இரும்பு கடையில் தீ விபத்து ! 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் !
சாத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
சாத்தூர் அருகே படந்தாளை சேர்ந்தவர் சங்கரேஸ்வரமூர்த்தி (44). இவர் கடந்த 13 ஆண்டுகளாக சாத்தூர் தென்றல் நகர் பஸ் ஸ்டாப் அருகில் பழைய இரும்பு சாமான்கள் விற்பனைக்காக குடோன் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், அந்த குடோனில் நேற்று திடீரென தீ ஏற்பட்டது. இதனால் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் அட்டைகள் தீப்பிடித்து எரிந்தன. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் நிலவியது.
தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சாத்தூர்–படந்தாளை முக்கிய சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் இரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.