ஏரிகள் அழியும் ஆபாயம் ! ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர்!
ஏரிகள் முழுவதுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனைத்தடுத்து நிறுத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை …..
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திரளி மற்றும் மறவன்குளம் கிராமங்களில் உள்ள ஏரியின் மூலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்த நிலையில் சில மாதங்களாக திரளி மற்றும் மறவன்குளம் கிராமங்களில் உள்ள ஏரியை அழித்து சாலைகள் அமைப்பதற்காக கிராவல் மண் அள்ளப்படுவதாக கூறி தொடர்ந்து சட்ட விதிகளுக்கு மீறாக சுமார் 15 மீட்டர் ஆழத்திற்கு அதிகமாக கிராவல் மண் அள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏரிகள் முழுவதுமாக சேதம் அடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
மறவன்குளம் ஏரியில் 40 அடிக்கு மேலாக பள்ளங்கள் உருவாக்கப்பட்டு மணல் மற்றும் மண் அள்ளப்படுவதாகவும் ஏரியில் சாலைகளை அமைத்து கிராவல் மண் விதிமீறல்களோடு தள்ளப்படுவதாகவும் இதுகுறித்து உள்ளூர் மக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் துணையோடு விதிமீறல் நடைபெறுவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மேலும் திரளி ஏரியை அழித்தது போல தற்போது மறவன்குளம் ஏரியையும் அழிப்பதற்கான நடவடிக்கைகளில் இது போன்ற அமைப்புகள் ஈடுபடுவதால் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர். இதுகுறித்து பதிலளித்த மாவட்ட ஆட்சியர் சுரங்க துறை அதிகாரிகள் மூலமாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறினார்.
மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் திருமலைராஜ் …
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளம் கிராமத்தில் உள்ள ஏரியினை தொடர்ந்து மணல் அள்ளுவதாக கூறி விதிகளை மீறி அதிகளவிற்கு மணல்களை எடுப்பதால் அப்பகுதியில் உள்ள ஏரி முழுவதுமாக அழிந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளோம் ஏற்கனவே உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல் கூறிய நிலையிலும் அதனை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இருந்தபோதிலும் புதிதாக வந்துள்ள அரசு இதுபோன்ற ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : படங்கள்








Comments are closed, but trackbacks and pingbacks are open.