உணவும் உரிமையும் !
மரக்கறி உணவாளர்களை அவர்கள் உண்ணும் உணவை வைத்து பகடி செய்யலாமா?
நான் எப்போதும் கூறுவது போல நமது மக்களின் உணவு சார்ந்த விஷயத்தில் முக்கியமான வகைகள் இவை
அனைத்துண்ணிகள் (OMNIVORES)
இவர்கள் காய்கறிகளும் சாப்பிடுவார்கள் கூடவே மாமிசம்/மீன்/முட்டையும் தானியங்களும் பழங்களும் உட்கொள்வார்கள்
மரக்கறி + பால் பொருட்கள் சாப்பிடுபவர்கள் ( LACTO VEGETARIANS)
இவர்கள் தானியங்கள் + காய்கறிகள் + பழங்கள் இவற்றுடன் பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வார்கள். இவர்களை சைவம் என்று அழைக்கிறோம்.
எனினும் சைவ சமயம் வைணவ சமயம் கடைபிடிப்பவர்களை அவ்வாறு அழைப்பதே முறை என்பதால், சரியாக உணவு சார்ந்து இவர்களை , மரக்கறி மற்றும் பால் பொருட்கள் உட்கொள்பவர்கள் எனலாம்.
மேற்கூறிய இரண்டும் தான் பிரதானம், இவையன்றி
- மரக்கறி + பால் + முட்டை உட்கொள்பவர்கள் (OVO LACTO VEGETARIANS)
- மரக்கறி + பால் + முட்டை + மீன் ( OVO LACTO PESCATO VEGETARIANS)
- மரக்கறி மட்டும் உண்பவர்கள் ( VEGANS)
- மாமிசம் மட்டும் உண்பவர்கள் (CARNIVORES)
- பழங்கள் மட்டும் உண்பவர்கள் (FRUITARIANS)
இப்படியாக உணவு சார்ந்து அவரவர் விருப்பம் போல மக்கள் இருக்கிறார்கள்
இதில்,
மரக்கறி + பால் பொருட்கள் உண்பவர்கள்ஸ்ரீ அதாவது “சைவ” உணவாளர்கள் வெஜிடேரியன்களுக்கும் நான் வெஜிடேரியன்களுக்கும் தான் அவ்வப்போது லடாய் வருகிறது.
இதில் இரண்டு பேருமே ஒவ்வொருத்தரை அருவருப்பதும் இழிவு செய்வதும் இதை வைத்து கோஷ்டி சேருவதும் உண்டு.
என்னைக் கேட்டால் இது தேவையற்ற ஒன்று.
வெஜிடேரியன்களில் மூன்று வகை உண்டு
ஒன்று பிறப்பால் வெஜிடேரியன்கள்
இவர்கள் பிறந்ததில் இருந்து தான் சார்ந்த சமயம்/இனம் சார்ந்து அதைக் கடைபிடிக்கிறார்கள். இந்த வகை LACTO VEGETARIANS BY BIRTH
இரண்டாவது தனது விருப்பால் தேர்ந்தெடுப்பது- ஜீவ காருண்யம்/ வள்ளலார் வழி / இன்னும் மாமிச உணவுகள் ஒவ்வாமை தருவது / பிடிக்காமல் போவது/ குடும்பத்தில் மாமிச உணவை வலியுறுத்தாமல் போனது/ வறுமை / படித்த பள்ளி/ ஹாஸ்டல் / வேலை செய்யும் இடம் ஆகியவற்றினால் இதைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
இன்னும் பலர், வாரத்தின் சில நாட்கள் சமயம் சார்ந்த விரதம் இருக்கும் போது முழு சைவமாக இருப்பார்கள்.
இந்த வகை “LACTO VEGETARIAN BY CHOICE”
மூன்றாவது வகை
தங்களுக்கு இருக்கும் நோய்கள் குறிப்பாக சிறுநீரக நோய்/ கல்லீரல் நோய் போன்ற காரணங்களால் வெஜிடேரியன்களாக மாறி இருப்பார்கள். இவர்கள் “LACTO VEGETARIAN DUE TO A CAUSE”
என்னைப் பொருத்தவரை உணவு சார்ந்த தேர்வு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எனவே என்னைச் சந்திக்க வருபவர்களிடத்தில் நான் பாகுபாடுகள் பார்ப்பதில்லை.
அவரவர் தேர்வை மதித்து தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காமல் நோயரின் தேர்வை மதித்து நடக்கவே முயற்சி செய்கிறேன்.
இதற்குக் காரணம் உணவு என்பது உணர்வுடன் தொடர்பானதாகும்.
ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு உணர்வைத் தூண்டும் சக்தி பெற்றது.
எனவே ஒருவரின் உணவைப் பகடி செய்வது என்பது அவரது உணர்வுடன் விளையாடுவதாகும்.
இது மாமிசம் உண்பவர்களுக்கும் மரக்கறி உண்பவர்கள் இருவருக்குமே பொருந்தும்.
மாமிசம் உணவாளர்களை மரக்கறி உணவாளர்கள், இவர்கள் ஏதோ வேண்டாத ஒவ்வாத செயலைச் செய்வதாக எண்ணி அருவறுத்தால் அது எத்தனை தவறோ அதே அளவு தவறு, மரக்கறி உணவாளர்களை அனைத்துண்ணிகள், எப்படித்தான் இதெல்லாம் சாப்புடுறாங்களோ என்று பகடி செய்வதும் இதே போலத்தான்.
நாம் உண்ணாத பூச்சிகளை, நாம் உண்ணாத விலங்குகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை உண்ணும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களைப் பார்த்து நாம் அருவருப்பதும் தவறு.
நாம் அந்த நாட்டில் பிறந்திருந்தால் நாமும் அந்த உணவை ருசியோடு சாப்பிட்டுக் கொண்டிருப்போம் என்ற தெளிவு இருந்தாலே இது போன்ற எண்ணங்கள் மறைந்து விடும்.
ஒருவர் பிறந்த சமயம் / இனம் ஆகியவற்றை நாம் மதிக்கத் தான் வேண்டும்.
அதை மதித்தால் தான் அவரது நம்பிக்கைகளை நாம் மதிக்க முடியும்.
வேற்றுமையைக் களைகிறேன் பேர்வழி என்று அனைவரையும் ஒன்றாக ஆக்குகிறேன் என்று சமய நம்பிக்கைகள் மரபு சார்ந்த வழக்கங்கள் ஆகியவற்றை பகடிக்குள்ளாக்கி அவர்களது கர்வத்துக்கு இழுக்கு நேர்ந்தால் எந்த ஆரோக்கியமான முன்னேற்றமும் ஏற்படாது.
அதை விடுத்து மருத்துவ அறிவியல் இரண்டு உணவு முறை குறித்தும் என்ன கூறுகிறது என்பதை நடுநிலையுடன் பேச வேண்டும். எழுத வேண்டும்.
என்னைப் பொருத்தவரை என்னை சந்திக்கும் மரக்கறி+ பால் பொருட்கள் உண்ணும் வெஜிடேரியன்களுக்கு தினசரி அவர்களது புரதச்சத்து/ கொழுப்புச் சத்துக் கணக்கை சரியாக அடைவது குறித்து கருத்து வழங்குவேன்.
– கொட்டை வகைகள்
– நிலக்கடலை
– பயறு / பருப்பு
– பால்
– பனீர்
– சோயா / டோஃபு
– நெய் / வெண்ணெய்
– தேங்காய் எண்ணெய்
என்று அவர்களது உணவில் கட்டாயம் இருக்குமாறு உணவை வழங்குவேன்.
ஒருவேளை அவர்களாகவே முட்டைகள் சாப்பிட முன்வந்தால், அதை ஆதரித்து அவர்களது உணவில் முட்டைகள் சேர்ப்பேன்.
புரதச்சத்தை இயன்ற அளவு உணவின் மூலம் அவர்களுக்கு கிடைக்கவே வலியுறுத்துவேன். இதையும் மீறி புரதப் பற்றாக்குறை ஏற்படும் போது அவர்களுக்கு புரதச்சத்து பொடி (WHEY PROTEIN ISOLATE) ஓரிரண்டு ஸ்கூப் எடுத்துக் கொள்ளக் கூறுவேன். எனினும் ப்ராண்ட் குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளச் சொல்வேன். காஸ்ட்லி தான். ஆனாலும் புரதச்சத்து முக்கியமன்றோ. மாவுச்சத்தைக் குறைக்கக் கூறுவேன்.
சீனி உள்ளிட்ட இனிப்பு சுவை கொண்டவற்றை விலக்கி வைக்கவும். நார்ச்சத்துள்ள காய்கறிகள் / பழங்கள் சாப்பிடவும் வலியுறுத்துவேன்.
விட்டமின் பி12 அவ்வப்போது பரிசோதனை செய்து , தேவைப்பட்டால் சப்ளிமெண்ட்ஸ் சேர்த்துக் கொள்ளப் பரிந்துரைப்பேன்
வெறுமனே காலை – இட்லி / தோசை
மதியம் – சோறு
இரவு – சப்பாத்தி / தோசை / இட்லி
நடுவே பேக்கரி ஸ்நாக்ஸ்/ பப்ஸ்/ வடை பஜ்ஜி / இனிப்பு போட்ட டீ காபி என்று இருக்கும் போது
தானியங்கள் சார்ந்து வாழ்க்கை இருக்கிறது.
இதனால் முக்கியமான உடலால் உருவாக்க இயலாத அமினோ அமிலங்கள் கிடைக்காமல் போகும்.
எனவே தானியங்களின் அளவைக் குறைத்துக் கொண்டு அதனுடன் பயறு வகைகள், பருப்பு வகைகள், கொட்டைகள், பால் பொருட்கள், சோயா என்று கலந்து கட்டி உண்ணும் போது அமினோ அமிலங்களின் தேவையை உணவின் மூலமே நல்ல முறையில் அடைய முடியும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வுகள் கூறுகின்றன.
எனினும், இது குறித்த தெளிவும் விழிப்புணர்வும் மரக்கறி+ பால் உண்ணும் லேக்டோ வெஜிடேரியன்களுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும்.
தினசரி உங்களின் எடைக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் புரதச்சத்தாவது கட்டாயம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.
தினசரி 60 கிராம் கொழுப்புச் சத்தாவது கிடைப்பதை உறுதி செய்யவும்.
இவற்றை உறுதி செய்யும் மாடல் டயட் சார்ட்
இதோ உங்களுக்காக
( எந்த நோய்களும் இல்லாதவர்கள் முயற்சி செய்யலாம்.
நீரிழிவு / ரத்தக் கொதிப்பு / இதய நோய் கல்லீரல் நோய் இருப்பவர்கள் தங்களின் மருத்துவர் பரிந்துரைப்படி உணவு முறை கடைபிடிக்க வேண்டும்)
காலை – 45 நிமிட வாக்கிங்
காலை உணவு
150 மில்லி பால் + 20 கிராம் வெண்ணெய்
+ காபி/ டீ ( கட்டாயம் இனிப்பு சிறிதளவும் போடக்கூடாது)
+ 50-100 கிராம் அவித்த நிலக்கடலை ( வாரம் மூன்று நாட்கள் ) /
50-100 கிராம் அவித்த சுண்டல் ( வாரம் இரண்டு நாட்கள்) / 50-100 கிராம் ஊறவைத்த / வணக்கிய பாதாம் ( வாரம் இரண்டு நாட்கள்)
அல்லது
2 இட்லி/ 2 கல்தோசை + 50-100 கிராம் அவித்த நிலக்கடலை ( வாரம் மூன்று நாட்கள் ) /
50-100 கிராம் அவித்த சுண்டல்
( வாரம் இரண்டு நாட்கள்) / 50-100 கிராம் ஊறவைத்த / வணக்கிய பாதாம் ( வாரம் இரண்டு நாட்கள்)
ஸ்நாக்ஸ் 100 கிராம் கொய்யாகாய் + ப்ளாக் டீ ( நோ சுகர்)
மதிய உணவு
100 கிராம் சோறு ( சமைக்கப்பட்ட பின் எடை) + 150 கிராம் நார்ச்சத்துள்ள காய்கறிகள் + 50 கிராம் பயறு / பருப்பு + 10 மில்லி நெய்
மாலை
100 கிராம் வெள்ளரிக்காய் + 100 மில்லி பால் டீ ( நோ சுகர்)
இரவு உணவு
2 இட்லி/ 2 கல்தோசை / 2 சப்பாத்தி + 100 கிராம் பனீர் கிரேவி ( வாரம் நான்கு நாட்கள் / 100 கிராம் சோயா வாரம் மூன்று நாட்கள் )
முட்டைகள் சேர்த்துக் கொள்வீர்கள் என்றால்
மதியம் ஒரு முட்டை
இரவு ஒரு முட்டை சேர்க்கலாம்.
இரும்புச்சத்துக்கு முருங்கைக் கீரை, சுண்டக்காய், பழைய சோறு, தாமரைத் தண்டு வத்தல் ஆகியவற்றை சாப்பிட்டு வரலாம்.

இனப்பெருக்க பருவ மகளிர் கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் சப்ளிமெண்ட் மருத்துவர் பரிந்துரையில் உட்கொள்ளலாம்.
இவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்கூப் வே ப்ரோட்டீன் ஐசொலேட் அவரவர் விருப்பத்தின் பேரில் உட்கொள்ளலாம் . ஒரு ஸ்கூப் மூலம் 25 கிராம் புரதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னைப் பொருத்தமட்டில் அவரவர் உணவு அவரவர் தேர்வு உணவு சார்ந்த மருத்துவ அறிவியலைக் கூறுவது எனது தலையாய பணி
அதைத் தொடர்ந்து செய்வேன்.
ஒருவர் உண்ணும் உணவை வைத்து மேன்மைப்படுத்தவோ கீழ்மைப்படுத்தவோ மாட்டேன்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.