பேரன்பின் அரசர்கள் ! போற்றுதலுக்குரியவர்கள் !
திருச்சி – தஞ்சை சாலையில் அமைந்திருந்த அந்த மண்டபம் ஒன்றில், பல்வேறு பள்ளிகளின் சீருடைகளை அணிந்த மாணவ – மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே கடந்த கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள். மாநிலத்தில் முதல் இடம், மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தவர்கள் அல்ல அவர்கள். வறுமையிலும் ஏழ்மையிலும் மனம் தளராது படித்து, 400 க்கும் மேலாக கௌரவமான மதிப்பெண்களை பெற்றவர்கள்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில், தரைக்கடை முதல் தள்ளுவண்டி வரையில் வியாபாரம் செய்யும் அன்றாடங்காய்ச்சி மற்றும் கூலித் தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகள். சினிமா பட புரோமோஷன் பாணியில், அரசியல் புரோமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா அல்ல. அவர்களது கல்வித் தேடலை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் நோக்கில், எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்ட விழா அது.
இவ்விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 60 பேருக்கும் தலா, 10,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்கள். முன்னுதாரணமான சிறந்த முன்னெடுப்பு என்பதாலேயே, நெருக்கடியான பணிச்சூழல்களுக்கு மத்தியிலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து சென்றிருக்கிறார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழுத் தலைவருமான மு.மதிவாணன், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில், தனரெத்தினம் (RV) மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்வை நிகழ்த்திக்காட்டியவர், எம்.கே.எம் காதர் மைதீன்.
சங்கத் தலைவர் யு.எஸ்.கருப்பையா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மார்க்கெட் பகுதி திமுக செயலாளர் ஆர் ஜி பாபு, ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம்,சங்க ஆலோசகர்கள் பி.கே.எஸ் அப்துல் மலிக் கே.டி.தங்கராஜ், மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள், சங்க அலுவலர் கே.நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலர், திருச்சி காந்திமார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை & நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் செயலர், திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர், திருச்சி பழவணிகர்கள் நலச்சங்கத்தின் ஆலோசகர் என நீள்கிறது, இவ்விழா நாயகன் எம்.கே.எம் காதர் மைதீன் வகிக்கும் பொறுப்புகளின் பட்டியல்.
இன்று நேற்றல்ல, கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக சமூகப்பணி ஆற்றிவருகிறார், எம்.கே.எம் காதர் மைதீன். வருடந்தோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களின் போது, திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அரசியல்வாதிகள், அதிகாரிகளிகளை அழைத்து விழா நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும் குறைந்தது ஆயிரம் பேருக்காவது அன்னதானம் செய்துவிடுவார். காந்தி மார்க்கெட்டை நம்பி வாழும், கூலித்தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சங்கத்தின் சார்பில் விழாவை முன்னெடுத்தாலும், சங்கத்தின் பணத்தை கொண்டு அந்த விழாவை நடத்தாமல், சங்க நிர்வாகளிடம் தனிப்பட்ட முறையில் நன்கொடைகளை பெற்று விழாவை நடத்துகிறார் என்பதுதான் ஹைலைட். சங்கத்தில் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கும் சந்தா தொகையை, அப்படியே அவர்களின் கணக்கில் வரவு வைத்து அத்தொகையிலிருந்து இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்க நாணயமாக திருப்பிக் கொடுப்பதையும் தவறாமல் செய்து வருகிறார்.
பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவிகள் 60 பேருக்கும் தலா 10,000 வழங்கியதோடு, வந்திருந்த எல்லோருக்குமே மனதார அறுசுவை விருந்து வைத்து மகிழ்வோடும் மனநிறைவோடும் அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
“எட்டுப் பேருடன் பிறந்தவன். நான் எட்டாம் வகுப்பு வரையில்தான் படித்திருக்கிறேன். என் குடும்பத்தார்கள் அனைவருமே, இந்த காந்தி மார்க்கெட்டை சார்ந்துதான் தொழில் செய்து வருகிறார்கள். வறுமையால் கல்வி தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த முயற்சி. மற்றபடி, விளம்பரம் எல்லாம் வேண்டாம்.” என்கிறார், எம்.கே.எம் காதர் மைதீன்.
பத்து ரூபாய் உதவிக்கு நூறு ரூபாய் விளம்பரம் செய்யும் இந்த காலத்தில், வலது கரம் கொடுப்பது இடது கரத்துக்கு தெரியக்கூடாது என்ற நியதியின்படி, ஓசையின்றி பொதுச்சேவை- கல்விச்சேவையாற்றி வரும் எம்.கே.எம் காதர் மைதீன் போன்றோர்கள் பேரன்பின் அரசர்கள் ! போற்றுதலுக்குரியவர்கள் !
— ரூபன்ஜி.