விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து 3 பேர் உடல் சிதறி பலி 5 பேர் படுகாயம் !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, M.புதுப்பட்டி, நெடுங்குளம் கிராமத்தில் நாக்பூர் லைசன்ஸ் பெற்று 80க்கும் மேற்பட்ட அறைகளுடன் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் ஸ்டாண்டர்ட் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்து வேலை நடந்து கொண்டிருக்கும்போது, சரியாக காலை 11 மணி அளவில் அறை எண் 14 பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது,
அப்போது திடீரென மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது, வெடி விபத்தில் பரவிய தீ அருகில் உள்ள மற்ற அறைகளுக்கும் பரவியதால் மேலும் 5 அறைகள் விபத்தில் தரைமட்டமானது,

உடனடியாக சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விபத்தில் M.சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த, கலைச்செல்வி (33), மாரியம்மாள் (58), கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த, திருவாய்மொழி (45) ஆகிய 3 நபர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
மேலும் காயமடைந்த கூமாபட்டியைச் சேர்ந்த, பாத்திமா (60), ரஃபியா (50), கோமதி(55), M.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (55), முனியம்மாள் (50) ஆகிய 5 நபர்களும் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களை உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகவும், அதே போல் காயம் அடைந்த 5 நபர்களையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் உறவினர்கள் கூட்டம் அதிக அளவில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர், சிவகாசி சார் ஆட்சியர், பிரியா ஆகியோர், விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக M.புதுப்பட்டி காவல்துறையினர் பட்டாசு ஆலை போர்மேன் சுப்புராஜ் மேனேஜர் ராஜேஷ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
— மாரீஸ்வரன்.