தமிழகத்தில் திடீர் இடைத்தேர்தல் ! எடப்பாடிக்கு அக்னிப்பரீட்சை வைக்கும் பாஜக – பரபரப்பு தகவல்கள் !!

0

தமிழகத்தில் திடீர் இடைத்தேர்தல் ! எடப்பாடிக்கு வைக்கும் பாஜக அக்னிப்பரீட்சை – பரபரப்பு தகவல்கள் !!

இந்திய ஒன்றிய மாநில அரசியல் களத்தில் தமிழ்நாட்டின் நிலை வித்தியாசமாகவும், வேகமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. ஆளும்கட்சியான திமுகவை எதிர்க்கவேண்டிய பிரதான எதிர்கட்சியான அதிமுக எடப்படி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி, முன்னாள் அதிமுகவைச் சார்ந்த தினகரனின் அம்முக வேறு. மொத்தம் நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. எதிர்க்கப்பட வேண்டிய திமுக எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சித் தேரை நகர்த்திச் சென்றுக்கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால், 4 சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக ஆதரவோடு வென்ற மாநில பாஜக தான்தான் திமுகவிற்கு மாற்று மட்டுமல்ல, சரியான எதிர்க்கட்சியும் நான்தான் என்று முண்டா தட்டிக்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. இதை அதிமுகவின் நான்கு பிரிவுகள் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பது வேடிக்கையாக உள்ளது.

மோடி - எடப்பாடி பழனிசாமி
மோடி – எடப்பாடி பழனிசாமி

 

டாடி மோடியின் அல்வா

- Advertisement -

- Advertisement -

மிக அண்மையில், திண்டுக்கல் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூரூவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்தார். மதுரை வரும் மோடியை வரவேற்கவும், சந்தித்து உரையாடவும் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித்தனி நேரம் கேட்டிருந்தனர். தனித்தனி நேரம் ஒதுக்கப்படவில்லை. இருவரும் இணைந்து வரவேற்கலாம். தனியாகச் சந்தித்துப் பேச நேரமும் ஒதுக்கப்படவில்லை. என்றாலும் அதிமுகவின் அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவினர் எங்கள் “டாடி” என்று கொண்டாடும் மோடியை வரவேற்க மதுரை விமானநிலையத்தில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் அருகருகே நின்று தங்களின் டாடியை பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்கள். டாடி ‘நல்ல இருக்கீங்களா?’ என்று மட்டும் விசாரித்து விட்டு, டாடா காட்டிவிட்டு, மோசமான வானிலை காரணமாக கார்மூலம் சாலை வழியாகத் திண்டுக்கல் பயணமானார்.

எடப்பாடி பழனிசாமி - மோடி - பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிசாமி – மோடி – பன்னீர் செல்வம்

அவமானம் – எடப்பாடி கொந்தளிப்பு

திண்டுக்கல் பயணத்தை நிறைவுசெய்து, மோடி மீண்டும் மாலை மதுரை திரும்பினார். மோடியை வழியனுப்புவதற்கும் எடப்பாடியும், பன்னீரும் விமானநிலையத்தில் ஒன்றாகவே அருகருகே நின்று பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். பூங்கொத்துகளை வாங்கிக் கொண்ட மோடி, “இப்படித்தான் ஒன்றாக இருக்கவேண்டும் என்று விஐபி அறையில் இருவரிடமும் சொல்லிவிட்டு, மீண்டும் டாடா காட்டிவிட்டு ஹெலிகாப்டரில் அமர, ஹெலிகாப்டரின் விசிறிகள் வேகமாகச் சுழல…… ஹெலிகாப்டர் வானத்தில் சின்னப்புள்ளியாய் மறைந்துபோனது. ஹெலிகாப்டரின் விசிறிகள் வேகமாகச் சுழன்றதுபோல் எடப்பாடியின் தலையும் கர……கரவென சுழலத் தொடங்கியது. மோடி பன்னீருடன் தன்னையும் அருகே நிற்க வைத்து அவமதித்துவிட்டார் என்று கோபம் கொண்டார். கண்கள் சிவக்கத் தொடங்கியது. தலை கவிழ்ந்த நிலையில் எடப்பாடி விமானநிலையத்தைவிட்டு வெளியேறினார்.

மோடி, அமித்ஷாவை சந்திக்க மாட்டேன்

அடுத்தநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அஃது ஒரு தனியார் நிகழ்ச்சிதான் என்றாலும் பன்னீர்செல்வம் அமித்ஷாவைச் சந்தித்து தன் பாஜக விசுவாசத்தை ரெணிவல் செய்தார். எடப்பாடி அமித்ஷாவைச் சந்திப்பார் என்று எண்ணிய நிலையில், அவர் சந்திக்கவில்லை. செய்தியாளர்களைச் சந்தித்தார். “மதுரையில் மோடியை அதிமுகவின் சார்பில் நான் சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசின் அமைச்சருக்கு நிகரான நிலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்தான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை” என்றார். மேலும், சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். அவரை நான் ஏன் பார்க்கவேண்டும். அரசு தரப்பில் வந்திருந்தால் சந்தித்திருப்பேன். இனி தனிப்பட்ட முறையில் மோடி, அமித்ஷாவைச் சந்திக்கமாட்டேன். அவர்கள் பாஜக கட்சியினர். நான் அதிமுக கட்சி. இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று வெடிகுண்டைப் போட்டார்.

எடப்பாடி - தினகரன்
எடப்பாடி – தினகரன்

தினகரனுக்கு அதிமுக கூட்டணியில் இடம் இல்லை

எடப்பாடியின் இந்தப் பேச்சு ‘பாஜகவை நம்பியதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியின் விளைவு’ என்று அமமுக தினகரன் நக்கல் அடித்தார். மேலும், ‘திமுக ஆட்சி அகற்றப்பட அதிமுகவின் எந்தப் பிரிவோடும் தேர்தல் உடன்பாடு கொள்வேன். தேவைப்பட்டால் எடப்பாடியுடனும் கூட்டணி வைத்துக்கொள்வேன்’ என்று கூறி செய்தியாளர் கூட்டத்தைக் கலகலப்பாக்கினார். ஏற்கனவே கோபத்தால் கண்கள் சிவந்தும், மனம் நொந்தும் உள்ள எடப்பாடி தினகரன் பேட்டியால் கொந்தளித்தார். “அதிமுக அமைக்கப்போகும் மெகா கூட்டணியில் தினகரனுக்கு 1% இடம்கூட கிடையாது என்று அறுதியிட்டு உறுதிபடுத்தினார். பன்னீர், சசிகலாவுக்கு அதிமுகவில் இனி இடமே கிடையாது என்று தரையில் அடித்து சத்தியம் செய்தார்.

தினகரன் - ஓ.பி.எஸ்
தினகரன் – ஓ.பி.எஸ்
4 bismi svs

அதிமுகவில் தினகரனை இணைப்பேன் – பன்னீர்

பாஜகவின் ஆதரவாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி, பத்திரிக்கையாளர் துக்ளக் இரமேஷ் இவர்களால் சாவிக் கொடுக்கப்பட்ட பாஜக ஆதரவு அதிமுக பொம்மையான பன்னீர்செல்வம்,‘தமிழகம் முழுதும் என் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களை மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர கழக அமைப்புகளில் நியமனம் செய்துவிட்டோம். அதிமுகவின் பொதுக்குழு விரைவில் கூடும். அதிமுகவில் தினகரனை இணைக்க நேரில் சந்திப்பேன்” என்று வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். அரசியல் களம் அதிமுக கோஷ்டி சண்டையால் தொடர்ந்து பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்

கொங்கு பகுதிகளில் பன்னீர் ஆட்கள் நியமனம்

இதற்கிடையில், பன்னீர் செல்வத்தை ஏற்றுக்கொண்டுள்ள தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், தமிழகம் முழுவதும் குறிப்பாக, கொங்குப் பகுதிகளில் பயணம் செய்து மாவட்டப் பதவிகளில் எடப்பாடியை எதிர்ப்பவர்களை இனம்கண்டு, பொறுப்பில் அமர்த்தியுள்ளார். இதில் எடப்பாடியிடம் முக்கிய தொடர்பில் உள்ள டெல்லி அதிமுகபிரமுகர் சிலரை வலுக்கட்டாயமாக ஓ.பி.எஸ். பக்கம் வைத்தியலிங்கம் மூலமாக அனுப்பி வைத்து உள்ளாராம்.  இது பன்னீருக்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றியாகக்கூட வர்ணிக்கலாம். பன்னீரை இயக்கிக் கொண்டிருக்கும் பாஜக ஆதரவாளர்களான ஆடிட்டர் குருமூர்த்தி, துக்ளக் இரமேஷ் ஆகியோர் பன்னீர்,மைத்ரேயன், வைத்தியலிங்கம் உளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது, எடப்பாடி பாஜகவுக்கு எதிராக, மோடி, அமித்ஷாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை ஊடகங்களில் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.  இதற்கான இரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பழனிசாமிக்கு நேரடி மிரட்டல் – துக்ளக் இரமேஷ்

துக்ளக் ரமேஷ்
துக்ளக் ரமேஷ்

இதனைத் தொடர்ந்து, துக்ளக் இரமேஷ் மிரட்டல் தொனியில் பேசும்போது, ‘இவ்வளவு பேசும் எடப்பாடிக்குச் சவால் விடுகிறேன். பாஜகவோடு இனி கூட்டணி கிடையாது என்று அறிவிக்க திராணி உள்ளதா? அறிவித்து எடப்பாடி அதிமுகவை நடத்திடமுடியுமா? எடப்பாடி உட்பட அவரின் பல முன்னணித் தலைவர்கள் ஜெயிலில் இருந்து கொண்டுதான் தேர்தலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யமுடியும் என்ற நிலை ஏற்படும்” என்று வெளிப்படையாகவே மிரட்டினார். அதற்கு பதில் சொன்ன அதிமுக சார்பாளர்,“அதிமுக பாஜகவோடு கூட்டணி உறவை முறித்துக்கொள்ளாது. பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகினால் எடப்பாடி மகிழ்ச்சியடைவார். அதிமுக வெற்றியை நோக்கி வீறுநடை போடத் தொடங்கிவிடும்” என்று கொட்டைப்பாக்கு என்ன விலை என்றால் பட்டுக்கோட்டைக்கு வழி சொன்ன கதையாக பேசினார். எடப்பாடி கூட்டணியை முறித்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் பாஜக எடப்பாடியை தங்கள் வழிக்குக் கொண்டு வர ஆடிட்டர் குருமூர்த்தியும் துக்ளக் இரமேஷ் – இருவரும் இணைந்து ஒரு மொக திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

பழனிசாசியும் அக்னிபரீட்சையும்

தமிழகத்தில் திடீர் இடைத்தேர்தல் ! எடப்பாடிக்கு வைக்கும் பாஜக அக்னிப்பரீட்சை
 எடப்பாடிக்கு வைக்கும் பாஜக அக்னிப்பரீட்சை

அது என்னவெனில், பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தை ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வைப்பது. சட்டமன்றத்தில் உறுப்பினர் இடம் காலியானவுடன் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்தத் தேர்தலில் பன்னீர் அணி பாஜக ஆதரவோடு போட்டியிடுவது. எடப்பாடி அணி பாஜகவை எதிர்த்து தனித்துப் போட்டியிடுமா? என்பது தெளிவாகிவிடும். தனித்துப்போட்டியிட்டால் ‘இரட்டை இலை’ சின்னத்தை யாருக்கும் தரமால் முடக்குவது. பன்னீர் அணி வேட்பாளரைத் தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பது. எடப்பாடிக்கு அறிமுகம் இல்லாத சுயேட்சை சின்னத்தை வழங்குவது. எடப்பாடி திமுகவை வெற்றிக் கொள்ளுவாரா? பாஜக+பன்னீர் அணியைவிட அதிகம் வாக்கு வாங்குவரா? என்பதை வெளிப்படையாக தெரிந்துகொள்ள, இந்த மிரட்டல் அக்னிபரீட்சை எடப்பாடிக்கு பாஜக வைக்கிறது. தேர்தல் மூலம் எடப்பாடியைச் செயல்படமுடியாமல் முடக்கி வைப்பது. மீறி செயல்பட்டால் எடப்பாடி முதற்கொண்டு மற்ற அனைத்து முன்னணி தலைவர்கள் வீட்டிலும் மத்திய வருமானவரி புலனாய்வு கோடிக்கணக்கில் கருப்புபணம் கைப்பற்றப்பற்றியது என்ற அறிக்கையைக்கூட தயார் செய்துவிட்டதாக பாஜக வட்டாராம் பத்திரிக்கைகளுக்குச் செய்தியைக் கசியவிடுகின்றது.

தை பிறந்தால்……

பாஜக வைக்கும் அக்னிபரீட்சையில் எடப்பாடி எப்படியும் தேறிவிடுவரா? அல்லது பரீட்சையைக் கண்டு பதறி ஓடிவிடுவாரா? என்பது என்பதெல்லாம் தை பிறந்தால் தெரிந்துவிடும் என்கிறார்கள் அரசியல் ஜோதிடர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்களே அது இதுதானோ………?

– ஆசைதம்பி 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.