்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த 25 ஆயிரம் கோடி ரூபாய், பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு வெளியிட்டார்.

ஆறு புதிய மாவட்டங்கள்:-

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராகப் பதவியேற்றதும் நெல்லை மாவட்டத்திலிருந்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அடுத்து, விழுப்புரத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டம் உருவானது. வேலூர் மாவட்டத்திலிருந்து, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாயின. அடுத்து, செங்கல்பட்டிலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டமும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டமும் எனப் புதிய மாவட்டங்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் எந்த ஒரு முதலமைச்சரின் ஆட்சியிலும் இவ்வளவு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட வரலாறு இல்லை.

கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு நிதி உதவி பன்னிரெண்டாயிரம் ரூபாயிலிருந்து 18 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. உழைக்கும் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராமப்புறப் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டிலிருந்த 117 ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகத் தர உயர்வு பெற்றன. அதுபோலவே, நடுநிலைப் பள்ளிகளாக இருந்த 1,079 பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும், உயர் நிலைப்பள்ளிகளாக இருந்த 604 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.

கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம்இதுமட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் எட்டுச் சட்டக் கல்லூரிகள், 77 புதிய அரசு கலைக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம், கூட்டுரோடு என்ற இடத்தில், 496கோடி ரூபாயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இதுதவிர 254 ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 150 புதிய கால்நடை மருந்தகங்கள் உருவாக்கப்பட்டன.

குடிமராமத்து திட்டம் மூலம், 1,132 கோடி ரூபாய் செலவில், 5,568 நீர்நிலைகள் தூர்வாரி  குடிமராமத்து திட்டத்தைச் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 90 சதவீத ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதன் பயனாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் உள்ளன.

எம்ஜிஆரின் கனவை நனவாக்கியவர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என்பது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டமாகும்.  நாற்பது ஆண்டு கனவாக இருந்த இத்திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி முடித்துள்ளார். இதன்மூலம், திருப்பூர் மாவட்டத்தின், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி வட்டங்கள், ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டத்திற்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. கடந்த மூன்று மாதங்களாக முதல் கட்ட இணைப்பு பணிகள் நிறைவு பெற்று, குழாய் மூலமாக ஏரிகளுக்குத் தண்ணீர் வருகிறது.

காவிரி&திருமணி முத்தாறு இணைப்புத் திட்டம்:-

சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான காவிரி – சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு பணிகளுக்கு 1,134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018 ஆண்டு பணிகள் துவங்கின. இத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் 2021 ஆண்டில் முடிவடைந்து.

எடப்பாடி பழனிசாமிமேட்டூர் அணையின் கிழக்கு கரையிலுள்ள திப்பம் பட்டி என்ற இடத்திலிருந்து, நீரேற்று நிலையம் மூலம் காவிரி உபரிநீர் வெளியே எடுக்கப்படுகிறது. இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர், மேச்சேரி அருகிலுள்ள காளிப்பட்டி ஏரியில் விடப்படுகிறது. அங்கிருந்து வழக்கமான நீர்வழிப் பாதைகள் மூலம், சின்னேரி,  மானந்தாள் ஏரி, தொளசம்பட்டி ஏரி, தாரமங்கலம் ஏரி எனப் பல ஏரிகள் நிரம்பிப் பிறகு, சரபங்கா நதியுடன் இணைகிறது. 2021-ஆம் ஆண்டு முதல், இந்த வழித்தடத்தில் காவிரி உபரிநீர் சென்று வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் திட்டம் முழுமை பெரும் அப்போது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் அதிகமான ஏரிகள் நிரம்பும்.

கைக்கான் வளவு – கரியகோயில் நீர்த்தேக்க இணைப்புத் திட்டம்:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை கல்லாறு-கரியகோயில் நீர்த்தேக்க இணைப்புத் திட்டமாகும். சேலம் மாவட்டம், சின்னகல்வராயன் மலையில், மண்ணூர் என்ற இடத்தில் உருவாகும் கல்லாறு,  கைக்கான வளவு, கருமந்துறை வழியாக  மேற்கு நோக்கி வருகிறது. பின்னர், வடக்கே சென்று கிழக்கு நோக்கித் திரும்பும் இந்த ஆறு கள்ளகுறிச்சி மாவட்ட வனப் பகுதி வழியாக, கோமுகி அணைக்குச் செல்கிறது. கல்வராயன் மலையில் பெய்யும் மழைநீர், அளவுக்கு அதிகமாக இந்த ஆற்றின் வழியாகச் சென்று கடலில் கலந்து வந்தது.

அதே நேரத்தில், சின்னக்கல்வராயன் மலையின் தென்பகுதியில் உள்ள வசிஷ்ட நதியின் நீர் ஆதாரமான கரியகோயில் நீர்த்தேக்கத்தில் நீரில்லாமல் காய்ந்து கிடந்தது. கைக்கான் வளவு என்ற இடத்தில் செல்லும் கல்லாற்றின் குறுக்கே அணைகட்டி, அதில் செல்லும் உபரி நீரைக் கரியகோயில் நீர்த்தேக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று வசிஷ்ட நதியோர விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.

கரிய கோயில் அணை
கரிய கோயில் அணை

எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்காலத்தில், 2021ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, வேலை துவக்கப்பட்டது. சுமார் எட்டுக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 300 மீட்டர் தூரத்திற்குக் கான்கிரீட் வாய்க்கால் அமைத்து, அதன் மூலமாகக் கல்லாற்றில் செல்லும் உபரி நீர் கொண்டுவரப்பட்டுக் கரிய கோயில் நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்படுகிறது.

இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கரியகோயில் நீர்த்தேக்கத்திற்குத் தடையின்றி நீர் வருகிறது. இதனால், சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலும், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 66 ஏரிகள் நிரம்பி, தண்ணீர் பொதுமக்களின் விவசாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது.

ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியால், பல நதிகள் இணைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்மூலம், பல ஆயிரம் விவசாயிகள் தங்கள் நிலத்திற்குத் தேவையான நீர் வளத்தைப் பெற்றுள்ளனர்.

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்:-

இத் திட்டத்தின் மூலம் காவிரி ஆறு – தெற்கு வெள்ளாறு – வைகை ஆறு – குண்டாறு ஆகிய ஆறுகளை இணைப்பதாகும். முதல் கட்டமாக, ரூபாய் 6,941 கோடி மதிப்பில் புதிய பாசனக் கால்வாய்கள் அமைக்கப் பிப்ரவரி 2021-இல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

கரூர் மாவட்டம், மாயனூர் கட்டளை தடுப்பணையிலிருந்து காவிரி உபரிநீரை வாய்க்கால் மூலம் 118.45 கி.மீ நீளத்திற்குக் கொண்டுசென்று, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைப்பதாகும். இதன்பயனாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் விளை நிலங்களும் பயன்பெறும்.

காவிரி - குண்டாறு இணைப்பு
காவிரி – குண்டாறு இணைப்பு

இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கிமீ நீளத்திற்குப் புதிய பாசனக் கால்வாய்களை உருவாக்கி, அதை வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டத்தில், விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ. நீளத்திற்குப் புதிய பாசனக் கால்வாய்களை வெட்டி, காவிரி உபரி நீரை வைகை, குண்டாறு நதிகளுடன் இணைக்கப்படுகிறது.

இதற்கு ரூபாய் 14,400 கோடியில் 262 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் சென்று வீணாகும் 6,300 மில்லியன் கன அடித் தண்ணீர் தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படும். இதன்மூலம், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் நிறைவடையும்.

இத்திட்டத்தின் இன்னொரு பகுதியாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பாயும் 21 ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்தவும், தூர் வாரவும் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், 987 கி.மீ நீளமுள்ள ஆறுகளின் வழியே 4,67,345 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெறமுடியும்.

கட்டமைப்பு வசதிகள்:-

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய சாலைகள் ஏற்படுத்த வேண்டிய நிலை ஒவ்வொரு ஊரிலும்  ஏற்படுகிறது. இதற்காக மாநகரங்களில் மேம்பாலங்களை அமைக்கவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சீறிய திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் கோவை மாநகரத்தில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, காந்திபுரம், கவுண்டம்பாளையம், சத்தியமங்கலம் சாலை, திருச்சி சுங்கம் சாலை, காந்திபுரம் நூறு அடி சாலை, ராமகிருஷ்ணா சாலை உட்படப் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. எட்டுக் கிலோமீட்டர் நீளத்திற்கு அவிநாசி சாலையில் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நடப்பட்டு, திட்டம் துவங்கி வேலை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டிலும் ஒரு மேம்பாலம் இவரது ஆட்சிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. சேலம் மாநகரில் 3 கிலோ மீட்டர் நிலத்திற்கு, 441-கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டடுக்கு மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு, கட்டி முடித்துக் காட்டினார். சேலம் நகரில், போக்குவரத்து நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.

 மேம்பாலங்கள்
மேம்பாலங்கள்

ஏரி, குளங்கள் தூர்வாரியது, புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டது, தமிழ்நாட்டில் இயங்கி வந்த 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கலைக் கல்லூரிகளாக மாற்றியது என்பது இவரது ஆட்சியின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். காரணம் இந்தியா முழுமையும் கல்வி நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டதைக் கல்வியாளர்களும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களும் வரவேற்றன என்பது வரலாற்று செய்தியாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும், அதிக முறை சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் என்று பெயரையும் எடப்பாடி பழனிசாமி பெற்று இருக்கிறார். இவரது நான்காண்டு ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டில் இவர் செல்லாத இடமே இல்லை என்றும் சொல்லுமளவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நாடெங்கும் மூலை முடுக்கெல்லாம் சென்று, செய்து கொடுத்திருக்கிறார்.

கொங்கு சமூகத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக் காலம், தமிழ்நாட்டின் பொற்காலம் என்பதை வரலாறு உறுதி செய்யும்.

—  பெ. சிவசுப்பிரமணியம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.