சில்லறைப் பிரச்சினைகளுக்கு விடி(யல்)வு காலம்!
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மின்னணு பரிவர்த்தனையில் பயணச்சீட்டுகளைப் பெறும் முறை, தற்போது பரவலாக்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. பயணிகளும் – பேருந்து நடத்துனர்களும் பரஸ்பரம் காலங்காலமாக அனுபவித்த, சில்லறைப் பிரச்சினைக்கும், அதனால் நிகழ்ந்த மன உளைச்சல்களுக்கும் உண்மையிலேயே விடிவு காலம் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். கொடுத்த பணத்திற்கான மீதி சில்லறையைத் திரும்ப வாங்க வேண்டுமே என, பயண நேரம் முடியும் வரை, உறக்கம் வந்தால் கூட தூங்காமல், பதற்றத்திலேயே கழிப்பது இனி இருக்காது.

வாங்கிய பயணச்சீட்டை எங்காவது வைத்து விட்டு, சோதனை அலுவலர் வரும் போது, தேடித்தர வேண்டிய மன அழுத்தமும் – பதற்றமும் மட்டுப்படும். திறன் பேசியைத் திறந்து கட்டணம் செலுத்தியதைக் காண்பித்துக் கொள்ளலாம்.
Bar code யை மொபைல் போன்களில் scan செய்வதில் சற்று சுணக்கம் ஏற்படுகிறது. பயணச் சீட்டு வழங்கும் கையடக்கப் பொறியின் திரையில் தோன்றும் பிம்பத்தை scan செய்யும் போது, வெளி ஒளி பிரதிபலிப்பால் சற்று தாமதமாகிறது, சில முறைகள் முயற்சிக்குப் பின்னரே பரிவர்த்தனை முழுமை பெற்று பயணச் சீட்டு அச்சாகி வெளிவருகிறது. இதன் காரணமாக ஏற்படும் கால தாமதத்தினைத் தவிர்க்க, அச்சிடப்பட்ட Bar Code படத்தை பேருந்துகளின் உட்புறப் பக்கவாட்டில் பல இடங்களில் ஒட்டி வைத்து, உரிய தொகையை செலுத்தி பயணச் சீட்டு வழங்கும் முறையை போக்குவரத்து நிர்வாகம் பரிசீலித்து நடைமுறைப் படுத்த முயற்சிக்கலாம்.
— வி.என்.சரவணன்